அமானிமல்லாபுரம், சுயம்புலிங்கேஸ்வரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தர்மபுரி மாவட்டத்தின் அமானிமல்லாபுரம் எனும் ஊரில் உள்ளது.
இறைவன் : சுயம்புலிங்கேஸ்வரர்
தல சிறப்புகள் : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கே லிங்கேஸ்வரர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். குழந்தை தன் தாயிடம் தனக்கு தேவையான பொருளை கேட்கும்போது, பெற்ற தாய் சிரமப்பட்டாவது அதை வாங்கித்தருவதுபோல, இங்கு வந்து வழிபடுவோருக்கு லிங்கேஸ்வரர் தாயுள்ளத்துடன் வேண்டியதை அளிக்கிறார். சிவனின் முன்பு நந்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு : 1860ம் ஆண்டில் இப்பகுதியில் வசித்த சின்னவேடி செட்டியார் என்பவரின் கனவில் சிவபெருமான் தோன்றி, “”இங்குள்ள தோப்பில் லிங்கம் ஒன்று இருக்கிறது. அதை வைத்து எனக்கு கோயில் கட்டு. இப்பகுதியை சிறப்பாக பாதுகாப்பேன்” என உத்தரவிட்டார். பதறி எழுந்த செட்டியார் மறுநாளே கோயில் கட்டுவதற்கான பணிகளை துவங்கினார். அவருக்குரிய தென்னந்தோப்பில் இறை வனைத் தேடி அலைந்தார். லிங்கத்தைக் காணவில்லை. பிறகு ஒரு புளியமரத்தடிக்கு சென்று வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். என்ன செய்யலாம் என யோசனை செய்துகொண்டே ஒரு குச்சியால் எதேச்சையாக மண்ணை கிளறிக் கொண்டிருந்தார்.அப்போது குச்சியில் ஏதோ தட்டுப்பட இறைவனை நினைத் துக் கொண்டு மேலும் மேலும் தோண்டிப் பார்த்தார். உள்ளே லிங்கம் ஒன்று இருந்தது.அந்த லிங்கத்தை எடுத்து புளியமரம் இருந்த இடத்திலேயே கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது.
கோயில் கட்டுவதற்கு புளிய மரம் இடைஞ்சலாக இருந்தது. எனவே அதை அகற்ற முயன்றனர். அப்போது ஒரு துறவி அங்கு வந்து அந்த முயற்சியை கைவிடும்படி கூறிவிட்டு சென்றார். கோயில் கட்ட சரியான இடம் இல்லாததால் செட்டியார் குழப்பத்துடன் வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் மண்ணை தோண்டி லிங்கத்தை எடுத்து வேறு இடத்திற்கு கொண்டுசெல்ல முடிவு செய்தார். ஆனால் லிங்கம் லேசாக அசைந்துகொடுத்ததே தவிர, மண்ணைவிட்டு வெளியே வர மறுத்தது. மேலும் ஒரு புறமாக சாய்ந்து விட்டது.வேறு வழியில்லாததால் சுற்றிலும் இருக்கும் மண்ணை மட்டும் அகற்றிவிட்டு அந்த இடத்திலேயே கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நேரத்தில் கடும் மழை, மின்னல் ஏற்பட்டது. அந்த மின்னலில் புளியமரம் தாக்கப்பட்டு இரண்டாக பிளந்து கீழே விழுந்தது. இதனால் கோயில் கட்டுவதற்குரிய தடை நீங்கியது. அந்த இடத்திலேயே லிங்கேஸ்வரருக்கு கோயில் எழுப்பப்பட்டது. தானாக கிடைத்த லிங்கம் என்பதால் சுவாமிக்கு “சுயம்புலிங்கேஸ்வரர்’ என பெயரிடப்பட்டது.
இங்கு மாதத்தில் இரண்டுநாள் பிரதோஷபூஜை , மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, சிறப்பாக நடக்கிறது.திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : பெங்களூர், சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சேலம், ஜோலார்பேட்டை, குப்பம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை