தண்டலம், தடுத்தாலீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் காமாட்சியம்மன் சமேத தடுத்தாலீஸ்வரர் திருக்கோவில் தண்டலம் கிராமத்தில் உள்ளது. சென்ன திருவள்ளூர் நெடுஞ்சாலையில், செவ்வாய்ப்பேட்டையில் இடது பக்கமாக சென்றால், 5 கி.மீ தொலைவில் இடது பக்கத்தில் இக்கோவில் உள்ளது.
இறைவன் : தடுத்தாலீஸ்வரர், தீண்டாத்திருமேனீஸ்வரர்
இறைவி : காமாட்சியம்மன்
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : இக்கோவில் உள்ளே சிவலிங்கம் “தீண்டாத்திருமேனீஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மூலவர் காமாட்சி அம்மனின் மூலவிக்ரகத்தில் தாலி இயற்கையாகவே அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பு. இங்கு மூலவராகவும், கோஷ்ட மூர்த்தியாகவும் இருகோணத்தில் அம்பாள் உறைகிறாள்.
தற்சமயம் இக்கோவில் இக்கிராமத்தில் உள்ள சில குடும்பங்களின் கூட்டு முயற்சியால் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோவில் 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவ்வாலயத்தில் சித்தர் ஒருவர் சமாதியானதாக ஒரு செவிவழிச் செய்தி நிலவுகிறது. சித்தர் ஒருவர் சமாதியான இடத்திலும் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுவற்றின் மேல் கூரையில் ஜோடிமீன் ஆமை பாம்புகள் என தோஷம் நீக்கும் மேல்தளமாக அமைந்துள்ளது. பொதுவாக சித்தர் சமாதியின் மீது கோவிலைக் கட்டுகிறர்கள் என்று கருத்து பலம்னாக நிலவுவதால் இக்கருத்து தோன்றியிருக்கலாம். அதன் மேல் இந்த லிங்கம் அமைந்துள்ளதால் இவ்வாலய இறைவனை யாரும் தொடுவதில்லை. காலப்போக்கில் தீண்டாத் திருமேனீஸ்வரர் என்ற நாமத்துடன் அழைக்கப்படுவதாக வரலாறு கூறுகிறது. இப்படி ஒரு இணைதளம் குறிப்பிட்டாலும், அதில் குறிப்பிட்ட “வரலாறு” என்னவென்று குறிப்பிடவில்லை.
இயற்கையாகவே இவ்வாலய அம்மனுக்குத் தாலி பொறிக்கப்பட்டுள்ளதால் கல்யாணத் தடை நீக்கும் தலமாக உள்ளது. கல்யாணத் தடை உள்ளவர்கள் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிறு வைத்து ஒரு மண்டலம் பூஜை செய்தால் ஒரு ஆண்டுக்குள் திருமணம் நடைபெறுகிறது. இதற்கும் எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. திருமணத்திற்கான மஞ்சள் கயிறும், மஞ்சள் கிழங்கும் ஆலயத்திலேயே கொடுக்கப்படுகின்றன. திருமணம் முடிந்த ஒரு ஆண்டில் அதே அம்மனுக்கு மாங்கல்யம் சாற்றுவது விசேஷம்.
இவ்வாலயம் வள்ளி வழிபட்ட திருத்தலம். முருகப் பெருமானுக்காக வள்ளி காத்திருந்து தவம் செய்தும் முருகன் வராததால் உயிர்த்தியாகம் செய்வதற்காக அக்னியை மூட்டி அதில் உயிர்த்தியாகம் செய்ய முயற்சித்த தருணத்தில் சிவபிரான் தடுத்து தன் மகனை வள்ளியின் மணாளனாக ஆக்கியதால் இவ்வாலய இறைவனுக்கு தடுத்தாலீஸ்வரர் என்ற திருநாமம் உண்டாயிற்று. இதற்கு அடையாளமாக இவ்வாலயம் வழியாக திருத்தணிக்குப் பாதையுள்ளது. வள்ளியை மணம் புரிந்ததால் கல்யாண சுப்பிரமண்யராக இக்கோயிலில் முருகன் காட்சி தருகிறார். இவ்வாலய இறைவனுக்கு நெய் அபிஷேகமும், விபூதி அபிஷேகமுமே விஷேசமானது. பவுர்ணமியன்று நோய் நிவாரண பூஜையாக விபூதி அபிஷேகம் செய்து அதே விபூதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : செவ்வாய்ப்பேட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு