மேல் சேவூர், ரிஷபபுரீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தி
ல் செஞ்சி திண்டிவனம் நெடுஞ்சாலையில், வல்லத்திலிருந்து தெற்கே 6 கி.மீ. தூரத்தில் உள்ளது. செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.
இறைவர் : ரிஷபபுரீஸ்வரர்
தல விருட்சம் : புன்னை
தல தீர்த்தம் : சங்கராபரணி
தலச் சிறப்புகள் : கருவறையில் ரிஷபபுரீஸ்வரர், நாக குடையின் கீழ், லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். மேல்சேவூர் எனும் இத்தலம் சிவபெருமானின் வாகனமான காளையான ரிஷபம் வழிபட்டதாகும். எனவே, ரிஷபபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. செங்கம் என்கிற தலத்தில் ரிஷபேஸ்வரர் என்ற பெயரில் ஒரு திருக்கோயில் உள்ளது. இதுதவிர ரிஷபேசம், ரிஷப ஆருடன் என்ற பெயரிலும் சிவாலயங்கள் உள்ளன. மொத்தத்தில் தன் வாகனத்திற்கும் சிவபெருமான் மதிப்பளிக்கும் அரிதான தலமாக மேல்சேவூர் விளங்குகிறது. இன்றளவிலும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தால் அன்னை மங்களாம்பிகையின் பாதத்தை நீர் தொட்டதும் அது வடிந்து விலகுவது அதிசய நிகழ்வாகும்.
தல வரலாறு : ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து உத்தம சோழ வளநாட்டு சேவூர் என இன்றைய மேல் சேவூர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் மிகவும் பழமையா னது கி.பி. 898ம் ஆண்டு முதலாம் ஆதித்திய சோழனின் 27ம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும். இதன்மூலம் இத்திருக்கோயில் சோழ மன்னர்களின் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கியதை அறிய முடிகிறது. வீரமலை சுவாமிகளின் சீடர் பாபு நாயுடு அவர்கள் இயற்றிய மங்களாம்பிகை அம்மன் பாடல்கள் மற்றும் சேவூர் ராமசாமி நாயுடு அவர்கள் இயற்றிய மங்களாம்பிகை துதிப்பாடல்கள் என இரண்டு நூல்கள் அம்மனைப் புகழ்ந்துரைக்கின்றன. சேவூரை சேவை நகர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மணச்சநல்லூரில் வணிகர் குலத்தில் தோன்றியவர் வீரமலை சுவாமிகள் ஆவார். இளம் வயதிலேயே கல்வியும், அறிவும் கொண்ட இவர் ஒரு கடையில் கணக்கராக வேலை பார்த்தார். வெள்ளி தோறும் திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரியை வழிபட்டு வந்தார். வேலையை விட்டு உதறி, அம்மா மண்டபக் காவிரி நீரை மட்டுமே பருகி தவமிருந்தபோது, 12ம் நாள் அகிலாண்டேஸ்வரி அவர் முன்தோன்றி மந்திர உபதேசம் செய்து அருளினாள் கி.பி.1870ம் ஆண்டில் முக்தியடைந்தார். அப்போது அடுத்த பிறவியில் மேல்சேவூர் நாராயணசாமி விஜயலட்சுமி தம்பதியினரின் மகனாகப் பிறந்து அருள் வழங்கப் போவதாகக் கூறி மறைந்தார். அதன்படியே நாராயணசாமி நாயுடுவின் மகன் பாபு நாயுடுவாக தோன்றிய அவர், அருளாளராக வாழ்ந்து, சிவாலயத்தின் அருகேயே தந்தையும் தனயனும் ஜீவசமாதியானார்கள். இவர்கள் இன்றும் தமது அருளை வழங்கி வருகின்றனர். அடியார்களும் இவர்களுக்கு வழிபாடு மற்றும் குரு பூஜையை நிகழ்த்தி வருகின்றனர். ஆபத்தான ஆற்று வெள்ளத்தைத் தடுத்து ஊரைக் காத்த தலம் என்பதால் இத்தலம் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தினைத் தடுக்கும் தலமாகத் திகழ்கின்றது.
கோவில் அமைப்பு : இவ்வாலயம் சங்கராபரணி ஆற்றின் மேற்குக் கரையில் கிழக்கு முகமாய் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆனால், கிழக்கு வாயில் மூடப்பட்டு, ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள மேற்கு வாயில் வழியேதான் ஆலயத்திற்குள் சென்றுவர முடியும். பழங்காலத்தில் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த ஆற்றின் வெள்ளநீர் ஆலயத்தைச் சூழ்ந்து கொண்டது. மேல்சேவூரையும் வெள்ளம் ஆக்ரமிக்கத் தொடங்கியது. அப்போது ஊர்மக்கள் அனைவரும் அன்னை மங்களாம்பிகையையும் இறைவன் ரிஷபபுரீஸ்வரரையும் மனமுருகி வேண்டி தங்களையும் தங்கள் ஊரையும் காத்தருள வேண்டி நின்றனர். அடியார்க்கு செவி சாய்க்கும் இறைவன், வெள்ளநீர் பெருக்கெடுத்து அன்னை மங்களாம்பிகையின் காலைத் தழுவி மேலே ஏறத் தொடங்கியது. உடனே, அம்மையப்பனின் அருட்பார்வையால் வெள்ளநீர் கீழே இறங்கி திசை மாறி ஆற்றில் ஓடத் தொடங்கியது. பஞ்சபூதத்தை ஆளும் பரமனுக்கு நீர் கட்டுப்பட்டது. ஊரும் மக்களும் காப்பாற்றப்பட்டனர். அனைவரும் இறைவன், இறைவியின் கருணையை நினைத்து நன்றி கூறினர். அது முதல் ஆற்றை நோக்கிய கிழக்கு வாயில் மூடப்பட்டது. அதன்பின் மேற்குத் திசையில் எழுப்பப்பட்டதே இந்த ராஜகோபுரம் ஆகும்.
மூன்று நிலை ராஜகோபுரம் ஐந்து கலசங்களுடனும் புராண, இதிகாச நிகழ்வுகள் சுதை வடிவ சிற்பங்களைக் கொண்டு கம்பீரமாக விளங்குகிறது. ராஜ கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் விநாயகர் சந்நதியும் இடதுபுறம் முருகப்பெருமான் சந்நதியும் அமைந்துள்ளன. வலமாக வந்தால் அன்னை மங்களாம்பிகையின் தனிச்சந்நதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மீண்டும் வலமாக வந்தால் கொடிமரம், பலிபீடம், நந்திதேவரைக் கடந்ததும் இறைவன் ரிஷபபுரீஸ்வரர் பிரகாசமாய் காட்சி தருகின்றார். கருவறை கோஷ்ட தெய்வங்களாக சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சப்தமாதர்கள், ஈசானமூர்த்தி, தத் புருஷ மூர்த்தி, அகோர மூர்த்தி, சத்யோஜாத மூர்த்தி, ஸஹஸ்ர லிங்கம், காசி விஸ்வநாதர், வள்ளி தெய்வானையோடு விளங்கும் ஆறுமுகன், நடராஜர் சந்நதிகள் ஒருங்கே அமைந்துள்ளன. சந்தன மேடை, புஷ்ப மேடை, மடப்பள்ளி, நந்தவனம் முதலானவைகளும் ஆலய வளாகத்தில் அமைந்துள்ளன. கிழக்கு முகமாக சங்கராபரணி ஆற்றை நோக்கியவாறு இறைவன் ரிஷபபுரீஸ்வரர் அருள்கிறார். சுயம்பு லிங்கமாகத் தன் திருமேனியில் காளையின் குளம்பு வடுவுடன் காட்சி தருகின்றார். இதற்குச் சான்றாக இறைவனின் பெயர் தான்தோன்றி மகாதேவர் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் சந்நதியின் இட துபுறம் தெற்கு முகமாக தனிச்சந்நதி கொண்டு அன்னை மங்களாம்பிகை காட்சி தருகின்றாள். நான்கு திருக்கரங்களுடன் அன்னை தாமரை பீடத்தில் நின்ற கோலமாக அருள் வழங்குகின்றாள்.
திருவாதிரைத் திருவிழாவில் நந்தீஸ்வரரும், மங்களாம்பிகையும் மதியம் புறப்பட்டு வருவர். சிவனை கண்ட அம்மன், சினந்து பாதி வழியிலேயே தன் பிள்ளைகளுடன் கோயில் வந்தடைவார். தனக்கும், பரவை நாச்சியார்க்கும் ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்திட பெருமான் இரவில் இருமுறை தூது சென்ற நன்றியால் சுந்தரர் அம்மனிடம் தூது சென்று இருவரையும் சேர்த்து வைப்பார். சுந்தரர் தூது சென்ற சிறப்பு ஆதிரைத் திருநாளில் இங்கு மட்டுமே நடைபெறுகிறது. இங்குள்ள ஆற்றை சங்கரன் தனது பரணியால் சுத்திகரித்ததால் சங்கரா பரணி என்று அழைக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் மூன்றாம் வெள்ளிக் கிழமை அன்று சந்தன நிறைமண விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிக்கிருத்திகை, திருவாதிரை. பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள சுவாமியையும், அம்மனையும் பிரார்த்தனை செய்கின்றனர். பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : திண்டிவனம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை