ஜலநாதேஸ்வரர் கோவில், திருஊறல்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து (17 கி.மீ) அரக்கோணம் செல்லும் சாலையில் வலப்புறம் பிரியும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இத்தலம் 'தக்கோலம்' என்று மக்களால் அழைக்கப்படுகிறது. குசத்தலை என்னும் கல்லாற்றின் கரையில் இத்தலம் உள்ளது. அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. தக்கோலம் ரயில்நிலையத்திலிருந்து கிழக்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம் ஆகிய நகரங்களிலிருந்து நேர் பேருந்து வசதிகள் உள்ளன.
சுவாமி : ஜலநாதேசுவரர், உமாபதீசுவரர்
அம்பிகை : கிரிராஜ கன்னிகை, மோகன வல்லியம்மை
தலமரம் : தக்கோலம்
தீர்த்தம் : நந்தி தீர்த்தம், சத்யகங்கை
பதிகம் : திருஞானசம்பந்தர்-1
திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் சுரர் குருவுக்கு இளைய சம்வர்த்த முனிவர் வழிபட்ட பதி. இவ்வூரில் மோகன வல்லியம்பிகை உடனாகிய கங்காதரேசுவரர் சுயம்பு லிங்கமாக கோமநாதேசுவரர் திருக்கோயில்கள் உள்ளன. திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம்.
தல புராண வரலாறு: நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்ததாலும், இறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு திருஊறல் என்று பெயர். மேலும் இறைவனை அழைக்காமல் அவமதித்து தக்கன் நடத்திய யாகத்தை அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம் இதுதான் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு "ஓ" என்று ஓலமிட்டதால் தக்கோலம் என்று பெயர் பெற்றதாக உள்ளூர்ச் செய்தி அறிவிக்கின்றது. வடக்கு மதிலோரத்திலுள்ள கங்காதரர் சந்ந்தியின் மேற்குப் பிராகாரத்தில் சத்யகங்கை தீர்த்தம் உள்ளது. இதன் கரையிலுள்ள நந்தியின் வாயிலிருந்து தான் கங்கை நீர் பெருகி வந்தது. உததி முனிவர் வழிபட்டு அவர் வேண்டிக்கொண்டபடி நந்தியெம்பெருமான் தன்வாய் வழியாக கங்கையை வரவித்த சிறப்புடையது இத்தலம். இப்போதும் கல்லாற்றில் நீர்ப்பெருக்கு உண்டாயின் அப்போது நந்தி வாயில் நீர் விழும் என்று சொல்கிறார்கள்.
கோவில் அமைப்பு: குசஸ்தலை என்னும் கல்லாற்றின் கரையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரளவில் சுற்றிலும் மதிற்சுவருடன் கூடிய மேற்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் மேற்கு வெளிப் பிராகாரத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும் தனிக்கோயிலாகவுள்ளது. நந்திக்கு எதிரில் உள்சுற்றுச் சுவரில் ஒரு சாளரம் உள்ளது. வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தெற்கு பிராகாரத்தில் வடக்கு நோக்கிய அம்பிகை சந்நிதி தனிக் கோவிலாக ஒரு முன் மண்டபத்துடன் உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில், அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுட்ன காட்சி தருகிறாள். இச்சந்நிதிக்குப் பக்கத்தில் தனியே உள்ள மண்டபத்தில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி கம்பீரமாக உள்ளது. அம்பிகை சந்நிதிக்கு எதிரே சுவாமி சந்நிதிக்குச் செல்ல பக்கவாயில் உள்ளது. இதன் வழியே உள்ளே சென்று மேற்கிலுள்ள உள்வாயில் வழியே துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கி உள்ளே சென்றால் ஒரு புறத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. அடுத்துள்ள மண்டபத்தில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராச சபையும் உள்ளன. அடுத்துள்ள மேற்கு நோக்கிய உள் வாயிலைக் கடந்து சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். நேரே மூலவர் தரிசனம். சிவலிங்கத் திருமேனி மணலால் ஆனது. தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.
உள் பிராகாரத்தில் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், பைரவர், சப்த கன்னியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை முதலிய திருமேனிகள் உள்ளன. இவற்றுள் துர்க்கை நீங்கலாக உள்ள மற்ற திருமேனிகள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே உள்ளன. தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் உள்ள மகாவிஷ்ணுவும் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமாகக் கொண்டு, இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளார். பிரம்மாவும் அமர்ந்த நிலை. விஷ்ணுதுர்க்கை அமைப்பு நின்ற நிலையினதாயினும் அழகான வேலைப்பாடுடன் உள்ளது.
காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : தக்கோலம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை