சின்னவெண்மணி, பீமேசுவரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் வட்டத்தில் ஜமீன் எண்டத்தூர் அருகில் சின்னவெண்மணி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
இறைவன்: பீமேசுவரர்
இறைவி : ஆனந்தவல்லி
தல விருட்சம் : வில்வம்
தலச் சிறப்புகள் : பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் இக்கோயில் மூலவரை வணங்கியுள்ளார். இங்குள்ள குபேர லிங்கத்தில் மாமுனிவர் முக்தியடைந்ததாகக் கூறுவர். மூலவ்ர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். அவர் மீது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் இரண்டு நாளும் பின் இரண்டு நாளும் காலையில் சூரிய ஒளி விழுகிறது. அவ்வாறே பங்குனி உத்திரத்திற்கு முன் இரண்டு நாளும் பின் இரண்டு நாளும் விழுகிறது.
கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அருகே குபேரலிங்கம் உள்ளது. இங்குள்ள நவக்கிரகங்கள் பிற கோயில்களிலிருந்து சற்றே வேறுபட்ட நிலையில், மேற்கு நோக்கிய நிலையில் சூரியன் அமைந்துள்ள வகையில், காணப்படுகிறது. அம்மனுக்கு வெளிச்சத்தைத் தருவதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். குருவும் ராகுவும் தெற்கிலும், சூரியனும் புதனும் மேற்கிலும், சந்திரன் கிழக்கிலும், அங்காரகனும், கேதுவும் வடக்கிலும், சனீசுவரர் கிழக்கிலும் அமைந்துள்ளனர். இந்த சன்னதிகளின் கீழே ஆறு ஓடுவதாகக் கூறுகின்றனர். நுழைவாயில் மண்டபத்திலும், அம்மன் சன்னதியிலும் நிலாவும், பாம்பும் காணப்படுகின்றன. அம்மனின் பார்வையில் கோயில் குளம் காணப்படுகிறது.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயிலில் பீமசேனன் பூஜித்த ஈசன் ஸ்ரீ பீமேஸ்வரர் என்ற திருநாமத்தோடு தரிசனம் கொடுக்கிறார். சிவ கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமுர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகிய சன்னதிகள் இருக்கின்றன. பிரகாரத்தில் தனிச் சன்னதிகளில் , கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், கஜலக்ஷ்மி ஆகிய தெய்வங்களை தரிசித்துக்கொள்ளலாம்.சண்டிகேஸ்வரர் சமீபம் ஒரு சித்தரின் அதிஷ்டானம் காணப்படுகிறது. பைரவர், மற்றும் நவகிரக சன்னதிகள் இருக்கின்றன. கோயில் திருக்குளம் எதிரில் உள்ளது. ஒரு வேளை பூஜை இங்கு நடைபெறுகிறது.
பௌர்ணமி, கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷம், அன்னாபிஷேகம், திருவாதிரை, திருக்கார்த்திகை போன்ற உற்சவங்கள் நடைபெறுகின்றன.
காலை 5.00 மணி முதல்10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு