திருவாதவூர், திருமுறை நாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் மேலூரில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
இறைவன் : திருமுறை நாதர்
இறைவி : ஆரணவல்லி
தல தீர்த்தம் : பைரவர் தீர்த்தம்
தல விருட்சம் : மகிழம்
தல சிறப்புகள் : சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத்தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றது. சனி பகவானுக்கு, ஒரு முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது. அவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார் சனி பகவான். அவர் ஒரு காலை மடக்கி வைத்து, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி, காகத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார். மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கை, கால்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் அல்லது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், வாத நோய் குணமாவதாக கூறப்படுகிறது. சித்தா, ஆயுர் வேத மருத்துவத்திலும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது ஒரு வைத்திய முறையாகும்.
தல வரலாறு : ஒரு சமயம் திருக்கயிலையில் பைரவரின் வாகனமான சுவானத்தை மறைக்கச் செய்தார் சிவபெருமான். இதனால் பைரவர், ஈசனிடம் தனது நாய் வாகனம் வேண்டினார். 'திருவாதவூர் சென்று வழிபட தொலைந்த வாகனம் கிடைக்கும்' என்று அருளினார். கயிலாய மலையில் இருந்து திருவாதவூர்வந்த பைரவர் இங்கு ஒரு தீர்த்தம் அமைத்தார். அது பைரவர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள பைரவர் தீர்த்தத்தில் நீராடி திருமறை நாதரை வழிபட்டு தனது நாய் வாகனத்தை மீட்டார். இத்தல பைரவரைத் தொடர்ந்து 8 அஷ்டமி தினங்களில் வழிபட்டு வந்தால் தொலைந்து வாகனங்கள் மீண்டும் கிடைக்கும். இத்தல சனி, பைரவர் மற்றும் திருமறைநாதரை 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தோஷங்களும் அகன்றுவிடும்.
சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர், அரிமர்த்தனப் பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர். அவர் சிவன் மீதுள்ள பக்தியின் காரணமாக மன்னன் கொடுத்த பொற்காசுகளைக் கொண்டு ஆவுடையார் கோவில் என்னும் ஊரில் கோவில் அமைக்கும் பணிக்காக செலவிட்டார். அத்தகைய சிறப்புமிக்க அன்பரான மாணிக்கவாசகருக்கு, திருவாதவூரில் தனிக்கோவில் கட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவரைத் தரிசித்து விட்டு சிறிது தூரம் நடந்து சென்றால், ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கிழக்கு நோக்கிய சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயம்தான் திருமறைநாதர் வீற்றிருக்கும் கோவிலாகும். இதன் முன்பாக தீர்த்தக்குளம் ஒன்றும் இருக்கிறது. திருமாலுக்கு ‘மறையின் பொருள் நானே’ என்று இத்தல ஈசன் உபதேசித்தார். எனவே அவர் திருமறைநாதர் என்று பெயர் பெற்றுள்ளார். பசுவின் குளம்பு பதிந்த சுயம்புத் திருமேனியுடன் விளங்கும் எம்பெருமானை, திருமால், பிரம்மன், அக்னிபகவான், வாயு, சனீஸ்வரர் ஆகிய தேவர்கள் வழிபட்டு நற்பேறு பெற்றுள்ளனர்.
கோயில் அமைப்பு : மகாவிஷ்ணுவின் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புருஷ மிருகத்துக்கு இங்கு சிலை உள்ளது. ஆலயத்தின் கிழக்கே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இங்கு தான் சிவபெருமான் தனது கால் சிலம்பொலியை மாணிக்கவாசகர் கேட்கச் செய்தார். இந்த மண்டபத்தை அமைத்தவர் மாணிக்கவாசகர். இங்கு மாணிக்கவாசகருக்கு தனி சன்னிதி உள்ளது. கரத்தில் திருவாசக சுவடி ஏந்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஐந்து நிலைகள் உடைய ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் கருவறையில் திருமறைநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரம்மதேவர் நடத்திய ஆரண கேத வேள்வியில் நீலதிருமேனியாக அம்பிகை இங்கு தோன்றினாள். எனவே அம்பிகையின் பெயர் ஆரணவல்லி என்று அழைக்கப்படுகிறது.
ஆலயத்தின் உள்ளே கபில தீர்த்தம் என்ற கிணறு உள்ளது. இறைவனின் அபிஷேகத்திற்கு இந்த நீர்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. சிந்தாமணி விநாயகர், காளீஸ்வரர், விஸ்வநாதர், நடராஜர், வியாக்கிரபாதர், பதஞ்சலி, மாணிக்கவாசகர் மற்றும் சுந்தரருக்கு தனி சன்னிதிகள் உள்ளன. மூளையில் இருந்து நரம்புகளுக்கு உணர்வோட்டமோ அல்லது ரத்த ஓட்டமோ இல்லாமல் நின்று போனால், அந்தந்த உறுப்புகளின் தசைகள் இயங்காமல் சோர்ந்து போய்விடும். அதனை கை, கால் வாதம் என்றும், பக்கவாதம் என்றும் கூறுகிறோம். அதற்கு மருத்துவம் செய்வதுடன், கை, கால்களுக்கு பிசியோ தெரபி என்னும் உடலியக்க பயிற்சி கொடுத்து நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறார்கள். இத்தகைய மருத்துவத்தோடு இறைவனை வழிபடுபவர்களும் உண்டு.
ஆரணவல்லி அம்பிகை கிழக்கு பார்த்த சன்னிதியில் இருந்து அருள்கிறார். இந்த அம்பாளுக்கு ‘திருமறை நாயகி’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவர் பிரம்மனின் வேள்வியில் தோன்றியதாகத் தல புராணம் சொல்கிறது. தாமரை தடாகத்தில் உள்ள ஒரு மலருக்கு பசுவொன்று பால் சொரிந்து அபிஷேகம் செய்து வந்தது. இதைப் பார்த்த திருமால் அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு, அதற்கு பூஜை செய்தார். இதன் வாயிலாக பிருகு முனிவரிட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார் என்பது புராணக் கதை.
இந்த ஆலயத்தில் தான் மாணிக்கவாசகருக்கு, இறைவன் சிலம்பொலி ஓசை கேட்கச் செய்தார். இந்த தகவலை, ‘வாத வூரினில் வந்தினிது அருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்’ என்ற திருவாசக வரிகள் எடுத்துரைக்கின்றன. திருமண வரம், குழந்தைப் பேறு, தொழில் வளர்ச்சி போன்றவற்றிற்கும், இத்தல இறைவனை வழிபடும் பக்தர்கள் ஏராளம். பொதுவாக சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இந்த ஆலயத்திலும் நடைபெறுகின்றன. என்றாலும் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா சிறப்புக்குரியது. இந்த விழா மாணிக்கவாசகருக்காக இறைவன் நரியை பரியாக மாற்றிய கதையை நினைவுபடுத்துகிறது.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை