கள்ளக்குறிச்சி, கலியுக வரதராஜப்பெருமாள்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூரிலிருந்து 5 கி,மீ தொலைவில் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன. அரியலூர் ரெயில் நிலையத்தின் அருகில் ஆலயம் அமைந்திருக்கிறது.
சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள்
தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தலவிருட்சம் : மகாலிங்கமரம்
தலச் சிறப்புகள் : இத்தலத்தில் பெருமாள் கலியுக வரதராஜர் என்ற திருநாமத்துடன் 12 அடி உயரமுள்ள கம்பமாக வீற்றிருந்து அருள்புரிகிறார். மூலஸ்தானத்தில் 12 அடி உயரத்திலான கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. சிலை வடிவ தரிசனம் இங்கு கிடையாது. இங்கு இக்கோவிலை கட்டியவர்களின் சிலைகளும் உள்ளது.
தல வரலாறு : 250 ஆண்டுகளுக்கு முன் அரியலூர் அருகே, வன்னியகுலத்தில் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் மங்கான், மாட்டு மந்தை ஒன்றை நடத்தி வந்தார். மந்தையில் கருவுற்ற நிலையிலிருந்த அழகிய பசு, மேயச் சென்ற போது காணாமல் போனது. மூன்று நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் இரவு, அவர் கனவில் "கவலைப்படாதே பக்தா!, காணாமல் போன பசு கன்றுடன் மேற்புறமுள்ள காட்டில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்துக்கும் மாவிலிங்க மரத்துக்கும் இடையே சங்கு இலை புதர் அருகேயுள்ளது. காலையில் அங்கே கன்றுடன் பசுவைக்காண்பாய்!' என இறைவன் கூறி மறைந்தார்.
காலையில் மங்கான் பணியாட்களுடன் சென்று பார்த்த போது, கன்றுடன் பசு நின்றிருந்தது, அதே இடத்தில் சாய்ந்து கிடந்த கம்பத்தையும் கண்டார். அதன் மீது பால் சொரிந்திருந்தது. பசு, அம்மாவெனக் கதறி அவரிடம் வந்தது. அக்கம்பத்தை மங்கானும், அவரது பணியாட்களும் தொட்டு வணங்கினர். பசு கிடைத்த ஏழாம் நாள் இரவு, மீண்டும் மங்கான், கனவில் "எண்ணாயிரம் ஆண்டு யோகம் செய்வோர் கூட காணக்கிடைக்காத பெரும் பொருளைக் கண்டு வணங்கி வந்த நீ! பொய்ப்பொருளான, உன் பசுவை அழைத்துச் சென்று மெய்ப்பொருளான என்னைக் கைவிட்டாய், என்னே உன் அறியாமை! உன் முன்னோர்க்கும் எனக்கும் உள்ள உரிமைத் தொடர்பை நீ அறியமாட்டாய், சீதளவாடியில் வாழ்ந்து திருமாலை வணங்கிய உன் முன்னோர் பெருமாள் கோயில் கட்ட எண்ணி, கற்கம்பம் கொண்டு வரும் போது வண்டி அச்சு முறிந்ததால் உச்சிமுனை உடைந்து கம்பமாய் என்னை அங்கேயே விட்டுவந்தார்கள்.
அதே கம்பம் தான் நீ பார்த்தாய், தொடர்ந்து கவலை கொள்ளாதே, கம்பத்தை நிலைநாட்டும் உரிமை உன்னுடையது. கம்பத்தை நிலை நிறுத்தி நாளும் வணங்கு. என்னை நீ உணரவே உன் பசுவை மறைத்து வைத்தேன். உன்னையும் உன் வழித்தோன்றல்களையும் காக்க வந்தவன் நான் என்பதை அறிந்துகொள். கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றினேன். என் பெயர் "கலியுக பெருமாள்” எனக் கூறி இறைவன் மறைந்தார். மங்கான், அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார். இந்த கோயில் தான் தற்போது கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலாக உள்ளது.
கோவில் அமைப்பு : ஒன்பது நிலை கோபுரத்துடன் கூடிய பரந்துவிரிந்த ஆலயத்தில் இருந்து கலியுக வரதராஜ பெருமாள் அருள்புரிகிறார். இவ்வாலயம் திருமாலின் வரலாற்றுடன் தொடர்புடைய கோவிலோ, திருமாலின் நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்றோ, பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயமோ அல்ல. திருமாலின் சாதாரண பக்தர் ஒருவரால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தில் மக்கள் பெருங்கூட்டமாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. மாறாக உற்சவர் மூர்த்தி புறப்பாடு உள்ளது. தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது. மூலவரே கம்பத்தில் இருப்பதால் தாயாரும் உடனிருப்பதாக ஐதீகம். உற்சவர் கலியுக வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்புரிகிறார். விவசாய விளை நிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் குறிப்பிட்ட அளவு உணவு பொருட்களை கோயிலுக்கு செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். கோயிலை சுற்றிலும் ராட்சத அளவிலான தானிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் தங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். கோயிலில் உள்ள தசாவதார மண்டபத்தில் பத்து அவதாரங்களின் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. மகாலிங்க மரத்தை தலவிருட்சமாக கொண்ட கோயில் இது என்பது சிறப்பாகும். விவசாயம் செழிக்க இந்த பெருமாளை வேண்டி பயனடையலாம்.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நண்பகலில் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. அன்று முழுநேரமும் கோவில் நடை திறந்திருக்கும். சித்திரையில் சித்திரா பவுர்ணமி, அட்சயதிருதியை, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, மாதத்தின் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், புரட்டாசி நவராத்திரி, விஜயதசமி, சரஸ்வதி பூஜை, திருவோண நட்சத்திரம், தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி, அனுமன் ஜெயந்தி, தைப்பொங்கல், பூசம், மாசியில் மகம் என வருடம் முழுவதும் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.
விழா உற்சவ காலங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பெறுவதும், வெள்ளிகருட வாகனத்தில் உற்சவர் உலாவருவதும் நடைமுறையில் உள்ளது. இவையாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் வரும் ஸ்ரீராமநவமி தொடங்கி பத்து நாட்கள் பிரமோற்சவம் நடக்கிறது. திருக்குளத்தில் தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. பிரமோற்சவத்துக்கு அடுத்தப்படியாக புரட்டாசி மாதத்து சனிக்கிழமைகளில் நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் காண ஏராளமானோர் இவ்வாலயத்தில் கூடுகின்றனர். குறிப்பாக புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையின்போது நள்ளிரவில் சுவாமியை தரிசிக்க லட்சக் கணக்கானோர் இங்கு வருகை தருகின்றனர். புரட்டாசி மாதத்து சனிக்கிழமைகள் குறிப்பாக மூன்றாவது சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைக்காக நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 3.00 மணி முதல் 9.00 மணி வரை நடை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : அரியலூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு