திருமயிலாடி, சுந்தரேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில், சீர்காழிக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : சுந்தரேஸ்வரர்
இறைவி : பெரியநாயகி , ஸ்ரீபிரகன்நாயகி
தல தீர்த்தம் : புஷ்பகாரண்ய தீர்த்தம்
தல விருட்சம் : வன்னிமரம்
தல சிறப்புகள் : இங்கு முருகப்பெருமான் வடதிசை நோக்கி தவக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகன் அருள்பாலிக்கும் தலம் என்றாலும், மூலவர் சிவபெருமானே.கண்வ முனிவர் வழிபட்டு பேறு பெற்ற தலமாகும்.
தல வரலாறு : திருக்கயிலையில் உமாதேவியோடு சிவ பெருமான் வீற்றிருந்தார். அப்போது அவர்களிடையே ஒரு விவாதம் உண்டானது. தங்களிருவரில் யார் பேரழகு என்பதாய் தொடங்கிய அந்த விவாதத்தில் ‘இணையில்லாத பேரழகு வடிவினன் நான்தான்’ என்றார் சிவபெருமான். இல்லையில்லை., என்னை மிஞ்சிய அழகு யாருக்கும் இல்லை’ என்றார் சக்தி. விளையாட்டு வினையானது. கோபத்தில் சிவன் அங்கிருந்து மறைந்து போனார். ஈசனைக் காணாது சக்தி தேடத் தொடங்கினாள். மயில் உருவம் கொண்டு பல இடங் களில் தேடிய பார்வதி, இறுதியாக கண்ணுவாசிரமம் என்றழைக்கப்பட்ட இத்தலத்திற்கு வந்தார். பின்னர் ஈசனை நினைத்து துதித்தார். இதையடுத்து சிவ பெருமான், கண்ணுக்கு இனிய எழிற்கோலத்துடன் சுந்தரலிங்கமாக வெளிப்பட்டு உமாதேவிக்கு காட்சி தந்தார். அந்த வடிவத்தைக் கண்டு மயங்கிய அம்பிகை, தோகை விரித்து ஆனந்த நடனமாடினாள். அது முதல் இத்தலத்திற்கு ‘திருமயிலாடி’ என்ற பெயர் உண்டாயிற்று.
திருமயிலாடி தலத்தில் சிறப்பாக பார்க்கப் படுவது, இவ்வாலய முருகப்பெருமானாகும். பெரும்பாலான ஆலயங்களில் முருககடவுள் மேற்கு பிரகாரத்தில் கருவறைக்கு பின்னாலிருந்து கீழ்திசை நோக்கி காட்சியளிப்பார். ஆனால் இவ்வாலய முருகன் வடதிசை நோக்கி தவக்கோலத்தில் மகாமண்டபத்திலேயே தரிசனம் தருகிறார். இவர் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் தேவர் அசுரர் யுத்தம் இடம்பெற்றுள்ளது.
சிங்களத்தீவில் பத்மாசுரன் என்னும் அசுரன் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் தேவர்களை விரோதித்து துன்புறுத்தி வந்தான். தேவர் களின் சேனாதிபதியாக முருகப்பெருமான் படைநடத்திச் சென்று சூரனை எதிர்த்தார். சூரனோ பகையை வஞ்சனையால் வீழ்த்தக் கருதி அபிசார வேள்வியை செய்தான். யாககுண்டத்திலிருந்து சுரதேவதை வெளிப்பட்டாள். அவள் தேவர்படைகளை வெப்பு நோயால் வாட்டினாள். இதனைக் கண்ட குமரக்கடவுள் திருமயிலாடி வந்து வேலாயுதத்தால் தடாகம் ஒன்றை உண்டாக்கினார். பின்னர் அதில் கங்கையை வரவழைத்து நீராடி, சுந்தரேஸ்வரரை வடதிசை நோக்கி தவம் செய்தார்.
குமரக்கடவுளால் உருவாக்கப்பட்ட இத்தீர்த்தம் புஷ்பகாரண்ய தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் எதிரில் உள்ளது. தனயனின் தவக்கோலத்தைப் பார்த்த பரமன், சீதளா தேவியை வரவழைத்து குமரக்கடவுளுக்கு அளித்தார். சீதளாதேவியுடன் சிங்களம் சென்ற குமரன், சுரதேவதையை சிறைப்பிடித்தார். இதையடுத்து தேவர்கள் சோர்வு நீங்கி புதிய சக்தியைப் பெற்று போரிட்டனர். போரில் வெற்றியும் கண்டனர். முருகப்பெருமானை தவக்கோலத்தில் இத்தலத்திலேயே இருக்குமாறு வேண்டினான் இந்திரன். வடக்கு நோக்கிய முருகனை தெற்குமுகமாக நின்று வணங்கினால், பில்லி, சூனியம், பெரும்பகை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தேவர்- அசுரர் யுத்தம் முடிந்த பின்னர் சூரனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனை தனது மயில் வாகனமாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான். பின் மயில்மீது அமர்ந்து திருமயிலாடி தலத்துக்கு எழுந்தருளினார். ஆணவமலத்தின் வடிவமாகிய சூரன் மயிலாக நின்று அவரைத் தாங்குகின்றான். ஆணவ மலத்தை அழிக்கமுடியாது, அடக்கத்தான் முடியும், அடங்கியிருந்தாலும் ஆணவம் அவ்வப்போது தன் முனைப்பை காட்டிக் கொண்டிருக்கும் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவது போல முருகப்பெருமானின் உற்சவதிருமேனி இத்தலத்தில் அமைந்துள்ளது. சூரபத்மனாகிய ஆணவமயில் முருகன்பாதத்தில் பாதரட்சையாக தன் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. இடதுகால் பெருவிரலுக்கும் அடுத்தவிரலுக்கும் இடையே தலையை தூக்கி முருகப்பெருமானின் முகத்தை எழுச்சியுடன் பார்த்தவண்ணம் தோற்றமளிக்கிறது. மற்றொரு பாதத்தில் பாதரட்சை காணப்படுகின்றது. இத்தனை எழிலார்ந்த தத்துவ பேருண்மை பொதிந்த உற்சவ மூர்த்தியை திருமயிலாடியில் மட்டுமே தரிசிக்கமுடியும்.
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கியபடி ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் காட்சி தருகிறது இந்த ஆலயம். ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே வர பிரம்மசந்தியும், அதையொட்டி மகாமண்டபமும் அமைந்துள்ளன. மண்டபத்துள் கொடிமரமும், கொடிமரத்தின் கீழ் நர்த்தன விநாயகரும், நந்தியம்பெருமானும் இடம்பெற்றுள்ளனர். கொடிமரத்தையொட்டி தெற்கில் குமாரவிநாயகர் அருள்புரிகிறார். அவரையடுத்து குமரக் கடவுள் வடதிசைநோக்கி நின்ற தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவரருகே இடும்பன், கடம்பன் மற்றும் காசிவிசுவநாதர் இடம் பெற்றுள்ளனர்.
திருமயிலாடி திருத்தலத்தில் சிவபரம் பொருள் சுந்தரலிங்கமாக எழுந்தருள்புரிகிறார். கருவறைக் கோட்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தி உள்ளார். தமிழகத்தில் எந்த ஆலயத்திலும் காணக்கிடைக்காத விதமாக பத்மாசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பது இத்தலத்தில் மட்டுமே. மேற்கே லிங்கோத்பவர் மூர்த்தியும், வடக்கில் கோமுகத்தின் மேற்புறத்தில் நான்முக கடவுளும், அவரருகே ஜெயதுர்க்கா பரமேஸ்வரியும் தரிசனம் தருகின்றனர். பிரகாரச்சுற்றில் கன்னி மூலையில் சித்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார். விநாயகர் சன்னிதியின் தெற்கில் சப்தமாதாக்கள், குபேரமூலையில் கஜலட்சுமி உள்ளனர். வாகன மண்டபத்தை அடுத்து சிவகாமி அம்மையுடன் சிற்றம்பலத்துச் செல்வ பெருமானாகிய ஆனந்த நடராஜமூர்த்தி தரிசனம் தந்தருள்கிறார். நடராஜர் கோவிலின் கீழ்புறம் சனிபகவான் அமர்ந்துள்ளார். அடுத்து அருணாச்சலசிவம் அருள்பாலிக்கிறார்.
கோவிலின் வடகிழக்கே பெரியநாயகி நின்ற திருக்கோலத்தில் காட்சியருள்கின்றார். பெரியநாயகி அம்மனுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. முற்காலத்தில் ஆலய திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஏற்கனவே இருந்த அம்பாளின் சிலை பின்னமடைந்துவிட்டதால் திருப் பணிக்குழுவினர் வேரொறு அம்பாள் சிலையை உருவாக்கினர். இதற்கிடையில் அம்மன் ஊர் பெரியவர்கள் கனவில் தோன்றி, ‘என்னை மாற்ற வேண்டாம். எனக்கு தனி சன்னிதி வேண்டும்’ என்றார். இதையடுத்து பழைய அம்பாளை கருவறையிலும், புதிய அம்பாளை வெளிப்புறமாகவும் அமைத்தனர்.
ஆலயத்தின் எதிரில் தீரத்தக்கரையில் சுந்தரவிநாயகர் சன்னிதி உள்ளது. இவ்விநாயகர் சைவசித்தாந்தத்தின் செம்பொருளை உலகில் நிலைநிறுத்தும் முயற்சியை மேற்கொண்ட, நீதிசன் என்பவனுக்கு அருள்புரிந்தவராவார். இவரை முதன் முதலாக வேண்டிக்கொண்டு அச்செயல்பாட்டில் ஈடுபட்ட நீதிசன் விநாயகரின் அருளால் அதை முழுமையாக செய்து முடித்தான். பின்னர் விநாயகபெருமான் தந்தருளிய விமானத்தில் ஏறி அமர்ந்து மானுட உடலோடு கணேசபதம் அடைந்தான். கயன் என்பவனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனது முன்னோர்களுக்கு வீடுபேறு அளித்தவர் இந்த விநாயகர்.
சுந்தரவிநாயகரைப் போல, கண்வ மகரிஷி வழிபட்ட கண்வ விநாயகரும் சக்தி மிக்கவர். இவர், 5 வயது வரை வாய் பேச முடியாமல் இருந்த நிகமாநந்தன் என்பவனுக்கு பேசும்சக்தியை அளித்து ஆட்கொண்டவர். விநாயகர் திருவருளால் பேசும் சக்தியுடன் சகலவித்தைகளும் கைவரப்பெற்ற நிகமாநந்தனுக்கு, இவ்வாலய முருகன் சிவதீட்சை தந்து ‘நிகமாநந்த சிவாச்சாரியார்’ என்னும் தீட்சா நாமமும் கொடுத்தார். இரு விநாயகர்கள் அருள்பாலித்த இத்தலத்து தீர்த்தகரையில், சிரார்த்த காரியங்கள் செய்வது புண்ணியம் ஆகும். இவ்வாலய சிவனை குமரக்கடவுள், இந்திரன், வால்மீகி முனிவர், கண்வ மகரிஷி மற்றும் பலர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.
திருமயிலாடியில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நூறு ஆண்டுகளுக்கு முன் வைகாசி உற்சவ பெருவிழா சிறப்பாக நடைபெற்றதாக கூறு கிறார்கள். இன்றைய நாளில் மாதந்தோறும் கார்த்திகை விழா மற்றும் பிரதோஷ விழாக்களும், வெள்ளிதோறும் துர்க்கை வழிபாடும், மார்கழி திருவாதிரையில் நடராஜமூர்த்திக்கு தரிசன விழாவும், பங்குனி உத்திரத்திலும் சித்திரை பவுர்ணமியிலும் முருகனுக்கு காவடி எடுத்தலும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது.
தினசரி காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை