கொளத்தூர், ஸ்ரீ சோமநாதேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் கொளத்தூரில் அமுதாம்பிகை உடனுறை சோமநாதீஸ்வரசுவாமி கோயில் உள்ளது.
இறைவன் : சோமநாதீஸ்வரர்
இறைவி : அமுதாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்
பாடியவர் : மாதவ சிவஞான முனிவர்
தலச் சிறப்புகள் : சந்திர பகவானுக்கு இறைவன் சோமநாதசுவாமி காட்சி அளித்தது தனிச்சிறப்பு. சந்திர தேவர் ஒரு புஷ்கரம் அமைத்து அதில் நீராடி இறைவனைபூஜித்து சாப விமோசனம் பெற்று மேன்மை அடைந்தார். மனநிலை பாதித்தவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தொடர்ந்து இறைவனை வழிபட்டு வந்தால் நன்மை பெறுவர்.
இக்கோயிலில் பிராகாரத்தைச் சுற்றிலும் மூலவர் விமானம், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகம், சூரியன், சந்திரன், அம்மன் சன்னதியும், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
தல வரலாறு : கொளத்தூர் கிராமத்தில் மிகவும் பழமையான சிவாலயம் உள்ளது. சில காலங்களுக்கு முன்னர் நிலத்தடியில் புதையுண்டிருந்த ஆலயத்தை கண்டுபிடித்து புதிதாக நிர்மாணித்துள்ளார்கள் இவ்வூர் மக்கள். அகத்திய மாமுனிவரால் பூஜிக்கப்பட்டதும் மாதவ சிவஞான முனிவரால் பாடற் பெற்றத் திருத்தலம். சோமேசர் முதுமொழி வெண்பா, அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், குளத்தூர் பதிற்றுப்பத்தந்தாதி ஆகியவை மாதவ சிவஞான முனிவர் கொளத்தூர் சோமநாதசுவாமி அமுதாம்பிகை நோக்கி பாடியவை ஆகும்.
16ம் நூற்றாண்டில் வாழ்ந்த தவத்திரு மாதவ சிவஞான முனிவரால் திருகுளந்தை என்று போற்றப்பட்ட திருக்குளத்தூர் ஊர் காலப்போக்கில் மறுவி கொளத்தூர் என்று அழைக்கப்பட்டது.மாதவ சிவஞானமுனிவர் இத்தல சிவபெருமானை குறித்து பலபாடல் பாடியுள்ளார். இங்கு அமைந்துள்ள சிவபெருமானையும் அம்பிகையையும் சந்திரன் தனது அமுத கிரணங்களால் பூஜை செய்து வழிபட்டு உள்ளார். ஆதலால் சிவபெருமானுக்கு சோமநாதீஸ்வரர் என்றும் அம்பிகைக்கு அமுதாம்பிகை என்றும் திருநாமம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அகஸ்திய மாமுனிவர் வில்வனன், வாதாபி என்று அசுர சகோதரர்களை கொன்ற பாவத்தை போக்கி கொள்ள இத்தலத்தில் உள்ள சிவபெருமானை வழிப்பட்டு உள்ளார்.
தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார பிரார்த்தனைச் செய்கின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு புது வஸ்திரம் சாற்றியும், நெய் விளக்கேற்றியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். சிவராத்திரி, பிரதோஷம், அமாவாசை ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : வில்லிவாக்கம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு