இடைக்காட்டூர், ஆழிகண்டீசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை வட்டத்தைச் சேர்ந்த கிராமமாகும். சிவகங்கையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.
இறைவன் : ஆழிகண்டீசுவரர், மணிகண்டீசுவரர்
இறைவி : வௌந்தர்யநாயகி
தல தீர்த்தம் : வைகை
தல விருட்சம் : வில்வம்
கோவில் அமைப்பு : இவ்வூரில் தனிக்கோயிலில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு இடைக்காடர் தவ நிலையில் காணப்படுகிறார். இறைவன், இறைவி சன்னதிகளுக்கு நடுவில் சோமாஸ்கந்தர் நிலையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். இறைவி தனி சன்னதியில் காணப்படுகிறார். முற்காலத்தில் நந்தர் யசோதை எனும் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் இவர் இல்லறம் துறவறம் எனும் இடைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர் ஆதலால் இவர் இடைக்காடர் என்றழைக்கப்பட்டார். இடைக்காடர் சிவனை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து சிவனருளால் சித்தர்களில் ஒருவரானார் பின் சிவனோடு ஐக்கியமானார்.
தல வரலாறு : மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்ததாக கணிக்கப்பட்டுள்ள இடைக்காடர் சித்தர் சுமார் 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தில் அருள் அலைகள் நிரம்பி இருப்பதற்கு அங்கு அவரது ஜீவ சமாதி அமைந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்றும் திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தர் அருள்புரிந்து வருகிறார். இடைக்காடர் திருவிடைமருதூரில் சமாதியில் வீற்றிருப்பதாக போகர் தனது ஜனன சாகரத்தில் கூறியுள்ளார். சிலர் சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீசுவரர் ஆலயத்தில் இடைக்காடர் சித்தர் ஜீவ சமாதி ஆகி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த ஆலயத்தில் இடைக்காடர் தவக்கோலத்தில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள். திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி 5 இடங்களில் இருப்பதாக பேசப்படுகிறது. இடைக்காடர் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர். எனவே திருவாதிரை தினத்தன்று பலரும் அங்கு வந்து வழிபடுவதை காணலாம். சமீப காலமாக திருவாதிரை நட்சத்திரகாரர்களும் இங்கு தேடி வந்து வழிபடுகிறார்கள்.
இடைக்காடரின் இந்த ஒளிசமாதியில் ஒரே ஒரு நெய்தீபம் ஏற்றி வைத்து மனமுருக வழிபட்டாலே நீங்கள் கேட்டதை எல்லாம் இடைக்காடர் நிச்சயம் தருவார். புரட்டாசி மாதம் திருவாதிரை தினத்தன்று இங்கு பூஜைகள் நடத்தும்போது ஜோதி தானாக எரியும் அதிசயம் நடைபெறும். அதோடு அன்றைய தினம் மழை பெய்யும். இவையெல்லாம் இடைக்காடர் இப்போதும் இருக்கிறார் என்பதற்கான உதாரணங்களாகும். இடைக்காடர் நவக்கிரகங்களில் புதன் பகவானை பிரதிபலிப்பவர். எனவே இவரை முறைப்படி வழிபட்டால் ஜாதகத்தில் புதன் பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்ல பலன்கள் கிட்டும். வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், ஆசிரியர்கள் இடைக்காடரை வழிபட்டால் பிரச்சினைகள் நீங்கி பலன் பெற முடியும். இடைக்காடருக்கு பிடித்தது பச்சை நிறமாகும். எனவே அவருக்கு பச்சை நிறத்தில் வஸ்திரம் அணிவித்து வழிபடலாம். பங்குனி உத்திரம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தின்போது 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மானாமதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை