பட்டமங்கலம், தட்சிணாமூர்த்தி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் ஒரு குருதலமாக விளங்குகிறது. மதுரையில் இருந்து 65 கி.மீ தூரத்திலும், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ தொலைவிலும் திருப்பத்தூர் உள்ளது. இங்கிருந்து 8 கி.மீ தூரம் சென்றால் ஊரை அடையலாம்.
இறைவன் : தட்சிணாமூர்த்தி
இறைவி : நவையடிக் காளி
தல தீர்த்தம் : பொற்றாமரை
தல விருட்சம் : ஆலமரம்
தல சிறப்புகள் : இங்குள்ள சிவலிங்கத்தின் பின்புறமுள்ள உள்தலத்தில் கிழக்கு நோக்கி ஐந்து முகங்கள் கொண்ட முருகன் சன்னதி இங்குள்ளது. சிவனின் அம்சம் கொண்டவர் என்பதால் சிவனுக்குரிய ஐந்து முகங்களுடன் இருக்கிறார். அருகில் வள்ளி, தெய்வானை உள்ளனர். இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம். இங்கு சிவபெருமான் குரு வடிவில் வந்து கார்த்திகை பெண்களின் சாபத்தை போக்கினார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே பிரதானமான தெய்வம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். ஆலமரத்தை தலவிருட்சமாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப்போல பொற்றாமரைக் குளத்தையும் கொண்டு அமைந்திருக்கும் சிறப்புமிக்க ஆலயமாக இது திகழ்கிறது.
தல வரலாறு : கைலாய மலையில் சிவபெருமான் பார்வதியுடன் வீற்றிருந்தார். அப்போது அங்கு கார்த்திகை பெண்கள் ஆறு பேர் அங்கு வந்தனர். அவர்கள் சிவனிடம் தங்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்குமாறு வேண்டினர். அவர்களிடம் சிவபெருமான் சிவயோகிகள் யாரும் சித்திகளை விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களிடம் இச்சித்திகள் நிழல்போல் உடலோடு ஒட்டிக் கொண்டு அவர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் என்றார். அப்போது பார்வதி தேவி அவர்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்கும்படி சிவனிடம் வேண்டினார். இதனால் சிவன் கார்த்திகை பெண்களிடம் உங்களுக்கு பராசக்தியாக விளங்கும் பார்வதிதேவி அஷ்டமாசித்தியை உபதேசிப்பார் என்று கூறி பார்வதியிடம் அவர்களுக்கு இச்சித்திகளை உபதேசிக்கும் படி கேட்டுக்கொண்டார். ஆனால் கார்த்திகை பெண்களோ, பார்வதிதேவியை சிந்தனை செய்யாமல் அவள் சொன்ன அஷ்டமா சித்தியை பற்றிய உபதேசத்தை கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சக்தி கார்த்திகை பெண்களை பாறைகளாக கிடக்க கடவீர்கள் என சாபமிட்டார். இதை கண்டு அஞ்சிய பெண்கள் சிவபெருமானிடம் சாபவிமோசனம் வேண்டினர். அவர்களிடம் சிவபெருமான் நீங்கள் பட்டமங்கலத்தில் ஆலமரத்தரடியில் கற்பாறைகளாக இருங்கள். யாம் மதுரையில் இருந்து குருவடிவில் வந்து உங்களுக்கு சாபவிமோசனம் கொடுப்போம் என்றார்.
அதன்படி ஆறுகார்த்திகை பெண்களும் அங்கு பாறைகளாக ஆயிரம் ஆண்டுகள் கிடந்தனர். ஏற்கனவே கூறியபடி சிவபெருமான் வந்தபோது குருவடியில் பட்டமங்கலம் வந்து கார்த்திகை பெண்களின் சாபத்தை போக்கினார். பின்னர் அவர்களுக்கு அஷ்டமா சித்திகளை உபதேசித்தார். அதன்பின் கார்த்திகை பெண்கள் சிவனையும் பார்வதியையும் பூஜித்தனர். கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசித்த சிவபெருமான் இங்கு தட்சிணாமூர்த்தியாக ஆலமரத்தடியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பட்டமங்கலம் சுந்தரேசுவரர் கோவிலுக்கு வெளியில் இந்த தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது.
இதற்கிடையே பார்வதிதேவி கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்கும் படி சிவனுக்கு பரிந்துரை செய்ததால் சிவன் கோபத்திற்கு ஆளாகி காளியாக உருவெடுத்து பட்டமங்கலத்தில் நாவல் மரத்தடியில் கோவில் கொண்டாள். அந்த காளிக்கு நவ்வலடி காளி என்று பெயர். அவளுக்கும் சிவபெருமான் விமோசனம் கொடுத்தார். அதன்பின் அவர் காளி வடிவம் நீங்கி சவுந்தரி அம்மனாக காட்சி அளித்தார். இத்தலத்தில் சுந்தரேஸ்வரராக சிவனும், மீனாட்சியாக பார்வதியும் உள்ளனர்.
கோவில் அமைப்பு : சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் முப்பத்து மூன்றாவது திருவிளையாடல் நடந்த தலம் தான் பட்டமங்கை எனப்படும் பட்டமங்கலம். இத்தலத்து ஆலமரம் மிகவும் விசேஷமானது. திருமால் பன்றியாகவும், பிரம்மா அன்னமாகவும் இருக்க, புன்னகை தவழும் முகத்துடன் பிறைமதி, கொன்றை, வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞான முத்திரையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, இடது கீழ்க்கரத்தை தொடையில் வைத்தபடி தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். காளி வடிவில் உமை இங்கு உள்ளார். எல்லா கோவில்களிலும் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்கு கிழக்கு நோக்கி அருள்கிறார். கல்லால் ஆன ஆலுமரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்குதான் உண்மையான ஆலமரத்தடியில் உள்ளார். இவரை வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்தியுடன், சன்னதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து 12 முறை வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும். இங்கு வழக்கமாக வியாழக்கிழமை பக்தர்கள் ஏராளமானோர் சென்று வழிபடுவர். குருப்பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தட்சிணாமூர்தியை வணங்கினால் குருவின் அருள் கிட்டும். குருதோஷம் விலகும். பக்தர்கள் இந்த மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் குரு தட்சிணாமூர்த்தி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதியின் முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது.
ஆலயத்தை 3 முறை பிரதட்சணம் செய்தால் விரும்பிய காரியம் நடக்கும். 5 முறை செய்தால் காரிய வெற்றி கிடைக்கும். 7 முறை செய்தால் நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி ஏற்படும். 9 முறை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். 11 முறை செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படும். 15 முறை செய்தால் செல்வம் பெருகும். 1008 முறை செய்தால் தாம் விரும்பிய பெண்ணை மனைவியாக அடையலாம் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பத்தூர், சிவகங்கை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை