மணக்குடி, சிதம்பரேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் பூம்புகார் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவன் : சிதம்பரேஸ்வரர்
இறைவி : சிவகாமி அம்மாள்
தல தீர்த்தம் : புண்ய தீர்த்தம்
தல விருட்சம் : வில்வம்
தல வரலாறு : ஒரு காலத்தில் தனவந்தர் ஒருவர் இந்த ஊரில் வாழ்ந்திருந்தார். பெரும் குதிரை வணிகரான இவர், இறைப்பணிக்கு தன் பாதையை திருப்பிக்கொண்டு எந்நேரமும் இந்த சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்து ஈசனுக்கு நித்தியபடி வேலைகளை கவனித்து வந்திருக்கிறார். சாமியார் என்கிற பட்டமும் அவருக்கு வந்து சேர்ந்தது. ஒருமுறை மிளகு மூட்டைகளை கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு சில வியாபாரிகள் இந்த வழியாக வந்திருக்கிறார்கள். இந்த ஆலயத்தை நெருங்கும்போது திடீரென மழை பிடித்துக் கொண்டு விட்டது. மிளகு மூட்டைகள் மழையில் நனைந்தால் வீணாகிவிடும் என்பதால் அவர்கள் சாமியாரிடம் மூட்டைகளை ஆலயத்தில் வைக்க அனுமதி கேட்டனர். சாமியாரும் அவர்களுக்கு உதவ முன்வந்தார். அவர் சொன்னபடி அவர்கள் மிளகு மூட்டைகளை ஆலயத்தில் அடுக்கி வைத்தார்கள். அவர்களிடம், “ஐயா இறை நைவேத்தியம் தயாரிக்க மிளகு தேவை. தற்போது மிளகு கைவசம் இல்லை. மழை பெய்வதால் வெளியேவும் போகமுடியாது.
ஆதலால் நீங்கள் கொஞ்சம் மிளகு கொடுத்தால் இறைவனுக்கு பிரசாதம் தயாரிக்கும் புண்ணியம் உங்களை சேரும்’’ என்று சொன்னார் சாமியார். ஆனால், அந்த வியாபாரிகளின் மனதில் இரக்கம் இல்லை. அதனால் தம்மிடம் இருப்பது மிளகு இல்லை, கடுகு என்று பொய் சொல்லி, மிளகைத் தராமல் தவிர்த்தார்கள். சாமியாரும் பதில் எதுவும் சொல்லாமல், புன்னகைத்தார். மறுநாள் காலை வியாபாரிகள் மூட்டையை சோதித்துப் பார்த்து அதிர்ந்து போனார்கள். ஆமாம், அவற்றில் மிளகுக்கு பதிலாக பொய்யாகச் சொன்ன கடுகுதான் இருந்தது. தம் தவறை உணர்ந்து கொண்ட வியாபாரிகள், சாமியாரின் காலில் விழுந்து மன்னிக்கும்படி வேண்ட, அவரோ, “இது இறைவன் சித்தம். அவனிடம்தான் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். அவர்களும் அவ்வாறே செய்து, இறை பிரசாதத்திற்காக மிளகு தருவதாக ஒப்புக்கொண்டார்கள். உடனே மூட்டைகளில் கடுகு மறைந்து மிளகு நிறைந்தன. இந்த நிகழ்வுக்குப் பிறகு அந்த சாமியார் ‘மிளகு சித்தர்’ என்று அழைக்கப்படலானார்.
கோவில் அமைப்பு : ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் நடுநாயகமாக, பிரமாண்டமாக ஒரு சிவலிங்கத் திருமேனி ஒரு வஸ்திரத்தை தன் மேல் சுற்றிக்கொண்டு காட்சி தருகிறார். இவரைத் தவிர இந்த ஆலயத்தில் நந்திதேவர், விநாயகர், பெருமாள், சிவகாமி அம்மை மற்றும் தண்டாயுதபாணி ஆகிய தெய்வ விக்ரகங்களும் உண்டு. ஆனால், எதற்கும் முறையான சந்நதி இல்லை. முட்செடிகளின் மத்தியில் ஒரு காலத்தில் இது மிகப்பெரிய ஆலயமாக திகழ்ந்திருக்கக் கூடிய தடங்கள் மட்டும் இருக்கின்றன. பிராகாரங்களும், சந்நதிகளும், மதில் சுவர்களும் இருந்ததற்கான தடயங்கள் இன்றும் இருக்கின்றன. இக்கோயில் கி.பி. 12ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.
சிதம்பரேஸ்வரரின் கருவறையை சுற்றி கருங்கல்லால் ஆன அடிபீடம் மட்டும் காணப்படுகிறது. இதன் அருகேதான் கல்வெட்டுகள் உள்ளன. இதன் மேலே கூரை போடப்பட்டிருக்கிறது. இவரது சந்நதியில் தீபம் ஒன்று தொங்குகிறது. ஒரு மணி உள்ளது. எதிரே நான்கு கால்களையும் மடித்தபடி அமர்ந்துள்ளது நந்தி. மரத் தூண்களின் ஆதாரத்தில் நிற்கும் கீற்றுக் கொட்டகை முழுவதும் கரையான்களாக உள்ளது. பிராகாரம் வலம் வரும் வழியில், தலையில் ஜடாமகுடத்துட னும், காதுகளில் மகர குண்டலங்களுடன் காண்போர் வியக்கும் வண்ணம் விநாயகர் தரிசனம் தருகிறார். பிள்ளையாருக்கு அருகே அன்னை சிவகாமியின் விக்கிரகம் காணப்படுகிறது. அட்சர மாலை மற்றும் தாமரை மலரை பின்னிரு கரங்கள் ஏந்தியிருக்க, அபயவரத ஹஸ்தங்களாக முன்னிரு கரங்களுடன் அன்னை அருள்கிறாள். சிதிலமடைந்த நிலையில் தண்டாயுதபாணி விக்ரகம் ஒன்றும் உள்ளது.
இந்த சிவனை வியாழன் அன்று 12 முறை வலம் வந்தால் பிள்ளைப்பேறு கிட்டும் என பக்தர்கள் கூறுகிறார்கள். நந்தி விசேஷமாக உள்ளதால் அதற்கு வெள்ளைப்பூவை சாற்றி வழிபட்டால் வியாபாரத்தடை நீங்குவதாகவும் சொல்கிறார்கள். இங்குள்ள விநாயகரை புதன்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவிதமான வேண்டுதல்களும் நிறைவேறும்.
காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : மயிலாடுதுறை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு