கணிசப்பாக்கம், கணிச்சபுரீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் கணிச்சப்பாக்கத்தில் உள்ளது. மினிபேருந்து வசதி உண்டு. ஆட்டோவிலும் செல்லலாம்.
இறைவன் : கணீஸ்வர பெருமான், கணிச்சபுரீஸ்வரர், கணிச்சநாதர்
இறைவி : பெரியநாயகி
தல விருட்சம் : வேங்கை மரம்
தல வரலாறு : பண்ருட்டி அருகே பாக்கம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கர் என்ற பெயருடைய பிரபலமான ஜோதிடர் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அருகில் உள்ள சித்தர்சாவடியில் இருந்து சித்தர்கள் 5 பேர் ஜோதிடம் பார்க்க வேண்டுமென ஓலைச்சுவடி கட்டுகளுடன் வந்தனர். ஜாதக கட்டை வாங்கிப்பார்த்த கணிக்கர் சுவாமி, தங்களுக்கு திருமணம் நடந்து விட்டது, 2 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கூற சித்தர்கள் நம்பவில்லை. பின்னர் வீரசித்தர் பொன், பொருள் தருவதாக கூறியும் கணிக்கர் மாற்றிக்கூறவில்லை. தொடர்ந்து சித்தர்கள் அந்த ஓலைச்சுவடியை சிவனின் முன்பு வைத்துபின்னர் பிரித்துப்பார் என்று கூறினர். அவ்வாறே ஓலைச்சுவடியை வாங்கி சிவலிங்கத்தின் முன்பு வைத்து கணிக்கர் கண்மூடி வணங்கினார்.
கண்திறந்து பார்த்தபோது ஜாதக குறிப்புகள் மறைந்து போயிருந்தன. அதற்கு பதிலாக திருவதிகை வீரட்டானமுடைய மகாதேவர் என்று ஒவ்வொரு சுவடியிலும் இருந்தது. வெளியே வந்து பார்த்தபோது சித்தர்களையும் காணவில்லை. கீழே கிடந்த ஓலை சுவடியில் திருவதிகை வீரட்டானமுடைய மகாதேவர் என்றே இருந்தது. எதிரே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் அம்மையாராக காட்சியளித்தார். அப்போது சிவபெருமான் உமக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். அதற்கு கணிக்கர், தங்கள் திருவடியில் ஜாதகத்தை வைத்து வணங்கி செல்வோருக்கு, நன்மைகளை தந்தருள வேண்டும் என்று கேட்டார். உடனே சிவபெருமான் கணிக்கரிடம், இனி இவ்வூர் உன்பெயரால் கணிச்சப்பாக்கம் எனும் கணிச்சபுரி என்றும் விளங்கும். உன் ஜாதக கணிப்பில் நீ மென்மேலும் புகழ்பெற்று அடைவாய் என்று கூறி இறைவன் மறைந்தார்.
கோவில் அமைப்பு : மன்னர் ஒருவரின் முயற்சியால் கணீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்டது. விநாயகர் கலிதீர்த்த விநாயகர் எனவும், முருகன் வெற்றிவேல் முருகன் எனவும், சண்டிகேஸ்வரர் கலியுக சண்டேசர் என்றும் அழைக்கப்படுகின்றனர். தற்போது சுயம்புவாக தோன்றிய வேம்புமரம் உள்ளது. அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு இடதுபுறம் தனிக்கோயிலில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அதன் எதிரே சிறிய நந்தி உள்ளது. மண்டபத்தின் தென்கிழக்கே சூரியபகவானும், வடகிழக்கே சந்திர பகவானும் அருள்பாலிக்கின்றனர். வடகிழக்கே தனி மண்டபத்தில் நவகிரகங்கள் உள்ளன. அருகில் பைரவர் சன்னதியும் உள்ளது.
கருவறையின் தென்புற சுவற்றில் அசுரனை வதம் செய்யும் தட்சிணாமூர்த்தி சுதை சிற்பமும், கீழே கருங்கல் சிலையும் உள்ளது. கோபுரத்தின் பின்புறத்தில் கையில் சங்கு சக்கரத்துடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். வடக்குப்புறத்தில் பிரம்மனும், அருகில் தனி சன்னதியில் சண்டிகேஸ்வரரும், எதிரே துர்க்கையும் அருட்கோலத்தில் காட்சியளிக்கின்றனர். கருவறையின் பின்புறமுள்ள வேப்பமரத்தின் அடியில் கடவுளர்கள் சிலைகளும் நாகவடிவ சிலையும் உள்ளது. இது 8, 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு பிரசித்தி பெற்றிருந்தது. பல கல்வெட்டுகள் காலப்போக்கில் பகைவர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம். மிகப்பெரிய அளவில் கோயில் இருந்ததற்கான அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ராஜராஜசோழனின் மகன் முதலாம் ராஜேந்திரசோழன் இவ்வூரின் கிழக்கே பெரிய ஏரியை அமைத்துக் கொடுத்துள்ளான். திருவதிகை கோயிலின் முதல் பிராகாரத்தில் மடப்பள்ளி அருகில் தென்புற சுவரில் உள்ள கல்வெட்டில் இந்தத் தகவல் தெரியவருகிறது.
திருமணதடை, குழந்தையின்மை, தீராத நோய், தொழில் முடக்கம், குடும்ப பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்னை என்றாலும் கணீஸ்வர பெருமான் தீர்த்து வைப்பார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக ஜாதகம் பார்க்க செல்பவர்கள், இந்த கோயிலில் வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி
அருகிலுள்ள ரயில் நிலையம் : பண்ருட்டி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு