துல்ஜாபூர் பவானி
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் மராட்டிய மாநிலம் ஓசனாமாபாத் மாவட்டத்தில் உள்ள சோலாப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் துல்ஜாபூர் உள்ளது.
அம்மன் / மூலவர் : துல்ஜா பவானி
தீர்த்தம் : கோமுக தீர்த்தம், கல்லோல தீர்த்தம்
பீடம் : உத்பலா பீடம்
தல சிறப்புகள் : சாளக்கிராமச் சிலையினால் ஆன ஸ்ரீதுல்ஜா பவானிதேவி விக்கிரகம் சுயம்பு விக்கரகமாகும். எட்டு கரங்களுடன் தேவி தனது வாகனமான சிங்கம் பின்புறம் நிற்க, நின்ற நிலையில் காட்சி தருகிறாள். தேவியின் வலக்கரங்களில் மேலிருந்து கீழாக சக்கரம், அம்பு, குறுவாள், திரிசூலம் ஆகிய ஆயுதங்களும் இடக்கரங்களில் சங்கு, வில், குங்கும பாத்திரம், அசுரனின் சிரசு ஆகியவற்றைத் தாங்கியபடியும், வலக்காலின் கீழ் மகிஷாசுரன் படுத்த நிலையிலும் காட்சி தருகிறான்.
மூல விக்ரகம் கறுத்த சாளக்கிராமக் கல்லாலும் சலவைக் கல்லாலும் செதுக்கியது. சாளக்கிராமம் என்பது நேபாள நாட்டில் கண்டகி நதியில் கிடைக்கும் தெய்வீகக்கல். கோயிலின் கருவறையில் தானாக உருவெடுத்த துல்ஜா பவானி விக்ரகத்தைக் காணலாம். கற்களாலும், நகைகளாலும் ஆன பீடத்தில் துல்ஜா பவானி விக்ரகம் உள்ளது. துல்ஜா பவானி எட்டுக் கைகளுடன் காட்சியளிக்கின்றார். தனது காலால் மகிஷாசுரனை மிதித்துக் கொண்டு சூலத்தால் குத்தும் நிலையில் காட்சியளிக்கிறார். அதற்கு அருகிலேயே பவானி உறங்குவதற்கான வெள்ளியாலான படுக்கை உள்ளது. அந்தப் படுக்கைக்கு எதிரில் மகாதேவரின் லிங்க வடிவம் உள்ளது. பவானியும், சங்கரரும் நேருக்கு நேர் பார்த்திருப்பதை அங்கு காணலாம். ஆதிசக்தி பார்வதியாக அவதரித்து சிவபெருமானைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் இங்கு பவானியாக கோயில் கொண்டால் என ஸ்கந்த புராணம் கூறுகிறது.
இக்கோயிலில் உள்ள பல தூண்களில் ஒன்றில் வெள்ளியாலான வளையம் உள்ளது. நம் உடலில் எங்காவது வலி ஏற்பட்டால், ஏற்பட்டிருந்தால் இந்த வெள்ளி வளையத்தைத் ஏழு நாட்கள் தொடர்ந்து தொட்டு வந்தால் அது சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறது.
துல்ஜா பவானியை வணங்க சத்ரபதி சிவாஜி இங்கு வருவார் என்று சரித்திரம் கூறுகிறது. இக்கோயிலில் சகுன்வன்தி என்ற ஒரு கல் உள்ளது. இந்தக் கல்லின் மீது லேசாக கையை வைத்துக் கொண்டு மனதிற்குள் கேள்வியை எழுப்பினால் வலது பக்கம் திரும்பினால் உண்டு, இல்லை என்றால் இடது பக்கம் திரும்பும். கல் அசையாமல் இருந்தால் நாம் எண்ணிய அந்தச் செயல் மிக மெதுவாக நிறைவேறும் என்று கொள்ளப்படுகிறது.
சக்தி பீடங்களான கோல்ஹாபூர் ஸ்ரீமஹாலட்சுமி, துல்ஜாபூர் ஸ்ரீதுல்ஜா பவானி, மாஹூர் ஸ்ரீரேணுகா தேவி, ஆலயங்களோடு வனி ஸ்ரீசப்தசிருங்கி தேவி ஆலயம் அர்த்த சக்தி பீடமாக (பாதி பீடம்) கருதப்படுகிறது. எனவே இந்த பீடங்கள் சாடேதீன் (மூன்றரை) சக்தி பீடங்களாகக் கருதப்படுகின்றன. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மூன்றரை சக்தி பீடங்களில் துல்ஜாபூர் இரண்டாவதாக விளங்குகிறது. இங்கு கருவறையில் அமர்ந்திருக்கும் தேவி மூலமூர்த்தி, உற்சவ மூர்த்தி போன்றே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதோடு, ஆண்டில் மூன்று முறை, மொத்தம் 18 நாட்கள் நித்திரை கொள்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
தல வரலாறு : கிருதயுகத்தில் கர்த்தமர் என்ற ஒரு முனிவர் இருந்தார். கர்த்தம முனிவர் இறந்தவுடன் ரதி போன்று அழகாகவும் சிறந்த குணங்களையும் கொண்ட அவர் மனைவி அனுபூதி உடன்கட்டை ஏற முயன்றாள். அப்போது கையில் குழந்தையுடன் இருக்கும் பெண்கள் சதி மேற்கொள்ளக்கூடாது என்று ஓர் அசரீரி கட்டளையிட்டது. அப்போது அவள் தன் மனத்தை மாற்றிக் கொண்டு மந்தாகினி நதிக்கரையில் தவம் செய்து சிறந்த யோகியாகத் திகழ்ந்தாள்.
தெமான் பகுதியில் இருந்த குக்கர் என்ற அசுரன் அவள் அழகில் மயங்கி மோகித்து அவளை அடைய முயற்சித்த போது அனுபூதி, துர்க்காதேவியைத் துதிக்க ஸ்ரீதிர்க்காதேவி துல்ஜா பவானியாக அவள் முன் பிரசன்னமாகி அந்த மகிஷாசுரனை விஜயதசமி நாளான அசுவினி சுத்த தசமி நாளன்று தேவி வதம் செய்தாள். தன் பக்தர்களைக் காப்பாற்றும் பொருட்டு விரைந்து வருவதால் தேவிக்கு துவரிதா என்ற பெயர் ஏற்பட்டது. துவரிதா என்ற பெயரே மராத்தி மொழியில் துல்ஜா என்று ஆகியிருக்கிறது. ஸ்ரீதுல்ஜாதேவி இத்தலத்தில் எப்போது கோவில் கொண்டாள். நான்கு யுகங்களாக தேவி இங்கு இருப்பதாகவும் பக்தர்கள்நம்புகின்றனர்.
தேவி ஆலயத்திற்கு சற்றுத்தொலைவில் ஒரு சிறிய ஆலயத்தில் ஒரு கற்பாறை உள்ளது. இராமபிரானும் லட்சுமணரும் சீதா தேவியைத் தேடிவந்த போது இந்தப் பாறையின் மீது ஓய்வு எடுத்ததாக ஐதிகம். அவர்கள் முன்பாக சீதையின் உருவில் பவானிதேவி பிரத்யட்சமாகவே ஸ்ரீஇராமபிரான் தேவியை அடையாளம் கண்டு, வணங்கினார். ஒரு குரங்கு அரசனின் உதவியால் சீதாதேவி கிடைப்பாள் என்று அனுக்கிரகித்து தேவி மறைந்தாளாம். இந்தப் பாறையின் அருகில் ஸ்ரீஇராமரும் லட்சுமணரும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கியதன் நினைவாக இராமேஸ்வர், லட்சுமணேஸ்வர் என்ற இரண்டு சிறிய சிவலிங்கங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு : பாலாகாட் எனப்படும் குன்றின் மீது ஸ்ரீதுல்ஜா பவானிதேவி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் பிரதான வாயிலை அடுத்த, இரண்டாவது ஆலய வாயில் சிவாஜி த்வாரம் எனப்படுகிறது. கருவறை அருகில் சிவாஜி துவாரம் வழியாக தேவியைத் தரிசித்து பக்தர்கள் வெளியே செல்வது வழக்கம். இந்த வாயில் வழியாகவே சிவாஜி மன்னர் ஆலயத்திற்கு வந்து தேவியை வழிபட்டு வந்ததாக ஐதீகம் உள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் விசாலமான பிராகரங்கள் உள்ளன. ஆலயத்தின் பிரதான வாயிலின் நடுவே கற்களால் அமைக்கப்பட்ட ஹோமகுண்டம் உள்ளது. சர்தார் அப்சல்கான் என்ற இஸ்லாமிய மன்னரை வெற்றி கொண்டதன் நினைவாக சிவாஜி மன்னர் இந்தக் குண்டத்தின் இரண்டு புறங்களிலும் தீப்மாலா எனப்படும் இரண்டு தீபஸ்தம்பங்களை அமைத்திருக்கிறார். இதை அடுத்த கருங்கல்லினால் கட்டப்பட்டுள்ள சபா மண்டபத்தின் தூண்களில் பல்வேறு தேவதைகளின் சிலைகள் நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளன. இங்கு தேவியின் சந்நிதிக்கு நேர் எதிரே தேவியின் வாகனமான சிங்கத்தின் பளிங்குச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தீர்த்தங்களின் அருகில் சித்திவிநாயகர், வித்தல, தத்தாத்ரேயர் சந்நிதிகள் அமைந்துள்ளன. ஆலய வளாகத்தில் மாதங்களிதேவி சந்நிதி தனியே உள்ளது. பிரம்மாவின் வேண்டுகளின்படி மதங்கள் என்ற அரக்கனை தேவி அழித்ததால் மாதங்களி என்ற பெயரேற்று தனியே சந்நதி கொண்டிருக்கிறாள். தேவியின் சகோதரியாகக் கருதப்படும் ஸ்ரீஹேமாயி தேவி சந்நிதியும் அருகில் சிந்தாமணி கணபதி சந்நிதியும் உள்ளன. ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீதத்தாத்ரேயர் நரசிம்மர், கண்டோபா, லக்ஷ்மி நாராயணர் சந்நிதிகளும் உள்ளன.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : புனே
அருகிலுள்ள ரயில் நிலையம் : சோலாப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு