அவனியாபுரம், கல்யாண சுந்தரேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் மதுரைக்குத் தெற்கே, விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
இறைவன் : கல்யாண சுந்தரேஸ்வரர், செவ்வந்தீஸ்வரர்
உற்சவர் : சுந்தரேஸ்வரர்
இறைவி : பாலாம்பிகை
தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : கோயிலி்ல் தெற்கு நோக்கி அமைந்துள்ள பால மீனாம்பிகையின் எதிரே நந்தி சிலை ஒன்று சுவாமியை நோக்கியபடி அமைந்துள்ளதும், கிழக்கு நோக்கியபடி பால சுப்பிரமணியர் இடம்புறம் திரும்பிய தனது மயில் வாகனத்துடன் காட்சி தருவதும் சிறப்பு.
தல வரலாறு : மலையத்துவச பாண்டியனின் மகளாக அவதரித்த மீனாட்சி தனது குழந்தைப் பருவத்தில் பிள்ளையார் பாளையம் என்று அழைக்கப்பட்ட இன்றைய அவனியாபுரத்தில் தோழியருடன் விளையாடி மகிழ்ந்தாள். தனது பருவ வயதில், சுந்தரேஸ்வரரை மணம் முடித்துச் செல்லும் போது தோழியர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், மணக்கோலத்தில் கணவர் கல்யாண சுந்தரருடன் இத்தலத்தில் காட்சியளித்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.
கோவில் அமைப்பு : இத்தல விநாயகர் சந்தான விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு செவ்வந்தீஸ்வரருக்கென தனியே சன்னதி ஒன்று அமைந்திருந்தது. செண்பகா ஊரணி எனும் குளமும் இக்கோயிலுடன் இணைந்திருந்தது. காலப்போக்கில் கோயில் சிதிலம் அடைந்து, சுற்றுச் சுவர் மற்றும் ஊரணி மட்டுமே எஞ்சியது. அக்கோயில் சீரமைக்கப்படாமல் அப்படியே கிடப்பில் இருந்தது. இந்நிலையில் ஓர் நாள் அப்பகுதியில் வசித்த அன்ன தாத்தா எனும் சிவ பக்தர் வீட்டிற்கு சிவன், அடியார் வேடத்தில் வந்தார். அப்பகுதியில் அவருக்கென தனியே கோயில் இல்லாததை காரணம் காட்டிய அவர் மதுரை சென்று சிவனைத் தரிசித்து விட்டு அவரது வீட்டிற்கு வருவதாகக் கூறிச் சென்றார். இரவில் நெடுநேரம் ஆகியும் சிவன், அன்ன தாத்தா வீட்டிற்கு திரும்பாததால் மனம் கலங்கிய அவர். கலக்கத்துடனே தூங்கச் சென்றார். அன்று இரவில் அவரது கனவில் தோன்றிய சிவன், அவரது வீட்டிற்கு சிவனடியார் வேடத்தில் தாமே நேரடியாக வந்ததையும், அங்கே முன்பு இருந்த கோயில் சிதிலம் அடைந்ததையும் உணர்த்தி அதனை மீண்டும் எழுப்பும் படியும் வலியுறுத்தினார். அதன் பின்பு அவர் தனியே கோயிலைக் கட்டி வழிபாட்டுக்கு கொண்டு வந்தார். தனது 25 திருவுருவங்களில் ஒரு உருவமான திருமணக் கோலத்தில் இங்கே சிவபெருமான் கல்யாண சுந்தரராக உமையாள் பால மீனாம்பிகையுடன் அருட்காட்சி தருகிறார். சிவ பெருமானின் முன்புறம் வாசியோக நந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இக்கோயில் பாண்டிய மன்னர் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டதன் அடையாளமாக தூண்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள சூர்ய தீர்த்தம் சர்வ ரோக நிவாரணியாக உள்ளது. அக்னி கோயிலான இங்கே அமைந்துள்ள சிலைகள் உயிரோட்டத்துடன் உள்ளது போல காட்சி தருகின்றன. கூன் பாண்டியனின் வெப்பு நோய் தீர்க்க வடக்கில் இருந்து வந்த திருஞானசம்பந்தர், இங்கே மீனாட்சி அம்மன் பிள்ளத்தமிழ் பாடியதாகவும், இதனாலேயே இவ்விடத்திற்கு பிள்ளையார் பாளையம் என பெயர் வந்ததாகவும் வயதில் முதிர்ந்தோர் கூறுகின்றனர். முன்பு கோயிலின் உட்பகுதியில் இருந்த பத்திரகாளியம்மனுக்கு, தற்போது வெளியே தனிச்சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.
இங்கு தமிழ் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்குள்ள பால மீனாம்பிகை, கல்யாண சுந்தரேஸ்வரர் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கி, குழந்தை வரம் கிட்டும்.
தெற்கு நோக்கியருளும் ரிண விமோசன பைரவரை வணங்கி வந்தால் தரித்திரம், பீடைகள் அகலும். குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். சந்தான விநாயகரை விழிபட்டு வர தாய் பிள்ளைகளுக்கிடையே உள்ள பிரச்னைகள் தீரும். படிப்புக்கேற்ற பணி, புத்திர பாக்கியம் கிட்டும். பால தண்டாயுதபாணியை வணங்கிட, எண்ணிய குறிக்கோள்களை எளிதில் வெல்ல முடியும்.ரத்தம் தொடர்பான நோய்கள் தீரும்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு