இளையனார்வேலூர்,சோளீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரத்துக்குத் தென்கிழக்கே சுமார் 20 கி.மீ. தொலைவில் செய்யாற்றுக் கரையில் அமைந்துள்ளது
இறைவன்: சோளீஸ்வரர்
இறைவி : சுந்தராம்பாள்
தல தீர்த்தம் : செய்யாறு
தலச் சிறப்புகள் : காசியில் பித்ருக்கடன் செய்தால் என்ன புண்ணியமோ, அதே புண்ணியம் இங்குள்ள செய்யாற்றில் செய்தாலும் கிடைக்கும் என்பது சிறப்பு. இங்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, நாகர், காசி விஸ்வநாதர், வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான், நவக்கிரகங்கள், நடராஜர், சிவகாமி ஆகியோர் உள்ளனர். பித்ரு சாபத்தை நீக்கும் பரிகாரத் தலங்களாக காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற பிரபலமான திருத்தலங்களில் ஆரம்பித்து எண்ணற்ற தலங்கள் சொல்லப்படுகின்றன. பித்ரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இது போன்ற தலங்களுக்குச் சென்று உரிய பரிகாரத்தைச் செய்து நிவர்த்தி பெறுகின்றார்கள். பாலாறின் துணை நதியான இந்த செய்யாறு, இன்று வெறும் மணற்திட்டாக இருக்கிறது. மழைக் காலங்களில் மட்டுமே ஆற்றில் நீர் ஓடும். முருகப் பெருமானால் உருவாக்கப்பட்ட ஆறு என்று புராணம் செய்யாறைச் சிறப்பித்துச் சொல்கிறது. சேய் என்றால் முருகன் என்று பொருள். காசியப தண்டலம் என்று ஆதி காலத்தில் அழைக்கப்பட்ட திருத்தலமே இன்று மருவி காவாந்தண்டலம் ஆகி உள்ளது.
தல வரலாறு : காசியபர் என்ற முனிவர் தன் தாய்-தந்தையோடு புனிதயாத்திரை புறப்பட்டு ஒவ்வொரு ஊராகப் போய்க் கொண்டிருந்தார். ஒவ்வொரு திருத்தலத்திலும் உள்ள ஈசனை தரிசித்து அடுத்தடுத்துப் பயணப்பட்டுக் கொண்டே இருந்தார். ஆனால், விதியின் விளையாட்டையும், இறைவனின் திருவிளையாடலையும் எவர் அறிவார்? வருகிற வழியில் அவரது தாய் மற்றும் தந்தையர் திடீரென இறந்து போகின்றனர். எனவே, அவர்களுக்கு உண்டான ஈமச் சடங்குகளைச் செய்து முடித்து விட்டு. அஸ்தியைச் சேகரித்துக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தார். காசி மாநகரத்தில் ஓடும் கங்கை நதியில் இந்த அஸ்தியைக் கரைத்து விட வேண்டும் என்பது அவரது எண்ணம். அப்படி வந்து கொண்டிருந்தவர் ஒரு தினம் காஞ்சி மாநகரத்தின் அருகே உள்ள இந்த ஊரை அடைந்தார். இந்த ஊரில் ஓடும் செய்யாறு நதியின் ஆரவாரத்திலும், பச்சைப் பசேல் என்ற இயற்கைச் சூழ்நிலையிலும் மனதைப் பறிகொடுத்து, இங்கேயே ஒரு சோலை அமைத்துத் தங்கினார். தினமும் செய்யாற்றில் புனித நீராடிவிட்டு, ஈசனை நினைந்து தியானம் செய்வார். சிவ தியானத்தில் நாட்களைக் கடத்தினார். அப்போது ஒரு நாள் ஈசன் அசரீரி வாக்காக, கயிலையில் இருந்து எம் வடிவத்தை எடுத்து வந்து இந்த ஆற்றின் கரையில் பிரதிஷ்டை செய். உன் பெற்றோரின் அஸ்தியைக் கரைக்க இனி நீ காசிக்குச் செல்ல வேண்டாம். இந்த செய்யாற்றிலேயே கரைத்து விடு. காசியில் கரைத்த புண்ணியம் உனக்குக் கிடைக்கும் என்று அருளி இருக்கிறார்.
ஈசனின் வாக்கில் மகிழ்ந்த காசியபர் பெருக்கெடுத்தோடும் செய்யாற்றிலேயே தன் பெற்றோரின் அஸ்தியைக் கரைத்து விட்டு, பித்ரு காரியத்தையும் பூர்த்தி செய்தார். அதன் பின் கயிலையில் இருந்து ஒரு லிங்கம் எடுத்து வந்து இங்கு ஸ்தாபித்தார். பூஜைகளையும் தொடர்ந்து நடத்தினார். அந்த லிங்கத் திருமேனியே சோளீஸ்வரராக இந்தத் திருத்தலத்தில் அருள் பாலித்து வருகிறார். காசியபர் அமைத்த சோலையில் ஸ்தாபனம் செய்த ஈஸ்வரர் என்ற பொருளில் சோலை ஈஸ்வரர் என்று ஆரம்பத்தில் இவரை அழைத்தனர்.
பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. பித்ரு தோஷம் நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்குள்ள சோளீஸ்வரரை வழிபடுகின்றனர். சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு