எறும்பூர், பட்சீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலையில் எறும்பூர் என்னுமிடத்தில் உள்ளது.
இறைவன் : பட்சீஸ்வரர்
இறைவி : திரிபுரசுந்தரி
தல சிறப்புகள் : கருவறைக்கு இடப்புறத்தில் பூரணை, புஷ்களை சமேதராக ஐயப்பன் தனி சன்னதியில் அருள்பாலித்து வருவது சிறப்பு. மூலவருக்கு பின்புறம் எந்திர அமைப்பு காணப்படுகிறது. அம்மாதிரியான அமைப்பை வேறு கோயில்களில் காண இயலாது. வருடத்திற்கு ஓரிரு முறை கதிரவனின் ஒளி மூலவர் மீது படரும் அற்புத நிகழ்வும் நடைபெறுகிறது.
மகாமண்டபத்தின் வடகிழக்கில் நவகிரகங்கள் பன்னிரண்டு ராசிகளுக்கான சின்னங்களின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது. விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் போன்ற பரிகார தேவதைகளின் திருவுருச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கருவறைக்கு இடப் புறத்தில் பூரணை, புஷ்களை சமேதராக ஐயப்பன் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். அவருக்கு முன்பாக கஜவாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
தல வரலாறு : வீரசோழநல்லூரிலே கரிய மாணிக்கத்தைக் கண்டேன் நாராயணா எனும் நாமம். என்ற வரிகள் ஆழ்வார்களின் தொகுப்பில் காணப்படுவதாக கூறுகிறார்கள். ராசேந்திர சோழன் காலத்தில் இவ்வூர் வீரசோழ நல்லூர் என்று அழைக்கப்பட்டதாம். இவ்வூருக்கு அருகில் கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் கோயிலும் அமைந்திருப்பது கூடுதல் விசேஷமாகும். ஊரின் மையப்பகுதியில் பிரதான வீதியின் கிழக்கு திசை வாயில் கொண்டு ஆகம விதிகளின்படி பட்சீஸ்வரர் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. விமானம், மூலவர் சன்னதி, அர்த்த மண்டபம், திரிபுரசுந்தரி அம்பாள் சன்னதி, நந்தி மண்டபம், மகாமண்டபம், உள்வெளிப் பிரகார அமைப்புகளுடன் கலை நயத்தோடு காணப்படுகிறது. வற்றாத தீர்த்தக் கிணறும் உள்ளது. தில்லைச் சிற்றம்பலம், திருவண்ணாமலை, திருவோத்தூர் போன்று பல நூற்றாண்டுகள் பழமையும் புரதானப் பெருமையும் மிக்கதாக இத்திருக்கோயிலின் சிவலிங்கம் காணப்படுகிறது. இந்தப் பெருமான், அல்லதைப் போக்கி, நல்லதைச் செய்யும் வல்லமையைப் பெற்றிருக்கின்றார் என்று பலன் கண்டோர் கூறுகிறார்கள்.
கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் ராசேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த கோயில் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தொல்லியல் துறை புதையுண்ட கோயிலைத் தோண்டியபோது உடைந்த கல் சிற்பங்கள், கடவுள் திருவுருவச் சிலைகள், கல்வெட்டுகளை காண முடிந்தது. அகழ்வாராய்ச்சி தொடர்ந்த போது துர்க்கையம்மன் சிலை கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நடராஜர் சிலையும் தோண்டியெடுக்கப்பட்டது. அதைக்கண்டு கிராம மக்களும் பக்தர்களும் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். தொல்பொருள் துறை ஆய்வாளர்கள் உதவியோடு புனரமைப்புக் குழுவினரின் அயராத முயற்சியால் மூலவரும், நந்தியும் தோண்டியெடுக்கப்பட்டு ஆகமவிதிகளின்படி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.
இதே கால கட்டத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் பட்டீஸ்வரன் கோயில் குறித்த தொல்லியல் களப்பணி ஆய்வின் போது துர்கை அம்மன் கோயில் இருந்ததாகவும், அதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளதாகவும், ராஜேந்திர சோழன் காலத்து வகையைச் சேர்ந்தது எனவும் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் மக்கள் பழைமை வாய்ந்த இந்தக் கொற்றவை சிலையை துர்கை அம்மனாக வழிபட்டு வந்துள்ளனர். சங்க காலத்தில் ஐந்திணை நிலங்களில் ஒன்றான பாலை நிலத்தின் கடவுளாக கொற்றவை தெய்வம் இருந்துள்ளதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. மூவேந்தர்கள் காலத்திலும் கொற்றவை வழிபாடு இருந்துள்ளது. அந்த வகையில் சோழர், பல்லவர் காலத்தில் வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த மக்கள் இந்தச் சிலையை வழிபட்டு வந்திருக்க வேண்டும்.
பவுர்ணமியன்று சிறப்பு பூசைகள், வழிபாடுகள் நடைபெறுகிறது. அனைத்து பிரதோஷ நாட்களிலும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. தைப் பொங்கலன்று சிறப்பு ஆராதனைகள் செய்யப்படும். அப்போது பட்சீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்படும். தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள சிவனை மனதார பிரார்த்தித்துச் செல்கின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள சிவனுக்கு புது வஸ்திரம் சாற்றியும், நெய் விளக்கேற்றியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : விழுப்புரம் , மேல்மருவத்தூர், திண்டிவனம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு