ஆழ்வார்குறிச்சி, வன்னியப்பர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபனாசத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் 11 கி.மீ தொலைவில் உள்ளது. திருநெல்வேலி, பாபநாசம், தென்காசி ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள் உள்ளன. திருநெல்வேலியிலிருந்து ஆழ்வார்குறிச்சிக்கு சென்றுவர போக்குவரத்து வசதிகள் உள்ளன.
இறைவன் : வன்னியப்பர்
இறைவி : சிவகாமசிந்தரி
தல சிறப்புகள் : இத்தலத்தில் உள்ள இறைவன் வன்னியப்பர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். அக்னி பகவான் வழிபட்ட தலமே இதுவாகும்.
தல வரலாறு : காசியில் பஞ்ச குரோச தலங்களில் யார் வசிக்கிறார்களோ அவர்களுக்கு பாவம் செய்யும் எண்ணமே தோன்றுவதில்லையாம். அது போல இந்தக் கோயிலைச் சுற்றியும் பஞ்சகுரோச தலங்கள் உள்ளன. பாப்பான்குளம் இராமேஸ்வரர், பாபநாசம் பாபநாச நாதர், திருவாலீஸ்வரம் திருவாலீஸ்வர நாதர், சிவசைலம் சிவசைலப்பர் ஆகியவற்றுடன் ஆழ்வார்குறிச்சி வன்னீஸ்வரர் கோயில் ஆகியவையே அத்தலங்கள்.
ஒருமுறை சப்தரிஷிகள் யாகம் செய்து கொண்டிருந்தனர். அவர்களது யாக குண்டத்தில் எரிந்த நெருப்பு சரிவர எரியவில்லை. இதனால் அக்னி பகவானை ஒளியிழந்து போகுமாறு அந்த ரிஷிகள் சபித்தனர். தனது கடமையை சரிவர செய்யாமல், சாபத்திற்கு ஆளான அக்னி பகவான், மீண்டும் தனது பழைய நிலையை பெற சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். சிவபெருமான் அவருக்கு காட்சியளித்து மீண்டும் ஒளி தந்தார்.
கோவில் அமைப்பு : இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இக்கோயில் போதிய பராமரிப்பு இல்லாமல் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. மற்ற கோயில்களைப்போல இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால் சுவாமி சன்னதியின் முன் மண்டபத்தில் நவக்கிரக யந்திரம் புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இது ஒரு அபூர்வ அமைப்பாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் நீலகண்ட விநாயகர் முன்புள்ள மண்டபத்தில் இதுபோன்ற அமைப்பு உண்டு. ஆனால் சிவனின் முன்னிலையில் நவக்கிரக யந்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பது இங்கு மட்டுமே. பிற கிரகங்களுடன் பாம்பு வடிவில் இராகு, கேது உள்ளன. இந்த கிரகங்களை பாம்பாட்டிகள் போன்ற உருவில் உள்ளவர்கள், ஆட்டி வைப்பது போல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வெளியே சற்று தூரத்திலுள்ள அக்னி தீர்த்தத்தின் நீர், தீர்த்தத்திற்குள் உள்ள சிவலிங்க மண்டபத்தை மூழ்கடித்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். சாஸ்தா சன்னதியில் சாஸ்தா பலிபீட வடிவில் இருக்க, அருகில் பூர்ண, புஷ்கலா அருளுகின்றனர். கரூவூர் சித்தர் ஒரு தூணில் நாயுடன் காட்சி தருகிறார். சித்தர் வழிபாடு செய்பவர்களுக்கும், தியானம் செய்பவர்களுக்கும் ஏற்ற அமைதியான சூழலில் கோயில் இருக்கிறது. சிவசன்னதி முன்புள்ள மண்டபக் கூரையில் யந்திர வடிவில் நவக்கிரகங்கள் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள மண்டபத் தூணில் கர்ப்பமான நிலையில் ஒரு அம்பிகை காட்சி தருகிறாள். அவளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் சுகப்பிரசவம் ஏற்படும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தை இல்லாத பெண்களும் இவளை வழிபடுகின்றனர். அம்பாள் சிவகாமிசுந்தரியை வழிபட்டால் கன்னிப்பெண்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.
காலை 7.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை, திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை