ஜுரஹரேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இக்கோயில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு அருகே உள்ளது.
இறைவன் : ஜுரஹரேஸ்வர்
தல தீர்த்தம் : ஜுரஹரேஸ்வரர் தீர்த்தம்
தலச் சிறப்புகள் : காய்ச்சல் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது, இந்த ஜன்னல்களின் வழியே வரும் காற்று, வெளிச்சம் ஆகியவை நோயைக் குணமாக்குவதாக இருக்கிறது. மூலஸ்தானத்திலும் கருங்கல் ஜன்னல் உள்ளது குறிப்பிடத்தக்கது. பழமையான கோயில் என்பதால், தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. தீராத காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள ஜுரஹரேஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர். இங்குள்ள சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு : சுமார் 2000 ஆண்டுகள் மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த திருக்கோயில். தாரகன் என்ற அசுரன், சிவனுடைய சக்தியால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான். இதன் காரணமாக தேவர்களைத் துன்புறுத்தினான். வருத்தமடைந்த தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். அவர்களிடம் கவலை வேண்டாம் என சிவன் சொல்லிவிட்டாலும் காலதாமதமாகிக் கொண்டே வந்தது. இந்நிலையில், சிவன் திடீரென தவத்தில் ஆழ்ந்து விட்டார். அவரை மன்மதன் மூலமாக எழுப்பும் முயற்சியில் மன்மதன் இறந்தானே தவிரபலன் கிடைக்க வில்லை. எனவே, தேவர்கள் சிவனைப் பல ஸ்தோத்திரங்கள் சொல்லி துதித்தனர். இதையடுத்து சிவனின் கருணைப் பார்வை கிடைத்தது. அவர் தன் நெற்றிக்கண்ணில் இருந்து சுடரை வெளிப்படுத்தி அதை அக்னியிடம் கொடுத்தார். அக்னியின் வயிற்றை அந்த நெருப்பு தாக்கியது. அப்போது, எல்லா தேவர்களுமே அதன் உக்கிரத்தை உணர்ந்தனர். கடும் காய்ச்சல் போல உடல் நெருப்பாய் சுட்டது. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக தேவர்கள் மேலும் துடித்தனர். சிவனையே அவர்கள் சரணடைந்தனர். அவர்களிடம் சிவன், பூலோகத்தில் காஞ்சி என்னும் திருத்தலத்தில் சுரன் என்ற அரக்கனை ஒழித்துவிட்டு லிங்கவடிவில் எழுந்தருளியுள்ளேன். அதை ஜுரஹரேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். நீங்கள் அந்த லிங்கத்தை வழிபட்டால் உஷ்ணம் தணியும் என்றார். தேவர்களும் இங்கு வந்து வழிபட்டு, சுரஹரேஸ்வர தீர்த்தத்தில் நீராடி உடல் குளிர்ந்தனர்.
கோயிலின் அமைப்பு : ஸ்ரீரங்கத்தைப் போல தோற்றமுடைய பிரணவாகார விமானம் உள்ளது. இந்த அபூர்வ விமானத்தின் நான்குபுறமும் ஜன்னல்கள் உள்ளன. சிற்பங்கள் அதிகமில்லாத இக்கோயில் தூங்கானை மாடக் கோயில் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலக் கற்றளியாக இருதளங்களைக் கொண்டதாக உள்ளது. இடைநாழிகை, அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய மண்டபங்களைப் பெற்று விளங்குகிறது. கருவறையில் இறைவன் இலிங்கவடிவில் எழுந்தருளியுள்ளார். வெப்புநோயால், சுரத்தால் அவதிப்படுபவர்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால் நலமடைவார்கள் என்பது ஐதீகம். கருவறை தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. அவ்விடத்தில் காற்று புகுவதற்காக சன்னல்கள் அமைகப்பட்டிருக்கின்றன. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான் வெப்பம் மிகுந்தவராகக் கருதப்படுவதால் இவ்வாறு சன்னல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விமான தாங்குதளம் உபபீடம் பெற்று விளங்குகிறது. தாங்குதளம் உபானம், ஜகதி, குமுதம், கண்டங்களில் பாதம் பெற்று பாதபந்த அதிட்டானமாக விளங்குகிறது. சுவர்ப்பகுதிகளில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. இரண்டு அரைத்தூண்களுக்கு நடுவே கும்பப்பஞ்சரம் அமைப்பட்டுள்ளது. கூரைப்பகுதியில் கொடுங்கையின் கீழ் எழிலார்ந்த பூதகண வரிசை செல்கிறது. கணங்களின் உருவ அமைப்பு பல்லவர் கால சிற்பக் கலையை பிரதிபலிக்கிறது. உத்தரம் வரை கருங்கல்லால் அமைந்த பழைய அமைப்பாகவும், அதற்கு மேலே அமைந்த தள வரிசை சுதையால் தற்காலத்தில் அமைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. தளங்களில் சுதையாலான சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கணேசர், சிவன், முருகன், ஆண், பெண் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. சிகரத்தில் முடிவில் உலோகத்தாலான கலசம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இருதளங்களைக் கொண்டுள்ளது. கற்றளியாக விளங்குகின்றது. இடைநாழிகை, அர்த்தமண்டபம், முகமண்டபம் பெற்று விளங்குகின்றது. தூங்கானை மாடக்கோயில் வகையைச் சார்ந்தது. பிற்காலக் கோபுரம் ஒன்று சுதைச் சிற்பங்களைக் கொண்டுள்ளது.
காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு