கத்ரி, மஞ்சுநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தென் கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கத்ரி மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
இறைவன் : மஞ்சுநாதர்
தல சிறப்புகள் : தென்னிந்தியத் திருக்கோயில்களில் மிகவும் பழமை வாய்ந்த, உலோகச் சிலை என்று இந்த ஆலய மூலவரின் திருவுருவச் சிலையைக் குறிப்பிடுகிறார்கள். இச்சிலை மீது எத்தனை தண்ணீர் ஊற்றினாலும் உடனடியாக வழிந்தோடி, தண்ணீர் ஊற்றியதற்கான அடையாளமே இல்லாமல் போகிற அதிசயத்தை இங்குக் காணலாம்.
தல வரலாறு : வாழை வனமாக ஒரு காலத்தில் இருந்த இந்த இடத்தில்தான் மஞ்சுநாதர் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசின் கல்வெட்டுக்களில் கத்ரி என்ற பெயர் ‘கதலி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காச்யப முனிவரிடம் க்ஷத்ரியர்கள் பிரியமாக இருந்ததாலும், காச்யபருக்கு நிறைய நிலங்களை க்ஷத்ரியர்கள் தானமாக அளித்ததாலும் சஹ்யாத்ரியில் வசித்து வந்த பரசுராமருக்கு க்ஷத்ரியர்கள் மீது அளவற்ற கோபம் ஏற்பட்டது. அதனால் கண்ணில் பட்ட க்ஷத்ரியர்களைக் கொன்றார். பிறகு, சிவனை நோக்கித் தவமிருந்தார். சிவபெருமான் பரசுராமரை கத்ரி க்ஷேத்திரம் சென்று தவம் இருக்குமாறும் உலக நன்மையை உத்தேசித்து, தான் மஞ்சுநாதராக கத்ரிக்கு வருவதாகவும் உறுதியளித்தார். அதே போல் பரசுராமர் கத்ரி சென்று தவம் மேற்கொண்டார். சிவபெருமானும் மஞ்சுநாதராக பார்வதி தேவியுடன் கத்ரி வந்து உறைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆரம்பித்தார். இதன்பின், பரசுராமர் தன் கோடரியைக் கடலில் வீசி எறிந்தார். பின், கத்ரியில் அமர்ந்து தவத்தில் ஈடுபட்டார்.
கி.பி.968ம் ஆண்டில் மன்னர் குந்தவர்ம பூபேந்திரன் காலத்தில் உருவாக்கப்பட்ட அற்புதமான திரிலோகேஸ்வரர் திருவுருவச் சிலை உள்ளது. பத்மாசனக் கோலத்தில் உள்ள, பஞ்ச லோகத்தினால் செய்யப்பட்ட இச்சிலை, இந்தியாவில் உள்ள உலோகச் சிலைகளிலேயே மிகவும் பழமையான சிலை என்கிறார்கள். ஆறு கரங்களும் மூன்று திருமுகங்களுமாக அமைந்த இது, ‘கதரிகா விஹாரை’யில் நிறுவப்பட்டதாக சரித்திரக் குறிப்பு உள்ளது.
கோவில் அமைப்பு : 10-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம், 14ம் நூற்றாண்டில் கருங்கல் கட்டிடமாக ஆக்கப்பட்டது. இவ்வாலயத்தின் இரண்டு மூர்த்தங்களைப் பற்றிக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். தெற்குப் பக்கத்தில், பத்மாசனத் திருக்கோலத்தில் அமர்ந்துள்ள மத்ஸ்யேந்திரநாதர். மடித்த கால்களுக்கு மேல் இரு கைகளையும் சேர்த்து வைத்துக் காட்சியளிக்கும் இந்த மூன்றரை அடி உயரச் சிலைக்கு, கிரீடமும் காதணியும் மாத்திரமே ஆபரணங்கள். வடக்குப் பகுதியில், நிறைய ஆபரண அணிகலன்களுடன், அதே பத்மாசனக் கோலத்தில், நான்கு கரங்களுடன் காட்சியளிப்பவர்... சவுரங்கிநாதர். இவருடைய தலைக் கிரீடத்தைச் சுற்றியபடி ஒரு பாம்பு காட்சியளிக்கிறது. மஞ்சுநாதர் ஆலயம் சதுர அமைப்பில், பிரமிட் வடிவக் கூரையுடன் அமைந்துள்ளது.
மஞ்சுநாதர் ஆலயத்தின் பின்புறம் ஒரு மேடான பகுதியில் புனிதமான் ஏழு நீர்க் குளங்கள் உள்ளன. அருகில் இயற்கையான ஓர் நீரூற்று. இதற்கு கோமுகம் என்று பெயர். பக்தர்கள் ஆலயத்துக்குள் செல்லுமுன் இங்கு வந்து கை, கால் முகம் கழுவிய பின்னரே உள்ளே நுழைகிறார்கள். ஆலயத்தின் நுழைவுவாயிலில் மிக உயரமானதொரு தீபஸ்தம்பம் இருக்கிறது. உற்சவ காலங்களில் இதில் ஏராள தீபங்கள் எரிந்து ஜொலிக்கும். இக்கோயிலில் லட்ச தீப உற்சவத் திருவிழா மிகச் சிறப்பான ஒன்று. ஜனவரியில் மகர சங்கராந்தி இங்கு விசேஷம். வாரத்தில் சனிக்கிழமை பூஜை, தினமும் சத்ய நாராயண பூஜை ஆகியவை சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன. பக்தர்கள் இங்கு வந்து மஞ்சுநாதருக்கு ருத்ர அபிஷேகம், சதுர் ருத்ர அபிஷேகம் ஆகியவற்றைச் செய்தால் அனைத்துக் கஷ்டங்களும் நீங்கும் என்பதும், தங்கள் குறைகளை மூலவரிடம் கொட்டினாலே உடனே குறைகள் பளிச்சென்று நீங்கி விடும் என்பதும் அவர்களது ஆழமான நம்பிக்கை.
காலை 6.30 மணி முதல் பகல் 1.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மங்களூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : மங்களூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு