பவானி, காயத்ரி லிங்கேஸ்வரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தின் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் ஈரோடு சந்திப்பிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இறைவன் : காயத்ரி லிங்கேஸ்வரர்
தல விருட்சம் : இலந்தை மரம்
தல சிறப்புகள் : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மூன்று நதிகள் பாய்வதால் “தீர்த்த சங்கமம்’ என்றும், ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் “சேத்திர சங்கமம்’ என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகஸ்ர லிங்கேஸ்வரர் மற்றும் காயத்ரி லிங்கேஸ்வரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கினைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இத்தலத்தை சுற்றிலும் சங்ககிரி மலை, திருச்செங்கோட்டில் உள்ள நாககிரி, பெருமாள் மலையில் உள்ள மங்கலகிரி, ஊராட்சிகோட்டையில் உள்ள வேதகிரி மற்றும் காவிரியாற்று ஓரம் பதுமகிரி ஆகிய மலைகளுக்கு நடுவே இருப்பதால் பாவனி தலம் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்’ என அழைக்கப்பட்டது.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலைச் சுற்றிலும் பல்வேறு லிங்கங்கள் இருந்தாலும், கோயில் வளாகத்திலேயே காவிரியாற்றோரம் “காயத்ரி லிங்கேஸ்வரர்’ தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கிச் சென்றால் வேண்டிய வரங்களை உடனே பெறலாம். பராசர முனிவர், குபேரர், சூரியன் ஆகியோர் மூலஸ்தானம் வந்து வணங்கிச் சென்றனர். காயத்ரி லிங்கேஸ்வரர் முன்னால் சென்று, காயத்ரி மந்திரத்தை சொல்லத் தகுதியுடைய உச்சரிப்பு பிறழாமல் சொல்லக்கூடியவர்கள், ஒரு தடவை சொன்னால் போதும், லட்சம் தடவை சொன்ன பலன் கிட்டும்.
தல வரலாறு : இத்தலத்தின் தல விருட்சமான இலந்தை மரத்தின் அடியில்தான் பராசர முனிவர் தனது ஆசிரமத்தை நிறுவி தினமும் இறைவனை வணங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சங்மேஸ்வரரை வணங்குவதற்கு முன், சற்று தூரத்திலுள்ள காவிரியாற்று ஓரம் சென்று தினமும் நித்யகர்ம அனுஷ்டானத்தை தொடர்ந்து செய்து வந்தாராம். அதுபோல் அவர் தொடர்ந்து அந்த இடத்தில் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து 12 ஆயிரம் கோடி முறை உச்சரித்த காரணத்தால், “காயத்ரி லிங்கேஸ்வரர்” அங்கே தானாகவே தோன்றினார்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ஈரோடு, ஊத்துக்குளி, சேலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை