பூவரசன்குப்பம், நாகேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூரிலுருந்து 7 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. புதுவை மற்றும் கடலூரில் இருந்து மடுகரை வந்தால் அங்கிருந்து 4 கி.மீ தொலைவில் சன்னதியை அடையலாம்.
இறைவன் : நாகேஸ்வரர்
தலமரம் : வன்னிமரம்
தலச் சிறப்புகள் : இத்திருக்கோயில் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பது பெரும் சிறப்பு. ஜாதகத்தில் ராகு, கேதுவால் ஏற்படும்காளசர்ப்பதோஷம் இங்கு தரிசிக்க விலகும். இங்குள்ள நாகேஸ்வரர் நடுநாட்டு நாகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
தல வரலாறு : பல்லவ மன்னன் சிம்மவர்மன் பல கோயில்களைக் கட்டினான். இதற்காக காடுகளை சீர் செய்த போது புற்றுகள் பல இடிக்கப்பட்டு பாம்புகள் கொல்லப்பட்டன. இதனால் அவனுக்கு நாகதோஷம் ஏற்பட்டது. அவனும், குடும்பத்தாரும் பல கஷ்டங்களை அனுபவித்தனர். தென்பெண்ணை நதிக்கரையில் தவமிருந்த சிவஹரி என்ற முனிவரைச் சந்தித்து பரிகாரம் கேட்ட போது, ‘‘மன்னா நீ ஒரு கோயில் திருப்பணி செய்த போது, உயிர்களைக் கொல்வது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அதற்காக உனது செயலை சரி என்று கூற முடியாது. ஏழைகளுக்கு பாம்பு தோஷம் வந்தால், அவர்கள் கோயில்களிலுள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் போதும்.
முனிவர் பூவரசன்குப்பம் என்ற ஊரில் ஈசான மூலையில் ஒருபுற்று இருப்பதாவும், புற்றுக்குள் சுயம்புவாக ஒரு சிவலிங்கம் இருப்பதாகவும், அதனை ஒரு நாகம் பூஜித்து வருவதாகவும், நீ அங்குசென்று நாகத்தை வழிபட்டு, சிவலிங்கத்தை வெளியில் எடுத்து அதற்கு கருங்கல்லால் ஆலயம் கட்டி குடமுழுக்கு செய்தால் உனக்கும், உன் சந்ததிக்கும் நாக தோஷங்கள் நீங்கும் என்றுரைத்தார். அம்மன்னனும் முனிவர் கூறியபடியே ஆலயம் எழுப்பி, ஆலயத்திற்கு நாகேஸ்வரர் என்று பெயர்சூட்டி குடமுழுக்கு செய்தான். அன்று இரவே நாகம் சிவலிங்கத்தை சுற்றிக்கொண்டு காட்சி தந்தது. இத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் இந்த கோயிலில் ஒரு நாகம் இன்று வரை குடிகொண்டுள்ளது. அந்த நாகம் யாருக்கும் தீங்கு செய்வதில்லை.
சிம்மவர்மனும் சிலையை தோண்டி எடுத்து கோயில் கட்டினார். இக்கோயிலுடன் சேர்த்து 108 சிவாலயங்கள், 108 பெருமாள் கோயில்களைக் கட்டி அத்தனைக்கும் சிவஹரி முனிவரைக் கொண்டு கும்பாபிஷேகம் நடத்தினார். கும்பாபிஷேகத்தன்று சிவலிங்கத்தைப் பாதுகாத்து வந்த நாகம், லிங்கத்தை சுற்றிக் கொண்டு காட்சியளித்தது. அதன்பின் மன்னரது கஷ்டம் அனைத்தும் மறைந்தன. தன்னைப் போல் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கும் நாகதோஷம் விலக வேண்டுமென முனிவரிடம் மன்னன் வேண்டுகோள் விடுத்தார். முனிவரும் அவ்வாறு ஆசி வழங்கினார்.
கோவில் அமைப்பு : இந்த கோயிலில் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மஹா மண்டபம், சுற்று மதில்சுவர் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மதிற் சுவர் தவிர்த்து அனைத்தும் கருங்கற்களாலே அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபைரவர், நாகதேவதை, செந்தூரகணபதி, ராகு கேது பகவான் சன்னதி, நவகிரகங்கள் சன்னதி, சண்முகநாதர் சன்னதி ஆகியவை அமையப்பெற்றுள்ளது. கோயில் பிராகாரத்தில் நாகராஜர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. ஊரின் ஈசான்ய மூலையில் இக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் 1964ம் ஆண்டு நடைபெற்றதாகவும், அதனைத்தொடர்ந்து 1999ம் ஆண்டு திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெற்று, மூலவர் மற்றும் இதர சன்னதிகள் மறு வேலைப்பாடு செய்யப்பட்டு 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வருடாந்திர திருவிழாக்கள் ஒவ்வொரு தமிழ்மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை ராகு கேது பரிகாரம், மஹா சண்டியாகம், லட்சார்ச்சனை நடைபெறுகின்றது.மகா சிவராத்திரியன்று அன்னாபிஷேகம், உத்திராயண புண்ணியகாலத்தில் தை மாதத்தில் ஆற்றுதிருவிழா தீர்த்தவாரி சுவாமி வீதி உலா நடைபெறுகின்றது. திருமணத்துக்காக காத்திருக்கும் பல வரன்களுக்கு நாகதோஷத்தால் திருமண தடைபடலாம். இதற்கு பரிகாரமாக திருநாகேஸ்வரம், கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கீழப்பெரும்பள்ளம், நாகர்கோவில், சங்கரன்கோவில் என பாம்புக்கோயில்கள் பல உள்ளன. இங்கு பாலாபிஷேகம் அல்லது நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் போதும். நாகதோஷம் போக்கும் மற்றொரு தலமான பூவரசன்குப்பம் நாகேஸ்வரரை வழிபட்டாலும் தோஷம் நீங்கும். ராகு கேது பரிகாரத்தில் கலந்து கொண்டு பயன்பெற்றவர்கள் கோயிலுக்கு வந்து தங்களால் இயன்றதை செய்வதோடு, மற்றவர்களுக்கும் தோஷ நிவர்த்தி குறித்து கூறிவருகின்றனர். அதனால் இத்திருக்கோயில் ராகுகேது தோஷநிவர்த்தி தலமாக விளங்கி வருகின்றது.
காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : விழுப்புரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை