அவரக்கரை, காச்யபேஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில், ராணிப்பேட்டையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவன் : காச்யபேஸ்வரர்
இறைவி : பர்வதவர்த்தினி
தல சிறப்புகள் : காச்யப முனிவர் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம். விசுவாமித்திரர் வழிபட்ட பழமையான சிவலிங்கம் உள்ளது. இந்தக் கோவில்களுடன் பக்தர்கள் தற்போது காரையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள நவ்லாக் பண்ணை பகுதிக்குள் உள்ள பழமையான சிவலிங்கம் ஒன்றையும் வழிபட்டு வருகிறார்கள். இது விசுவாமித்திர முனிவர் வழிபட்ட லிங்கம் என்று கூறப்படுகிறது. இங்கிருந்த சிவாலயம் பராமரிப்பின்றி நாளடைவில் மறைந்து போனதால், ஆலய சிவலிங்கத்தை மட்டும் மீட்டு பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். காஷ்யபர் ஆவாரங்காட்டில் சிவபெருமானைக் குறித்து தவமியற்றினார். அவர் மனதில், ஈசன் என்ன தனக்கு உபதேசிப்பது’’ என்பதாக ஒரு கர்வம் சிறுபொழுது ஏற்பட்டு மறைந்தது. அதன் காரணமாக ஈசன் அவருக்கு நீண்ட காலம் சென்றே தரிசனம் தந்தார். கல்ப மூலிகை ரகசியங்களையும் எடுத்துரைத்தார்.
தல வரலாறு: வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷடாரண்ய ஷேத்திரங்கள் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன. பாலாற்றின் கரைகளில் அமைந்துள்ள இந்த சிவாலயங்கள் அனைத்தும், அங்கு லிங்கங்கள் அமைத்து வழிபட்ட முனிவர்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. ஆதியில் அன்னை பார்வதிதேவி பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். பார்வதிதேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதிதேவியை மணம் முடிக்க காஞ்சிபுரத்தில் எழுந்தருளினார். இறைவனின் திருமண விழாவை காண மகரிஷிகள், முனிவர்கள் என பலரும் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தனர். காஞ்சி மாநகரமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தினசரி பூஜைகளை செய்வதற்கு அமைதியான இடம் தேடினர். அதற்காக பாலாற்றின் கரையோரம் இருந்த காடுகளில் தங்கினர். இவ்வாறு ரிஷிகள் தங்கி லிங்கங்கள் அமைத்து பூஜைகள் செய்த இடங்கள் பிற்காலத்தில் ஷடாரண்ய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சுயம்பு லிங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷடாரண்ய ஷேத்திர சிவாலயங்கள் ஆற்காட்டை அடுத்த வேப்பூர் மற்றும் மேல்விஷாரம், புதுப்பாடி ஆகிய இடங்களில் பாலாற்றின் தென்புற கரைகளிலும், அவரக்கரை, காரை, வன்னிவேடு, குடிமல்லூர் ஆகிய இடங்களில் பாலாற்றின் வடபுற கரைகளிலும் அமைந்துள்ளன. ஆற்காட்டில் இருந்து கார், ஆட்டோ அல்லது இரு சக்கர வாகனத்தில் சென்று கோயில்களை தரிசிக்கலாம். பேருந்து வசதிகள் எல்லா கோயில்களுக்கும் இல்லை.
காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : வாலாஜா ரோடு, காட்பாடி, அரக்கோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு