பிரமனூர், கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் மதுரையில் இருந்து 23 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : காமாட்சியம்மன்
தல தீர்த்தம் : பாவநாச தீர்த்தம்
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : பிரம்மதேவன் கைலாயமலை சென்று அம்மை அப்பனை வணங்கி லிங்கம் கொண்டுவந்து வைத்து இத்தலத்தில் ஆராதனை செய்தமையால் இங்குள்ள மூலவர் கைலாசநாதர் எனப்படுகிறார். இங்கு இறைவனுக்கு இரண்டு கால பூஜை நடைபெறுகிறது மற்றும் எல்லா விஷே காலமும் பூஜை நடைபெறும். திருக்கார்த்திகை அன்று தாழ மரத்தை நடுவில் ஊன்றி சொக்கப்பனை ஏற்றுவது இங்கு தனிச்சிறப்பு.
தல வரலாறு : பிரம்மதேவன் பூலோகம் வந்து கைலாய மலையிலிருந்து இறைவனை ஆராதனை செய்து லிங்கம் கொண்டுவந்து வணங்கி பூசித்தான். தன் திருநாமம் இந்த ஊருக்கு வேண்டும் என கேட்டுக்கொண்டதால் இந்த ஊருக்கு பிரமனூர் என பெயர் ஏற்படக் காரணமாயிற்று.இறைவன் திருவிளையாடல் பல, அதில் அடிமுடி காணும் படலத்தின் வாயிலாக இறைவனின் சிறு திருவிளையாடல். காக்கும் கடவுளாகிய மகாவிஷ்ணுவிற்கும், படைக்கும் கடவுளாகிய பிரம்மதேவனுக்குமிடையே யார் பெரியவன் என்ற போட்டி ஏற்படுகிறது. இதை தீர்த்துவைக்க யாராலும் முடியவில்லை. அப்போது சிவபெருமான் நெருப்பு மலையாக தோன்றி காட்சி தருகிறார். இருவருக்கும் சர்ச்சை தீரவில்லை. உடனே சிவபெருமான் "யார் ஒருவர் என் சிரசையோ அல்லது பாதத்தையோ விரைவாக தரிசனம் செய்கிறாரோ அவரே பெரியவர் எனக்கூற, காக்கும் கடவுளாகிய விஷ்ணு பன்றி உருவம்பூண்டு பூமியை துளைத்து பாதத்தைப் பார்க்க செல்கிறார். படைக்கும் கடவுள் பிரம்மன் அன்ன வாகனம்பூண்டு ஆகாயம் நோக்கி முடியைக்காணச் செல்கிறார். ஆயினும் அவர்களால் சிவனின் சிரசையோ அல்லது பாதத்தையோ தரிசிக்க முடியவில்லை. பிரம்மதேவன் செல்லும் வழியில் சிவனின் சிரசிலிருந்து விழும் தாழம்பூவைச் சந்திக்க நேர்கிறது. உடனே பிரம்மன் தாழம்பூவிடம் தாம் சிவனின் சிரசைப் பார்த்ததாக பொய் சொல்லச் சொல்கிறார். தாழம்பூவும் சம்மதிக்கிறது. அதே சமயம் விஷ்ணுவோ எவ்வளவு முயன்றும் தம்மால் சிவனின் பாதத்தைக் காணமுடியாதது கண்டு தன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் சரணடைகிறார். பிரம்மதேவனோ தனக்கு சாட்சியாக தாழம்பூவை வைத்து சிரசை பார்த்ததாக கூற இறைவன் கோபம் கொண்டு பிரமனுக்கும் தாழம்பூவுக்கும் சாபம் கொடுக்கிறார். எனவே தான் பிரம்மதேவனை மூலவராகக் கொண்டு கோவில்களில் வழிபடும் பழக்கமில்லை. சாபவிமோசனம் வேண்டி நீ என்னை பூலோகம் சென்று வழிபட வேண்டும் எனவும், தாழம்பூ இனி சிவபூஜைக்கு ஆகாது எனவும் சிவபெருமான் கூறுகிறார்.
கோவில் அமைப்பு : இவ்வாலயத்தில் சூரிய பகவான் சிலை மிகவும் பழமை வாய்ந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் உள்ளது. இதன் உயரம் சுமார் 6 அடி இந்த சூரியபகவான் இறைவனை பார்த்த வண்ணம் சுவாமியின் இடப்பாகம் உள்ளது. மிகவும் அரியது. இறைவனுக்கு வலப்பாகத்தில் தான் மற்ற இடங்களில் உள்ளது. அதிலும் 6 அடி உள்ளது மிகவும் அரிது. இதைப்போல் இந்தியாவில் வேறு எங்கும் இருப்பது அரிது. பிரமனூர் கோயிலின் பழைய அமைப்பைக் காணயியலவில்லை. முற்றிலும் புதிதாகக் கட்டியுள்ளனர். பழைய கற்கள் எல்லாம் அருகே ஒரு குவியலாகக் கிடக்கின்றன. சில கற்களைப் புதுப்பித்து சிவலிங்கத்தின் கருவறையின் அடித்தளமாகக் கட்டியுள்ளனர். கோயிலில் தென்மேற்கு மூலையில் இருந்த விநாயகர் சிலை பின்னமடைந்து இருந்ததால் அதனைக் கோயில் வாயில் அருகை வைத்துள்ளனர். பக்கவாட்டில் பார்த்தால், இந்தப் பிள்ளையார் மிகவும் சிரித்த முகமாகக் காணப்படுகிறார்.
பிரமனூரில் பெருமாளுக்கென்று ஒரு கோயில் இருந்ததும் அப்பெருமாள் கோயில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக இருந்து வந்திருப்பதும் தெரிகிறது. ஆனால் இக்கோயில் தற்போது பிரமனூரில் இல்லை. மதுரையின் கிழக்கு எல்லை திருப்பூவணமாகும். எனவே கிழக்கு வாயில்வழியாக நகருக்குள் நுழைந்து வழிபட வேண்டும் என்றால், முதலில் திருப்பூவணம் வந்து வழிபட்ட பின்னரே மதுரையில் வழிபடுவது சிறப்புடையதாக அமையும். திருஞானசம்பந்தரும் இவ்வாறே திருப்பூவணம் வந்து வழிபட்டபின்னரே மதுரை சென்று சமணர்களை வென்றார்.
திருப்பூவணத்தில் திதி தர்பணம் எல்லாம் வைகையாற்றின் கரையில் வைத்துச் செய்கின்றனர். சிவனது சந்நிதிக்கு எதிரே ஓடும் வைகையாற்றிற்குப் “பாவநாச தீர்த்தம்“ என்று பெயர். தாழம்பூ சிவபெருமானிடம் பொய் சொன்ன பாவம் இந்தத் தீர்த்தத்தில்தான் நீங்கப்பெற்றது. இந்த இடத்தில் ஓடும் வைகையாற்றுத் தண்ணீர் மீண்டும் வைகையாற்றில் சேராது. இந்தப் “பாவநாச தீர்த்தம்“ உள்ள இடத்திலிருந்து “பிரமனூர் கால்வாய்“ ஆரம்பமாகிவிடும். எனவே பாவநாச தீர்த்தமானது பிரமனூர் கால்வாய் வழியோடி பிரமனூர் கண்மாயைச் சென்றடையும். பிரமனூர் கண்மாய்க் கரையில்தான் இக்கோயில் உள்ளது. அதாவது திருப்பூவணத்தில் ஒருவருக்குத் திதி தர்பணம் முதலான செய்யப்பட்டால், கொடுக்கப்பட்ட பிண்டம் பிரமனூர் கண்மாயைச் சென்றடையும். எனவே திருப்பூவணத்தில் திதி தர்பணம் கொடுப்போர் பிரமனூர் சென்று வழிபட்டால் அவர்களது பூஜை முற்றும் பெறும் எனக் கருதலாம்.
இதுபோல் மற்றொரு தொடர்பும் உள்ளது. திருப்பூவணத்தில் பூமிக்குள் புதைந்திருந்த சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து முதன்முதலில் பூஜை செய்து வழிபட்டவர் உமாதேவியார். அந்தச் சிவலிங்கத்திற்கு முதற் திருப்பணி செய்து கோயில் கட்டியவர் பிரமதேவன் ஆவார். திருப்பூவணம் கருவறை விமானம் பிரமதேவனால் கட்டப்பெற்றது. பின்னர் சூரியனாலும் மற்றும் பல்வேறு மன்னர்களாலும் புதுப்பிக்கப் பெற்றுள்ளது.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை