சேர்ந்த பூமங்கலம் , கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரிலிருந்து வடக்கில் சுமார் 15கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து தெற்கே 20 கி.மீ தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது. திருச்செந்தூரில் இருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில் ஆத்தூரில் இருந்து 3 கி.மீ.தொலைவில்அமைந்துள்ளது.
இறைவன் : : ஸ்ரீகைலாசநாதர்
இறைவி : ஸ்ரீசௌந்தர்யா நாயகி
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : தாமிரபுஷ்கரணி
தல சிறப்புகள் : இத்திருக்கோயிலை வழிபடுவது தஞ்சாவூர் அருகில் உள்ள கஞ்சனூர் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது. இத்தலத்திற்கு அருகில் தான் தாமிரபரணியாறு கடலில் கலக்கும் சங்குமுகம் என்ற இடம் உள்ளது. தாமிரபரணியாறு மூன்று வாய்க்கால்களாகப் பிரிந்து வந்து இவ்விடத்தில் ஒரே இடத்தில் சங்கமம் ஆகிறது. இவ்விடத்தில் அகஸ்தியர் போன்ற முனிவர்களும் , தவசிகளும் நீராடி சிவனை வழிபட்டுள்ளனர். இத்தலத்தின் இறைவன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார். அகத்தியர் தனது சீடர் உரோமச முனிவருக்காகத் தாமிரபரணி ஆற்றில் விட்ட ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம். இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள்.
அடிக்கடி தாமிரபரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டாலும் இத்திருக்கோவில் எவ்வித பாதிப்புமின்றி கம்பிரமாக நிற்கிறது. சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும் , அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் உள்ளது. கோவிலில் கொடிமரமும் , கருவறைகளின் மீது அழகிய விமானங்களும் அமைந்துள்ளன. இக்கோவில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்த திருமங்கலம் என்று உள்ளது. சுவாமி அம்பாள் திருச்சுற்றில் , சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி , கன்னி விநாயகர் , வள்ளி தெய்வானையுடன் முருகன் , நவக்கிரகங்கள் , சனீஸ்வரர் மற்றும் பைரவர் ஆகியோர் உள்ளனர். சுக்கிர பகவானின் முழுமையான அருள்பெற்ற தலமாகும். இக்கோவிலுக்கு அடிக்கடி சென்று இறைவனை தரிசித்துவந்தால் , சுக்கிர திசை யோகம் வரும் என்பர். வாழ்வில் எல்லாச் சிறப்புகளையும் பெற்று, பெரும் புகழும், செல்வமும் பெற்று வாழலாம். எல்லாக் கோவில்களிலும் சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி பெரும்பாலானவற்றில் தெற்கு நோக்கியே அமைந்துள்ளது. அனைத்துக் கோவில்களிலும் கன்னி விநாயகர் வீற்றிருக்கிறார். உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்த சிவனைச் சுற்றி பாண்டிய மன்னர்கள் கோயில் கட்டி பராமரித்துள்ளனர். எல்லாக் கோவில்களிலும் பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
கருவறை விமானத்தில் குபேரன் இரு மனைவியரோடு யானை மீது இருக்கிறார். கன்னி விநாயகர், சந்திரன், சூரியர், மீனாட்சி, சொக்கநாதர், சனீசுவரர், பைரவர் சந்நிதிகளும், முருப்பெருமான் சன்னதியில் வலப்புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் இருக்கிறார். இக்கோயில் 1000 வருடங்கள் தொன்மையானது. இதனை குலசேகரப் பாண்டியன் அல்லது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் கட்டியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம் உள்ளது. இக்கோயில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்தமங்கலம் என்றும் அவனிய சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர். சேந்தன் என்று குறிப்பிடப்பட்ட பாண்டியன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்டது.
தினந்தோறும் காலை 7.30 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகில் உள்ள ரயில் நிலையம் : திருச்செந்தூர், தூத்துக்குடி
அருகில் உள்ள விமான நிலையம் : தூத்துக்குடி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை