திருவக்கரை- ஸ்ரீ வக்கிரகாளியம்மன் ஆலயம்
திருத்தலஅமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திண்டிவனம்- புதுச்சேரி பாதையில், மயிலம் தாண்டிச் சிறிது தூரம் சென்றால், பெரும்பாக்கம், அங்கிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவன் : சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர்
இறைவி : அமிர்தாம்பிகை, வடிவாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : சூர்ய, சந்திர புஷ்கரணீ
பாடியவர் : திருஞானசம்பந்தர்
சிறப்புகள்: சாதாரணமாக, காளி கோயில் ஊர் எல்லையில் இருக்கும். ஆனால், இங்கோ ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் வளாகத்துக்குள் காளிதேவி கோயில் கொண்டிருக்கிறாள். காளி கோயிலுக்கு எதிரில் (வடக்குப் புறத்தில்) ஆத்மலிங்கக் கோயில். கண்டலிங்கம் (வக்கிராசுரன் தன் தொண்டையில் வைத்துப் பூஜித்ததால்) என்றும் வக்கிர லிங்கம் என்றும் பெயர்களுண்டு. மேற்கு நோக்கிய லிங்கம். ஆத்ம லிங்கத்துக்கு ஒரு தனிச் சிறப்பு இருப்பதாக கோடை காலத்தில், லிங்கம் படுகுளிர்ச்சியாக இருக்குமாம். குளிர் காலத்திலோ, லிங்கத்தின் மீது, முத்து முத்தாக நீர்த் துளிகள் காணப்படுமாம்.
ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் உள்ளது. மரங்கள் கல்லாக மாறியிருக்கும் விந்தையுடையது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கூடிய அதே தோற்றததோடு இன்று கல்லாக, கல்மரங்களாக மாறிக் காட்சியளிக்கின்றன.
ராஜகோபுரத்தின் இடப்பக்கம் "வக்கிரகாளி "உள்ளது. இவ்வுருவம் மிக்க அழகுடையதாக உள்ளது. சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த பெரிய வக்கிர லிங்கம் உள்ளது. சதுர அடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய திருமேனி மும்முகத்துடன் விளங்குகின்ற கம்பீரமான தோற்றம். உள்பிரகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதி - முனிவரின் சமாதி மீது சிவலிங்கம் உள்ளது. இதற்கு கோஷ்டமூர்த்தமாகத் தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப்பெருமாள் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் நடராசர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. புதிய அமைப்புடையது. இதை 'வக்கிர தாண்டவம் என்று குறிப்பிடுகின்றனர். நவக்கிரகச் சந்நிதியில் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாக தென்புறம் நோக்கியுள்ளது.
தல வரலாறு: சிவபெருமானை எண்ணித் தவம் செய்து பூஜித்த வக்கிராசுரன் பற்பல வரங்களைப் பெற்றான். அந்த வரங்களின் விளைவாகப் பலருக்கும் துன்பம், கொடுமைகள் செய்தான். அவனது கொடுமைகள் தாங்க முடியாமல், பலரும் சிவனாரிடம் சென்று முறையிட்டனர். சிவனாரும் மகாவிஷ்ணுவை அழைத்து, வக்கிரனை வதம் செய்யச் சொன்னார்.
அதன்படி, வக்கிரன் இருந்த இடத்தை அடைந்த மகாவிஷ்ணு, பெரும் போருக்குப் பின் சக்கராயுதத்தைப் பிரயோகித்து அவனை வதம் செய்தார்.
வக்கிராசுரனுக்கு துன்முகி என்றொரு சகோதரி. அண்ணனின் அதிகாரம் தந்த ஆணவத்தால், துன்முகியும் பற்பல கொடுஞ்செயல்களைச் செய்தாள். சிவபெருமான், பார்வதி தேவியை நோக்கினார். திருக்கயிலையிலிருந்து புறப்பட்ட பார்வதிதேவி, துன்முகியை நோக்கிச் சென்றார். துன்முகி அப்போது கருவுற்றிருந்தாள். என்னதான் இருந்தாலும் கர்ப்பிணியாயிற்றே! அவள் தவறு செய்திருந்தாலும், அந்தச் சிசு என்ன பாவம் செய்தது? பார்த்தாள் பார்வதி. துன்முகியின் வயிற்றுச் சிசுவை பத்திரமாக எடுத்துத் தன் காதில் மாட்டிக் கொண்டு, துன்முகியை வதம் செய்தார். வக்கிரன் வாழ்ந்த இடம் என்பதால், ‘வக்கரை’ ஆன இந்த இடத்தில், காளியாகி நின்று காட்சி கொடுப்பதால் அம்பாள், வக்கிரகாளி ஆனார்.
கோயில் அமைப்பு: வராக நதி பாய்கிற இடம். சங்கராபரணி என்றும் அழைக்கப்படும் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது திருவக்கரை பழைமையான, பெரிய கோயில், விண்ணளாவி நிற்கும் கிழக்கு ராஜ கோபுரம். பிற்காலச் சோழ சாம்ராஜ்யம் உருவாகக் காரணமான ஆதித்த சோழனால், இன்றைக்குச் சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன், செங்கற் கோயிலாக இந்தத் திருக்கோயில் கட்டப்பட்டது. அதற்கு முன்னரேகூட கோயில் சிறிய அளவில் இருந்துள்ளது. பின்னர், முதலாம் பராந்தகனின் மகன்களான ராஜாதித்தனும் கண்டராதித்தனும் இந்தக் கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள் ளனர். கண்டராதித்தன் கட்டு வித்த கண்டராதித்த கோபுரம், ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கோபுர வாயிலில் உள்ள கணபதியை வணங்கி, உள்ளே நுழைந்து அண்ணாந்து பார்க்கிறோம். கூரையில் ஒன்பது கட்டடங்கள் போன்ற அமைப்பு. நடுவில் அழகான தாமரை. மலரைச் சுற்றிலும் எண்திசைக் காவலர்களாம், அஷ்டதிக்குப் பாலர்கள்.
ராஜ கோபுரம் தாண்டியதும், வடக்கு நோக்கிய வக்கிரகாளி அம்மன் சந்நிதி. சந்நிதிக்குள் நுழையும்போது, வாயிலில் உள்ள துவாரபாலகியர் பக்கத்துக்கு இரண்டாக, மொத்தம் நான்கு பேர்.
வக்கிரகாளியம்மன் : காளியம்மன் திருமேனி லேசாகச் சாய்த்த தலை. கிரீடத்தில் மண்டையோடு. வலக் காதில் சிசுக் குண்டலம். இடக் காதில் ஓலைச்சுருள். வதனத்தில் வசீகரமான புன்னகை. சற்றே கூர்ந்து கவனித்தால், உள்ளத்தில் தெளிவு கலந்த அச்சத்தை ஏற்படுத்துகிறாள். எட்டுத் திருக்கரங்கள். வலக் கரங்களில் பாசம், சக்கரம் வாள், கட்டாரி. இடக் கரங்களில், மேல்கரம் உடுக்கையைப் பிடித்தாற் போல இருக்கிறது. அடுத்த இரு கரங்களில் கேடயமும் கபாலமும். கீழ்க்கரம், ஆள் காட்டி விரல் நீட்டி அம்மனின் பாதத்தைச் சுட்டுகிறது. கபாலங்களையே கோத்து முப்புரி நூலாக அணிந்திருக்கிறாள். கோரைப் பற்கள். பெரிய விழிகள். வக்கிரகாளி சந்நிதியைத் தனியே வலம் வரலாம். வலம் வரும்போது, சிலர் திசை மாறி இடமாகச் சுற்றுவது (அப்பிரதட்சிண மாக) தெரிகிறது. நவக்கிரகங்களுக்கும் தனித்தனியாக அதிதேவதை கள் உண்டு. ராகு-கேதுவுக்கு காளியம்மனே அதிதேவதை. இந்தக் கோயிலில், சனியும் வக்கிர சனியாகவே உள்ளார். காளியின் சந்நிதியிலேயே ஒரு புறம் யோகேஸ்வர லிங்கம். இன்னொரு புறம் வலம்புரி விநாயகர்.
தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 12.00 வரை, மாலை 5.00 முதல் இரவு 9.00 வரையிலும் கோவில் திறந்திருக்கும்
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை & புதுச்சேரி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திண்டிவனம் 23 கி மீ
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு