திருநயினார் குறிச்சி, கரைகண்டேஸ்வரம் மகாதேவர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் வள்ளியாற்றங்கரையில் திருநயினார் குறிச்சி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது. கேரளா மற்றும் குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் குளச்சல் ,மண்டைகாடு, அம்மாண்டிவிளை வழியாக திருநயினார் குறிச்சிக்கு வரலாம்.
இறைவன் : கரைகண்டேஸ்வரர்
தல சிறப்புகள் : ஈஸ்வரன் சுயம்பு அம்மை அப்பனாக நடராஜராக நவகிரகங்களை தன்னுள் அடக்கி முப்பரிமாணமாக காட்சி தரும் பரிகார தலம் .
இக்கோயிலின் முன்பகுதி ஷோபன மண்டபம் பெரும் பற்றப்புலியூர் சிவனுக்கடியான் என்பவனால் சிறந்த சிற்பிக் கொண்டு 1432-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. கி.பி.1532-ம் ஆண்டுக் கல்வெட்டு மாசிமாதம் பவுர்ணமி விழா நடந்ததையும், சிவராத்திரி விழா நடந்ததையும், அவ்விழாவில் பத்து பிராமணர்களுக்கு உணவு வழங்கிய செய்தியையும் தெரிவிக்கிறது. கி.பி. 1707-ம் ஆண்டு கல்வெட்டு இக்கோயிலில் பிரதோஷ விழா விமர்சையாக நடந்ததைக் கூறுகிறது. சிவனுக்கினியார் ,உய்யவந்த தேவர், பெற்றான் என்னும் தூய சைவப் பெயர்கள் கல்வெட்டுகளில் வருகின்றன.
கோயில் அமைப்பு : ராஜராஜ தென்னாட்டு குறுநாட்டு கடிகைப்பட்டிணத்து கரைகண்டேஸ்வரம் உடையார்-நாயனார்-கூத்தாடும் தேவர் என்ற அருள்மிகு கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோயில் என்றும் அழைப்பார்கள். பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த இக்கோயிலை ஊர்மக்கள் கடந்த 2013-ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் செய்து மஹாகும்பாபிஷேகம் நடத்தி புதுப்பொலிவடையச் செய்திருக்கிறார்கள்.
கருவறை கட்டுமானம் மிக பழையது. 12-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. இதற்கு கல்வெட்டு சான்றும் உண்டு. மூலவர் லிங்க வடிவானவர். லிங்கத்தின் தட்டையான அமைப்பும் ஆவுடையும் நீர்விழும் தூம்பும் பழைமையைக் காட்டுகிறது. மூலவர் மகாதேவர் நவகிரகங்களை தன்னுள் அடக்கி லிங்கோற்பவராக அம்பாள் அருகில் வலப்புறம் வல்புரி விநாயகர் தனி சன்னதி பெரிய நந்தீஸ்வரர் ஆல் அரசு வேம்பு மும்மரங்கள் சூழ்ந்த இடம் ஆதிசேஷன் வனதர்ம சாஸ்தா, நாகராஜர் சன்னதி,கரமகரிஷி சன்னதி- மகா காலபைரவர் சன்னதி ஆகியவைகள் இருக்கின்றன.
கோவிலில் மார்கழிமாதம் மூன்று நாட்கள் திருவிழா நடக்கிறது . இதில் பால்குடம், சந்தனக்குடம் எடுத்தல், யானை பவனி வருதல் ஆகியன உண்டு. சித்திரை விசு,திருகார்த்திகை விழா, சிவராத்திரி போன்ற விழாக்கள் விமர்சையாக நடக்கின்றன. இக்கோயில் குழந்தை இல்லாதவர்கள் மனமுருகி வேண்டினால் இறைவன் உடனே குழந்தை வரத்தை கொடுத்து குடும்பத்தை தழைக்க வைக்கிறார். வெளியூர் வெளி மாநிலங்களிலும் இருந்து குழந்தை வரம் வேண்டி கணிசமான பக்தர்கள் வருகிறார்கள். வேண்டும் காரியங்கள் உடனே நிறை வேறுகின்றன.
காலை 6.30 முதல் பகல் 7.30 மணி, மாலை 6.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கன்னியாகுமரி, நாகர்கோவில்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை