பிரம்மா கோயில் (காயத்ரி) - புஷ்கர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் இந்துக்கள் வழிபடும் முக்கிய புனிதத் தலங்களில் இதுவும் ஒன்று. புஷ்கர் நகரின் புஷ்கரணி எனும் புனித குளமும், பிரம்மன் கோயிலும் புகழ் பெற்றவையாகும்.
தல சிறப்பு : காயத்ரி தேவியாக அன்னை இங்கே வீற்றிருக்கிறார். 27வது சக்தி பீடமாக விளங்குகிறது இந்தத் தலம். அன்னையின் உடற்கூறுகளில் மணிக்கட்டுகள் விழுந்த இடம் இது. கோயில் நகரமாகவே விளங்கும் புஷ்கரில் முக்கியக் கோயிலாக காயத்ரி தேவி ஆலயம் திகழ்கிறது.
இந்த கோயிலில் உள்ள பிரம்மனுடைய சிலை, இடதுபுறம் இளைய மனைவி காயத்ரியுடனும், வலதுபுறத்தில் சாவித்திரியுடனும், நான்கு தலைகளுடன் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் கம்பீரத் தோற்றத்தை இங்கு வரும் பக்தர்கள் எவரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டார்கள். ஆனால் இக்கோயிலில் குடி கொண்டுள்ள பிரம்மனுக்கு வழிபாடு நடைபெறுவதில்லை. புஷ்கரில் சரஸ்வதியின் வாகனமான அன்னபறவைக்கும் தனியாக கோயில் உள்ளது.
புஷ்கர் என்றால் சமசுகிருதத்தில் நீலத்தாமரை என்று பொருள் இந்துக்களின் புராணத்தின்படி,பிரம்மா பூமியில் செய்யவிருக்கும் யாகத்திற்கு இடம் தேவைப்பட்டது. இதனால், அன்னம் தாமரையை இடும் இடத்தை, தேர்வு செய்யலாம் என்ற யோசனை எழவே, அவ்வாறே செய்யப்பட்டது. தாமரை மலர் விழுந்த இடமே புஷ்கர் எனப்பட்டது. தாமரைக் கொடிகள் நிறைந்த குளத்தை புஷ்கரணி என்பர். பிரம்மா கோயில் 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தன் கையிலிருந்த தாமரை மலரை பூமியில் போட்ட இடம் புஷ்கரணி. பஞ்ச புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று இந்த குளத்தருகில் பிரம்மா அமர்ந்து விட்டார்.
தல வரலாறு : காயத்ரி தேவி பூவுலகில் தோன்றியதற்கு ஒரு காரணமும் உள்ளது. ஒரு முறை புஷ்கரில் யாகம் நடத்த பிரம்ம தேவர் முடிவு செய்தார். பொதுவாக யாகத்தை தம்பதிகளாக இணைந்து நடத்துவது வழக்கம். இதனால் தன் மனைவியான சாவித்ரியை யாகம் நடத்தும் இடத்துக்கு அழைத்தார் பிரம்ம தேவர்.
யாகம் குறித்து அறிந்த இந்திரன் உள்ளிட்ட தேவர்களும் அங்கே வந்து சேர்ந்தனர். ஆனால் யாகம் தொடங்கும் வரை, சாவித்ரியால் வர இயலவில்லை. இதனால் கோபம் கொண்ட பிரம்மாவின் கோபத்தை தணிக்க, காயத்ரியை தோற்றுவித்தனர் தேவர்கள். அவள் யாகத்துக்கான புனிதத் தன்மை பெற, பசுவின் வாய் வழியே செலுத்தி வெளியே எடுத்தனர். காயத்ரி தேவியை மணம்முடித்து, யாகத்தை தொடங்கினார் பிரம்ம தேவர். அப்போது அங்கு வந்துசேர்ந்த சாவித்ரி, தான் வரும் முன்னரே யாகத்தைத் தொடங்கியதாலும், காயத்ரியை மணந்ததாலும் கோபம் கொண்டார். அதனால், இந்த புஷ்கர் நகரைத் தவிர வேறெங்கும் பக்தர்கள் உன்னை வழிபட மாட்டார்கள் என்று பிரம்மதேவரை சபித்து சாபம் விட்டாள். அதனால்தான் பிரம்மாவுக்கு வேறு எங்கும் தனி ஆலயம் அமையவில்லை.
இத்தகு புராணப் பெருமை கொண்ட புஷ்கரில் காயத்ரிக்கு தனி ஆலயம் உள்ளது. குன்றின் மீது எழுந்தருளியுள்ள அன்னை காயத்ரி தேவி, அவளது ஆலயம் தேடி வரும் பக்தர்கள் வேண்டிய வரத்தை அளிக்க வல்ல சக்தியாக விளங்குகிறாள். இந்த சக்தி பீடத்துக்கு நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
கோவில் அமைப்பு : முற்றத்தில் மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரே இடது பக்கம் மழைக்கடவுளான இந்திரன் காட்சி தருகிறான். வலது பக்கம் தனக்கடவுளான குபேரன் தனது கணங்களுடன் யானை மீது ஆரோகணித்திருக்கிறான். மூலவர் சந்நிதிக்கு முன்பாக ஒரு தூணில் அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அசுவத்தின் சிற்பம். கார்த்திகை சுக்லபஷ பவுர்ணமிக்கு 5நாட்கள் முன் இந்த புஷ்கரணியில் நீராடல் சொர்க்கம் செல்ல அருள். பத்ரிநாராயனர், வராஹர், சிவன் கோவில்கள் புஷ்கரணியைசுற்றி. அகத்தியர், பாண்டவர்கள். மார்கண்டேயர் தவம்.
வராஹர் ஆலயம் இந்த ஆலயம் பிரம்மா ஆலயத்திற்கு இணையாகப் புராதனமானது. இங்கு மஹாவிஷ்ணு தமது அவதாரங்களில் ஒன்றான பன்றி வடிவில் காட்சியளிக்கிறார். பிரம்மன் துணைவியான சாவித்திரி தேவி பதியுடன் ஊடல் கொண்டு, அதனால் அவள் குடி போன ஆலயம் அருகில் உள்ள ரத்னகிரி என்ற குன்றின் உச்சியில் உள்ளது. படிக்கட்டுகள் பல ஏறி ஆலயத்தில் சாவித்திரி தேவியை தரிசிப்பதோடு இங்கிருந்து புஷ்கர் நகரையும், பொய்கையும், மணல் பரப்பையும் கண்டு களிக்கலாம்.
நடை திறக்கும் நேரம் : காலை 6.00 முதல் பகல் 12.30 வரை, மாலை 4.00 முதல் இரவு 9.00 வரை திறந்து இருக்கும். புஷ்கர் ஏரியில் சூரியோதயம் முதல், சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே நீராட இயலும்.
அருகில் உள்ள விமான நிலையம்: ஜெய்ப்பூர் 130 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் : அஜ்மீர் 13 கி.மீ
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு