நன்னிலம், பரமசுந்தரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அச்சுதமங்கலம் திருவீழிமிழலை சாலையில் 2 கி.மி தூரம் வந்து இடதுபுறம் செல்லும் சிறிய கிராம சாலையில் திரும்பி 2 கி.மி பயணம் செய்தால் புத்தகளூர் அடையலாம்.
இறைவன் : பரமசுந்தரர்
இறைவி : பரமேஸ்வரி
தல சிறப்புகள் : வேறு எங்கேயுமே காணமுடியாத அழகான சிலை. தெட்சிணாமூர்த்தி பின்புறமே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிலையின் பின்புறம் கல்வெட்டு இருப்பது அதிசயமாகும். மற்ற சிலைகள் எதுவும் காணப்படவில்லை. கோயிலின் அருகே நிறைய புற்றுகள், பாம்புகள் இருப்பதாலும், செவ்வாய், வெள்ளி பாம்புக்கு பால் ஊற்ற இராகு, கேது, நாக தோஷம் போகும் என்கின்றனர். இது இராகு, கேதுவிற்குரிய பரிகாரஸ்தலங்களில் ஒன்றாகும்.
தல வரலாறு : திருவாரூர், நன்னிலம் தாலுகாவில் இருக்கிறது வாழ்க்கை புத்தகளூர். இந்த ஊரில் அல்லி குளக்கரையில் வயலின் நடுவில் ஒரு சின்னக் கீற்றுக் கொட்டகையில் குடியிருந்தார், பரமேஸ்வரி சமேத பரமசுந்தரர். தன்னைச் சுற்றி ஒரு புற்று சூழ, அதில் ஒரு நாகமும் தவழ கடுந்தவம் மேற்கொண்ட ஒரு மாமுனிவரின் பக்தியை மெச்சி அவருக்கு பரமசுந்தரர் காட்சி கொடுத்தார். அதனாலே இத்தலம் புற்றகளூர் என்றாகி, இன்று வாழ்க்கை புத்தகளூராய் மறுவி உள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புத்தகை என்ற மகாமுனிவர் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். சில நாட்களில் அவரைச் சுற்றி புற்றுகள் சூழ்ந்தது. அவரது கை மட்டும் இந்த சிவனை (ஸ்ரீ பரமசுந்தரர்) நோக்கியே இருந்தது. ஓம் நமச்சிவாய என்ற ஒலி மட்டும் வந்ததாகவும், அவருடைய தல வலிமையை மெச்சிய சிவன் அவருக்கு தரிசனம் தந்து, இங்கு எழுந்தருளினார் என்றும் கூறப்படுகிறது. எம்பெருமான் இம்முனிவருக்கு காட்சி அளித்ததால் இந்த ஊர் திருப்புத்தகை என்றும் நாளடைவில் புத்தகளூர் என மருவி வழங்கப்படுகிறது. இதற்குச் சான்றாக இன்றும் இந்த ஊரில் நிறைய பாம்புகளும், பாம்பு புற்றுகளும் காணப்படுகின்றன. பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை.
கோவில் அமைப்பு : இக்கோயிலில் இறைவன் இறைவி நந்தி, தட்சணாமூர்த்தி தவிர பிற தெய்வங்கள் புதிதாக உருவாக்கப்பட்டவை. . தென்மேற்கில் விநாயகர் உள்ளார் கருவறையின் பின்புறம் முருகனும் வள்ளி தெய்வானையும் உள்ளனர். வடக்கில் சண்டேசர் சன்னதி உள்ளது. இறைவனின் நேர் எதிரில் நந்தி உள்ளது. கல்வெட்டு தகவலின்படி இன்றும் இந்த ஊர் கோயிலானது 10வது பாம்பு ஊர் என்று கூறப்படுகிறது. திருநாகேஸ்வரம், திருபாம்பிரத்திற்கு இணையாக பாம்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கோயில் அருகே நிறைய பெரிய பெரிய புற்றுகள் உள்ளன. இன்றும் ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் பாம்பானது சிவன்மேல் எந்தவித பயம் இல்லாமல் படுத்துக்கொண்டு மக்களுக்கு காட்சி அளிக்கிறது. அடிக்கடி சிவன் அருகிலே பாம்பானது சட்டை உரிப்பதும் ரொம்ப அதிசயமாகும். ஆனால் எத்தனை புகைப்படம், எப்படி எடுத்தாலும் பாம்பு மாத்திரம் காட்சி அளிக்கவில்லை என்பது உலக அதிசயம்.
இந்த நிகழ்வுக்கு சான்றாக தெட்சிணாமூர்த்திக்கு பின்புறம் கல்வெட்டு உள்ளது. அதன்படி கி.பி. 917 ஆம் ஆண்டு முதலாம் பராந்தக சோழனால் திருப்பணி செய்யப்பட்டது, என்றும் இந்த கோயிலுக்காக நிறைய தானங்கள் அவன் கொடுத்தாகவும் தகவல் உள்ளது. பரமசுந்தரர், அமரசுந்தரர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அங்குள்ள குருவானவர் ஞானகுரு என்றும் ஞானகாரகன் என்றும் தெரிவிக்கிறது. கல்வெட்டுக்கள் மூலம் சுவாமி பரமசுந்தரர் என்று அறியப்படுகிறது. மிகவும் அழகாக, நேர்த்தியாக ஆவுடையாருடன் காட்சி அளிக்கிறார். அம்பாள் மிகவும் அழகான தோற்றத்துடன் லட்சணமாக காட்சி அளிக்கிறாள்.
தெட்சிணாமூர்த்தி இங்கு ஞானகுருவாக உள்ளதால் நமக்கு ஞானத்தையும், கல்வி அறிவினையும், மனஅமைதியும் கொடுக்கின்றார். அவரை வியாழக்கிழமைகளில் வழிபட மனக்குழப்பம் நீங்கி சித்தம் தெளியும் என்பது நம்பிக்கை. பரமேஸ்வரியை ஞாயிறு அன்று வழிபட கல்யாணம் நடைபெறுவதாக கூறுகின்றார்கள். சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
.
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர், நாகப்பட்டினம், நீடாமங்கலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை