திருப்போரூர், உத்திர வைத்தியலிங்கேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் மறையூர் திருப்போரூரில் உள்ளது.
இறைவன் : உத்திர வைத்தியலிங்கேஸ்வரர்
இறைவி : தையல்நாயகி
தீர்த்தம் : அகத்தியர் தீர்த்தம்
தலச் சிறப்புகள் : 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்காட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு தையல்நாயகி உடனுறை உத்திர வைத்திய லிங்கேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த செவ்வாய் பரிகார தலம். நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலைப்போலவே இங்குள்ள ஆலயத்தின் தீர்த்தக் குளத்தில் நீராடி, வைத்தியலிங்கேஸ்வரரையும் தையல்நாயகியையும் வணங்கித் தொழுதால், தீராத நோயும் தீரும்.
இந்த ஆலயத்தில் குடி கொண்டுள்ள இறைவனின் திருமேனியை பங்குனி உத்திர திருநாளுக்கு மூன்று தினங்கள் முன்பாக காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் சூரியன் தன் பொற்கிரணங்களால் தரிசித்து வணங்கி செல்கிறார். அது சமயம் இறைவன் பிரகாசமான ஒளிப்பிழம்பாக காட்சியளிக்கிறார்.
தல வரலாறு : ஒருகாலத்தில், மகரிஷிகளும் அந்தணர்களும் இங்கு வந்து தங்கி, வேதங்கள் ஒலிக்க, ஜபதபங்களில் ஈடுபட்டு, இறைவனின் பேரருளைப் பெற்றதால், இந்தத் தலத்துக்கு மறையூர் எனும் திருநாமமும் உண்டு. பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ள ஆலயம், சிதம்பர சுவாமிகள் உள்ளிட்ட பலரும் வணங்கிய கோயில் எனப் பல பெருமைகள் கொண்டது. தொண்டை மண்டலத்தின் அந்த வனப்பகுதியில், தவம் புரிவதற்காக வந்த அகத்தியர், அந்த இடத்தில் சிறிதளவும் தண்ணீர் இல்லாமல் இருந்ததை அறிந்தார். நித்தியப்படி பூஜைகளுக்காகவும் இந்த வழியே வருவோரின் தாகம் தணிப்பதற்காகவும் தண்ணீர் வேண்டி, சிவனாரைத் தொழுது முறையிட்டார். அவரின் கோரிக்கையை ஏற்ற சிவனார், அந்தத் திருவிடத்தில் தீர்த்தக் குளத்தை உருவாக்கியதுடன், திருமணக் கோலத்திலும் அகத்தியருக்கு காட்சி தந்தருளினார். இப்படி, திருக்காட்சி அருளியதாலும் வனமாகத் திகழ்ந்ததாலும் அந்தப் பகுதி காட்டூர் என்றானதாகச் சொல்கிறது தல புராணம்.
ஒரு காலத்தில் முனிவர்கள் இங்கு தங்கி வேதங்ளை ஓதியதால் இவ்வூர் மறையூர் என்று பெயர் பெற்றது. வனமாக இருந்ததாலும், அகத்தியருக்கு இறைவன் காட்சி தந்ததாலும் இவ்வூர் காட்டூர் என்றும் அழைக்கப்படுகிறது. பாண்டியர்களால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் சிதம்பர சுவாமிகள் உள்ளிட்ட பலர் வணங்கிய கோயிலாகும். தொண்டை மண்டலத்தில் வனப் பகுதியில் தவம் புரிய வந்த அகத்தியர் அப்பகுதியில் தண்ணீர் இல்லாததைக் கண்டு வருந்தி நித்திய பூசைகளுக்காகவும், மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காகவும் இறைவனிடம் வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் ஒரு குளத்தை உண்டாக்கி, பின் மணக்கோலத்தில் அகத்தியருக்குக் காட்சி தந்தார்.
கோயில் அமைப்பு : இத்தலம் முற்றிலும் சிதிலமடைந்திருந்த நிலையில் பக்தர்கள் நன்கொடைகள் வசூலித்து புனருத்தாரணம் செய்துள்ளனர். திருப்பணி நடந்துவந்த நிலையில் பூமிக்கடியில் புதைந்திருந்த அம்பாளின் திருமேனி கிடைக்கப்பெற்றது சிறப்பாகும். பாசம், அங்குசத்துடன் அபயவரத திருக்கரங்களோடு அமையப்பெற்றுள்ளார் இந்த அம்பிகை. ஐந்து நிலைகளுடன்கூடிய ராஜகோபுரம் இவ்வாலயத்திற்கு கம்பீரத்தை அளிக்கிறது. பிரகாரத்தில் கணபதி, பால முருகன், சண்டேஸ்வரர், அதிகார நந்தி அமைந்துள்ளனர். கருவறையில் சுமார் இரண்டடி உயரத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் அருள்மிகு வைத்தியநாதர். அம்பாள் தெற்கு நோக்கி தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். செவ்வாய் பகவான் அவருடைய வாகனமான ஆட்டுக்கிடாவுடன் தனியாக எழுந்தருளியுள்ளது சிறப்பு. பைரவர் மலை 300 அடி உயரம் இருக்கலாம். இக்கோவிலும் பராமரிப்பு இன்றிதான் இருக்கிறது. மலையின் மீதமர்ந்திருக்கும் பைரவரை தரிசித்த பின்புதான் உத்திர வைத்திய லிங்கேஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இங்கு நிலவி வரும் ஐதீகம் என்று இவ்வூர் மக்கள் சொல்கின்றனர். நான்கு புறமும் முறையான கரைகளும் நல்ல அகல நீளமும் உள்ளது இந்தத் திருக்குளம். கடந்த 100 ஆண்டுகளாக இதில் நீர் வற்றி பார்த்ததே இல்லை என்று இவ்வூர் வாழ் முதியோர்கள் சொல்லுகின்றனர். அகத்தியரால் உருவாக்கப்பட்ட குளம் ஒரு காலத்தில் இவ்வூர் மக்களின் தொற்று நோய்களை களைந்து அவர்களை மகிழ்வோடு வாழ வைத்த குளம் இது. இக்குளத்து நீரை இறைவனுக்கு அபிஷேகம் செய்து அதைப் பருக எத்தகைய பிணியும் பறந்தோடிவிடும் என்பது அகத்தியர் வாக்கு. எனவே இக்குளம் அவர் பெயராலேயே அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
நீண்ட நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், திங்கள், ஞாயிறு, வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சிவதரிசனம் செய்து ஆலயத்தில் மூலிகைத் தீர்த்தத்தைப் பெற்று அருந்தினால் நலம் பெறுவர் என்பது நம்பிக்கை. இவ்வாலய வழிபாட்டினால் பிள்ளைகள் நல்ல கல்வியறிவைப் பெறுவர். மேலும் திருமணத் தடை, மாங்கல்ய பாக்கியம் நீடிக்கவும் பிரார்த்திக்கின்றனர். கடன் தொல்லை நீங்கவும் இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது. வைகாசி விசாக திருநாளன்று திருப்போரூர் முருகப்பெருமான் சீர் வகைகளைக் கொண்டு வந்து இத்தலத்து இறைவனிடம் ஆசி பெற்று செல்லும் நிகழ்வு பல காலமாக வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது. கருவுற்ற பெண்கள் இங்குள்ள தையல்நாயகிக்கு மூன்று வெள்ளிக்கிழமைகள் நெய் தீபமேற்றி வழிபட்டால் சுகப்பிரசவம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம் செய்து, விளக்கேற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : தாம்பரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு