திருப்பாதபுரம் , மகாதேவர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் திருப்பாதபுரம் எனும் ஊரில் உள்ளது.
இறைவன் : மகாதேவர்
தல சிறப்புகள் : மூலவர் மகாதேவரின் மேல், தாரா பாத்திரம் கட்டப்பட்டு ஜலதாரை செய்யப்படுகிறது. கண் வடிவில் தீர்த்தம் காணப்படுவதும் தலத்தின் சிறப்பு.
தல வரலாறு : பாரதப்போரில் வெற்றி பெற பாசுபதம் என்ற ஆயுதத்தை பெற விரும்பிய அர்ஜூனன் கிருஷ்ணரிடம், அதைப் பெறுவதற்கான வழிமுறை பற்றி கேட்டான். நீ, சிவனை நோக்கி தவமிருந்தால் தான் பெற முடியும், என்றார் பெருமாள். உடனே அர்ஜுனன் மலைநாட்டிலுள்ள அனந்தன் காட்டில் வந்து தவம் புரிந்தான். அர்ஜூனனின் தவத்தை கெடுக்க, துரியோதனன், பன்றி வடிவிலான மூகாசுரனை அனுப்பினான். அந்த சமயத்தில் சிவன் வேட ரூபத்தில் பார்வதியுடன் அங்கு வந்தார். பன்றியின் மீது அவர் அம்பை எய்ய, அதே நேரத்தில் அதன் மீது அர்ஜூனனும் அம்பு எய்தான். இருவரும் பன்றியின் உடலை எடுக்க ஓடினர். சிவனை அடையாளம் தெரியாத அர்ஜுனன், நானே பன்றியைக் கொன்றேன், எனவே அதன் உடல் எனக்குரியதே, என்றான். சிவனோ, இல்லை, நான் தான் கொன்றேன், பன்றியின் உடல் எனக்குரியதே, என்றார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை மூண்டது. இந்த சண்டையில் அர்ஜூனனின் முறியாத வில்லையே முறித்து விட்டார் சிவன். கோபமடைந்த அர்ஜுனன், முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகத்திலும் உள்ள உயிர்களின் மீது விழுந்தது. உடனே சிவன் தன் காலால் அர்ஜுனனை தூக்கி எறிந்தார். அவன் அருகிலுள்ள தீர்த்தத்தில் விழுந்தான். அங்கே சிவன் உமாதேவியுடன் சுயவடிவமாக காட்சி கொடுத்து, நானே வேடனாக வந்தேன். என்னுடன் சிறப்பாக போரிட்ட உன் வீரத்தைப் பாராட்டி பாசுபதத்தை தருகிறேன், என்றார். சிவனின் திருப்பாதத்தால் அர்ஜுனன் உதைபட்டதாலும், அவரது திருவடி நினைத்ததைத் தரும் என்பதாலும் அந்த இடம் திருபாதபுரம் எனப்பட்டது. அங்குள்ள தீர்த்தக் கரையில் சுவாமி எழுந்தருள வேண்டுமென அர்ஜுனன் வேண்டினான். இங்கு எழுந்தருளிய சுவாமியை மகாதேவர் என்ற திருநாமம் சூட்டி அழைக்கின்றனர். பிற்காலத்தில், வில்வமங்கல முனிவர் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்தார்.
கோவில் அமைப்பு : இங்குள்ள சிவனின் உக்கிரத்தை குறைக்க, மூலவர் சந்நிதி எதிரில், நவநீதகிருஷ்ணனை பிரதிஷ்டை செய்து உள்ளனர். இவர் சங்கு, சக்கரம், வெண்ணெய் வைத்துள்ளார். இடக்கையை இடுப்பில் ஊன்றியுள்ளார். மூலவர் மகாதேவரின் மேல், தாரா பாத்திரம் கட்டப்பட்டு ஜலதாரை செய்யப்படுகிறது. ஒரு பாத்திரத்தில் புனிதநீர் நிறைத்து, அதன் கீழுள்ள சிறிய துவாரம் வழியாக, சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழ வைக்கும் வழிபாடே ஜலதாரை. சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் புனிதநீருக்கு பதிலாக நெய்விட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த வழிபாட்டை, பக்தர்கள் உபயமாகச் செய்தால் நோய் நீங்கும். சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி பூஜிப்பவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், செல்வம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரிகள் செயலிழந்து போவார்கள் என்பது நம்பிக்கை. வேடன் ரூபத்தில் வந்த சிவனை, அர்ஜுனன் அடித்த போது, அந்த அடி மூவுலகத்திலும் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. இதனால் வருத்தப்பட்ட பார்வதிதேவி கண்ணீர் விட்டாள். அது தீர்த்தமாக பெருக்கெடுத்து ஒரு பாறையின் மேல் விழுந்தது. அந்த இடத்தில் கண் வடிவில் தீர்த்தம் காணப்படுகிறது. ஆண்டு முழுவதும் கண் தீர்த்தத்தில் தண்ணீர் வற்றுவதில்லை. இந்த தீர்த்தச்சுனையை வணங்கினால் கண் நோய் குணமடையும் என்கின்றனர். தென் பிரகாரத்தில் உள்ள பாறையின் மேல் பெரியபாதங்கள், சிறிய பாதங்கள் உள்ளன. பெரிய பாதம் கிராத மூர்த்திக்கும், சிறிய பாதங்கள் உன்னி கிருஷ்ணனுக்கும் உரியவை. இங்கு விநாயகர், சாஸ்தா, கிருஷ்ணனுக்கு தனி சன்னதி போன்றவை அமைந்துள்ளன.
காலை 5.00 மணி முதல் பகல் 10.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவனந்தபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை