தகட்டூர், மல்லிகார்ஜுனேஸ்வரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தர்மபுரி மாவட்டத்தின் நகரின் கோட்டை என்ற பகுதியில் அமைந்திருக்கிறது.
இறைவன் : மல்லிகார்ஜூனேஸ்வரர்
இறைவி : காமாட்சி அம்மன்
தல விருட்சம் : வேலாமரம்
தல தீர்த்தம் : சனத்குமாரநதி
தல சிறப்புகள் : இங்கு சிவன் சயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தாய்மையின் சிறப்பை உயர்த்திச் சொல்லும் வகையில் காமாட்சி அம்பாளின் சன்னதி சுவாமியின் சன்னதியை விட உயரமாக இருக்கிறது. இரண்டரை டன் எடையுள்ள வியன்மிகு தொங்கும் தூண்கள் இரண்டைப் பெற்றிருக்கும் சிவத்தலம். துர்வாசர், காசியபர், அகத்தியர், பரத்வாஜர், கவுசிகர் ஆகிய 5 முனிவர்களாலும், இந்திரன், வருணன், எமன், நிருதி, அக்னி, வாயு, குபேரன் மற்றும் அஷ்டதிக் பாலகர்கள், பஞ்ச பாண்டவர்கள், ஐராவதம் என்னும் வெள்ளை யானை, யோக நரசிம்மர், ராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணர் ஆகியோராலும் வழிபாடு செய்யப்பட்ட தலம். தேவார வைப்புத்தலங்களில் ஒன்றாக உள்ளது. சிறுவனின் விருப்பத்திற்காக, சிவபெருமானே வேதியர் உருவில் வந்து, அவிர்பாகத்தை வாங்கிய சிறப்புமிக்க கோவில்.
கோவில் அமைப்பு : கோவில் கருவறையில் சிவலிங்க உருவமாக மூலவர் வீற்றிருக்கிறார். இந்த சிவலிங்கத்தின் ஆவுடையார், சதுர பீடமாக அமைந்திருக்கிறது. சிவலிங்கம் 36 தத்துவங்களை உள்ளடக்கிய வகையில் பட்டைகளைக் கொண்டு வடிக்கப்பட்டுள்ளது. மூலவர் கருவறையின் முன்பாக மகர மண்டபத்தில் இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால், அது எந்த தடங்கலும் இன்றி மறு பக்கம் வந்துவிடும். அதாவது, அந்த தூண் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தூணின் எடை பல டன் இருக்கும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இதனால் இவை 'தொங்கும் தூண்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
ஆலய விதானத்தில் வட்ட வடிவிலான அமைப்பில் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி அருள்புரிகிறார். அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள், வெவ்வேறு கோணங்களில் திரும்பிய வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய வடிவமைப்பு மற்ற ஆலயங்களில் காண முடியாத ஒன்றாகும். மூலவரின் கருவறை வாசலில் உள்ள கஜலட்சுமி உருவம், இருபுறமும் மாறுபட்ட முறையில் நீர் சொரியும் யானைகளைக் கொண்டதாக இருக்கிறது. இத்தல முருகப்பெருமானும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். இவர் சபரிமலை ஐயப்பனைப் போல, குந்தணமிட்ட நிலையில் மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். மயிலின் வாயிலும், முருகப்பெருமானின் காலடியிலும் நாகங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள விநாயகர் சன்னிதியில் உள்ள விநாயகர் உருவம் மற்றும் அவரது சன்னிதிக்குரிய விமானம் ஆகியவை ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக இருக்கிறது.
பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது. அதாவது18 படிகள் கொண்ட உயர்ந்த குன்று அமைத்து அதன்மேல் அம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியை 15 யானைகள் தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதியில் நீர் தெளித்து வழிபட்டால் நாம் எடுத்துக்கொண்ட பணியில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தின் பிரகாரம் முழுவதும் சுற்றி வந்தால், ராமாயணக் காவியத்தின் சிறப்புகள் முழுவதும் புடைப்புச் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. கோவில்கள் அடிப்பாகம் ஒளியும், நிழலும் விழுமாறு மேடு பள்ளமாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தனுக்கு வழிபாடு நடைபெறுவது போல, இந்தக் கோவிலில் எமதர்மனுக்கு சிறப்பு வழிபாடு உண்டு. பவுர்ணமியில் காமாட்சிக்கும், அமாவாசையில் ராஜதுர்க்கைக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். பொதுவாக முருகப்பெருமான் மயிலில் அமர்ந்தபடியோ, அல்லது மயிலின் அருகில் நின்றபடியோ தான் ஆலயங்களில் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் திருவுருவம், ஐயப்பன் போல் குந்தளமிட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இவர் அருகில் இருக்கும் மயிலின் அலகில் பாம்பு ஒன்று காணப்படுகிறது. மற்றொரு பாம்பு படமெடுத்த நிலையில் முருகனுக்கு ஆதார பீடமாக உள்ளது.
சூலினி ராஜ துர்க்காம்பிகை சூலம், சங்கு ஏந்தி கொற்றவையாக மகிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் காட்சி தருகிறாள். இவள் எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு கத்தி, கேடயம் ஏந்தி, மகிஷன் கீழே வீழ்ந்துள்ள காட்சியும், அம்பிகை சூலினி இடது கரத்தால் மகிஷன் கொம்பை பற்றியும், இடது பாதத்தால் கழுத்தின் மீது மிதித்தும் சம்காரத்தில் அருள்புரியும் திருக்காட்சி மூலஸ்தான கருவறையில் கிழக்கு நோக்கி தமிழகத்தில் இத்தலத்தில் மட்டுமே காணமுடியும்.
ராகு கிரக அதிதேவதை ஸ்ரீ துர்க்கையை ஸ்ரீ தர்மர் முதலானோர் வழிபட்டு, இழந்த நாடு முதல் அனைத்தையும் பெற்றுள்ளார். ரத்னத்ரயம் எனும் வகையில் மூவகை சூலங்களுடன் காரண, காரணி, அதற்கான பலன் எனும் மூவகை பயன்களை அருளும் ஸ்ரீ சூலினியை முழுவதும் சந்தனக் காப்பு தோற்றத்தில் வருடத்தில் ஆடி 3 ம் செவ்வாய்க்கிழமை மதியம் 4.15 முதல் இரவு 9.15 வரை மட்டுமே தரிசிக்க முடியும். வார நாட்களில் பிரதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 5.30 வரையும் 5.30 முதல் 6 .00 மணி வரையிலும் கால பைரவர், ஸ்ரீ சூலினி வழிபாடு சிறப்புடன் நடைபெறுகிறது.
பைரவர் யந்திர வடிவில் சூரிய சந்திரன் அக்னி ஜூவாலையுடன் அருள்பாலிக்கிறார். சங்ககால மன்னரான அதியமான் நெடுமான் அஞ்சி முதல் பல பேரரசர்களால் இம் மகாபைரவர் வழிபாடு செய்யப்பட்ட மந்திர மூர்த்தி இவராவார். ஏழரையாண்டு சனி, அட்டமத்து சனி, இதர கிரகங்களால் ஏற்படும் தொல்லைகளை அடியோடு அகற்றுவார். பைரவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிறப்பு வழிபாடும் வளர்பிறை அஷ்டமி திதி, பிரதி சனி, ஞாயிறு நாட்களில் மாலை 5.30 முதல் 7.30 வரை வழிபாடும் நடைபெறும்.
வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி சங்க காலத்தில் அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கிய வரலாற்றுப் புகழ் பெற்ற தகடூர் தலம். திருமாலின் நான்கு அவதாரங்களான யோக நரசிம்மர், ராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணர் ஆகியோரால் வழிபட்ட தலம். ஆதியில் பாணாசுரனால் ஸ்தாபிக்கப்பட்ட தலம். சுந்தரர், சம்பந்தர், அவ்வை, அரிசில் கிழார், பொன்முடியார், பரணர், கபிலர், நாகையார், அதியன், விண்ணத்தனார் முதலிய புலவர்களால் பாடி பணியப்பட்ட திருத்தலம்.
தல வரலாறு : 9 ம் நூற்றாண்டிலே திருப்பணிகள் செய்யப்பட்ட கோயில். ராமன் தவமிருந்த இடம் இத்திருத்தலம். பாசுபத வரத்தை பெறும் பொருட்டு அர்ச்சுனன் தவம் இருக்கிறான். அவன் தவத்தை பரிட்சித்து பார்க்கும் பொருட்டு ஈசன் வேடன் ரூபம் கொண்டு வருகிறான். அப்போது அர்ச்சுனனுக்கும் வேடனுக்கும் சர்ச்சை நிகழ்ந்து சண்டை வருகிறது. “நீ என்ன பெரிய வேடனா.. என்று வில்லாலேயே சுவாமியை அர்ச்சுனன் அடிக்கிறான். பின்னர் வந்திருப்பது ஈசன்தான் என்பதை தெரிந்துகொண்டான் அர்ச்சுனன். பரத்வாஜ் ரிஷிகள் மூலம் தான் பெரிய பாவம் செய்துவிட்டதாக உணர்ந்து இங்கு வந்து தவம் செய்கிறான். இங்கு மல்லிகைப் பூ கொண்டு சிவபூஜை செய்ததால் சுவாமிக்கு மல்லிகார்ஜூனேசுவரர் என பெயர் வந்தது. சுந்தரரின் நண்பர் சேரமான் பெருமான் வடக்கிருந்து போகும்போது பூரி சித்தர் மூலம் தெரிந்து இங்கு வந்து வழிபாடு செய்துள்ளார். அதியமான் மூலம் இந்த கோயில் திருப்பணி செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
ஆடி மாதம் ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம் இத்திருத்தலத்தின் மிக சிறப்பான விழாவாகும். தவிர வெள்ளி சிறப்பு சந்தன காப்பு, பூப்பந்தல் சேவை ஆகியவை சிறப்பானவை. தை மாதம் சண்டி ஹோமம் 2 நாட்கள் விழா மார்கழி மாதம் சிறப்பு பூஜை விழாக்கள் வைகாசி தேரோட்டம் , வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி உற்சவம் ஆகியவை இத்தலத்தின் சிறப்பான நாட்கள் ஆகும். இத்தலத்தில் மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. ஆங்கில, தமிழ் புத்தாண்டு தினங்களன்று கோயிலில் மிக அதிக அளவு எண்ணிக்கையிலான பக்தர்கள் கூடுகிறார்கள்
இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பெரும்பாலும் பிரார்த்தனை செய்கிறார்கள். கடன் தொல்லை தீரவும் இத்தலத்தில் வேண்டுகின்றனர். இங்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக படிபூஜை செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாக உள்ளது. இங்குள்ள காமாட்சி சந்நிதியில் உள்ள 18 படிகளும் மிகவும் விசேஷமானவை.இந்த 18 படிகளுக்கும் மலர்களால் அலங்காரம் செய்து 16 விதமான பொருட்களால் அபிஷேகம் செய்து 18 படிக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து, ஜவ்வாது சந்தனம் கலந்து பூசி, முக்கனிகள் படைத்து, புடவை சாத்தி வழிபடுகிறார்கள். தவிர சுவாமிக்கு தேன்,நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.அம்பாளுக்கு புடவை சாத்துகிறார்கள். பக்தர்கள் அன்னதானமும் செய்கிறார்கள்.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : பெங்களூர், சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சேலம், ஜோலார்பேட்டை, குப்பம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை