போத்துராஜா மங்கலம், போர்மன்னலிங்கேஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலையில் இருந்து அவளூர்பேட்டை செல்லும் நெடுஞ்சாலையில் 16 வது கி.மீ. மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது.
இறைவன் : போர்மன்னலிங்கேஸ்வரர்
தல சிறப்புகள் : போத்துராஜா மங்கலம் கிராமத்தில் அருள்பாலிக்கும் போர்மன்னலிங்கேஸ்வரர் மட்டும் ஆண்டு முழுவதும் தேரில் அமர்ந்திருக்கிறார். தேரில் அமைந்துள்ள போர்மன்னலிங்கேஸ்வரரை தரிசிக்கும் பாக்கியமும் நமக்கு ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. இங்குள்ள கோயில் கருவறையில் தேர் நிலையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதில், போர்மன்னலிங்கேஸ்வரர் அமர்ந்து அருட் காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் முடிந்த மூன்றாம் நாளில் வெகு விமரிசையாக தேர்த் திருவிழா நடக்கிறது. அப்போது, கருவறையில், நிலையில் இருக்கும் தேர், அலங்கார தோற்றத்துடன் வெளியில் பவனி வரும். அந்த கண்கொள்ளா காட்சியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். போர்மன்னலிங்கேஸ்வரர் பல இடங்களில் போத்துராஜா எனும் பெயரில் வழிபடப்படுகிறார். திருவண்ணாமலை உள்ளிட்ட பல இடங்களில் போத்து ராஜா திருக்கோயில் அமைந்துள்ளது. ஆனாலும், மங்கலம் கிராமத்தில் உள்ள சிறப்பு வேறு எங்கும் இல்லை என்றே கூறலாம்.
தல வரலாறு : துவாபரயுகத்தில் பரமேஸ்வரனும், பார்வதியும் பூலோகத்தை சுற்றி வந்தனர். வன்னி மரங்கள் நிறைந்த பகுதியில் இருவரும் ஓய்வு எடுத்தனர். அப்போது, பார்வதி தேவியார் மணலால் கோட்டையையும், கொத்தளங்களையும் விளையாட்டுப் போக்கில் வடிவமைத்தார். அதன் அழகில் மயங்கிய ஈஸ்வரன், அந்த மணல் கோட்டையை மையமாக்கி சிவானந்தபுரி என்ற அழகிய நகரத்தை உருவாக்கினார். பார்வதி தேவியார் உருவாக்கிய மணல் கோட்டையை பாதுகாக்க, யாக குண்டத்தில் இருந்து ஈஸ்வரனால் உருவானவர்தான் போர்மன்னன் வீரசாட்டை, மல்லரி, கொந்தம், கொடிசிலை போன்ற ஆயுதங்களுடன் போர்மன்னன் காவல் பணிபுரிகிறவராக இறைப் பணியாற்றினார்.
மகாபாரதத்தில் 18 நாட்கள் நடந்த போரில், பாண்டவர்கள் வெற்றி பெற உதவியவர் போர்மன்னன். பாண்டவர்களை வெற்றி பெற செய்வதில் கருத்தாக இருந்த கிருஷ்ண பரமாத்மா, பார்வையாலேயே எதிரிகளை வீழ்த்தும் வல்லமை படைத்த போர்மன்னனை பாண்டவர்கள் பயன்படுத்த வேண்டும் என ஆலோசனை கூறினார். அதற்காக, பாண்டவர்களின் சகோதரியாக விளங்கிய சங்குவதியை போர்மன்னனுக்கு திருமணமும் முடித்து வைத்தார். அன்று சிவானந்தபுரியை காக்கும் பணியில் ஈடுபட்ட போர்மன்னராஜாதான், இப்போது போர்மன்ன லிங்கேஸ்வரராக மங்கலம் கிராமத்தில் காட்சியளிக்கிறார். அதனால், இந்த கிராமத்தின் பெயரே போத்துராஜாமங்கலம் எனும் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மங்கலம் கிராமத்தில் கடந்த 173 ஆண்டுகளாக போர்மன்னலிங்கேஸ்வரர் கோயிலில் தேர்த் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. மங்கலம் கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள பசுங்குன்றம் என்ற பசுமலையில் போர்மன்னன் வணங்கிய ஆதிலிங்கேஸ்வரர் சமேத ஆதி அழகம்மை கோயில் அமைந்துள்ளது. அங்கு பொதுமக்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகிறார்கள்.
வட தமிழகத்தில் நாம் திரௌபதி அம்மன் கோவில்களில் உள்ள மரத்தால் ஆன திருமேனிகளின் வழிபாட்டைக் காணமுடிகிறது. திரௌபதி அம்மனின் திருவுருவம், அர்ச்சுனன், பீமன், தருமன் மற்றும் கிருஷ்ணனின் திருஉருவங்கள் இன்று மரத்திற்குப் பதிலாக செப்பு மற்றும் பஞ்சலோகத் திருமேனியாக மாற்றப்பட்டு விட்டது. இருப்பினும் திரௌபதியின் காவலர் போத்துராஜா படிமம் இன்றும் மரத்தால் செய்யப்பட்டு ஊர்வலம் எடுத்து வரப்படுகிறது. மிகப் பிரம்மாண்ட போத்துராஜா திருவுருவம் மரத்தினால் செய்யப்பட்டுள்ளதைக் நாம் காணலாம். தேருடன் சேர்த்து 18 அடிக்கும் மேற்பட்ட அளவிலான மரச்சிற்பம், சிவப்பு பச்சை மஞ்சள் போன்ற ஒளிர்வண்ணங்கள் தீட்டப் பட்டு கம்பீரமாக இருப்பதைக் காணலாம். “நின்றால் கோவில் நகர்ந்தால் தேர்” என்று கூறப்படும் வகையில் சக்கரத்துடன் கூடிய தேரின் மேல் அமர்ந்த வண்ணம் உள்ள இந்த மரப்படிமம் தமிழகத்தின் மிகப் பெரிய மரப் படிமங்களில் ஒன்றாகும்.
திரௌபதி அம்மன் வழிபாட்டில் தொடர்புடைய அரவான் திருவுருவங்களும் மரச் சிற்பங்களாய் இருப்பதைக் காணலாம். அரவான் உருவமும் ரேணுகாதேவி உருவம்போல் சிரம் மட்டும் அன்றாட வழிபாட்டிலும் ஆண்டிற்கு ஒருமுறை உடலுடன் பொருத்தியும் வழிபடப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் அரவானின் அங்கங்கள் பிரித்து இணைக்கும் பாகங்களாய் கோயிலில் பாதுகாக்கப்பட்டு ஆண்டுவிழாக்களின் போது இணைத்து அலங்கரிக்கப்பட்டு வழிபடப்படுகிறது. ஆண்டுதோறும் தேர்திருவிழாவின் போது வேளாங்கண்ணி மாதாவின் அலங்கரிக்கப்பட்ட மரச்சிற்பம் பவனி வருகிறது. தமிழகமெங்கும் பல ஆலயங்களில் அகற்றப்பட்ட மரச்சிற்பங்களைக் காண முடிகிறது. பாரத தேசம் காக்க போருக்கு எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று சொல்வது போல் 21 அடி உயரத்தில் தேரின் மீது நின்று அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். மகாபாரதப்போர் வெற்றியில் பங்கேற்ற பெருமையுடன் வந்த போத்ஹ்டுலிங்க மன்னருக்கு கோயில் எழுப்பப்பட்ட இடமே போத்துராஜா மங்கலம். இந்த ஊரில் இருந்து 2 கி.மீ யில் உள்ள பசுமலையில் மன்னரின் உடல் புதைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி நாளில், ஆதிலிங்கேஸ்வரர் சமேத ஆதி அழகம்மை கோயிலுக்கு சென்று போர்மன்னலிங்கேஸ்வரர் பூஜை நடத்துவார். அந்த விழாவிலும் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழா நடைபெறும் அன்று இரவு அருள் வாக்கு சொல்லும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றதாகும். பின்னர், மகா கும்ப படையலில் வழங்கப்படும் பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இங்கு காலம் காலமாக உள்ளது.தேர்த் திருவிழா நடைபெறும் நாளில், தங்கள் விளை நிலங்களில் விளைந்த தானியங்களை தேரின் மீது பொதுமக்கள் வாரியிறைப்பார்கள். போர்மன்னலிங்கேஸ்வரர் மீது விளை பொருட்கள் விழுந்தால், அடுத்த ஆண்டில் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. மூலவராகவும் உற்சவராகவும் இருக்கும் சுவாமிக்கு மாசி மகம் முடிந்த மூன்றாவது நாள் தேரோட்டமும் 21 வது நாள் இரவு மஹா கும்ப வைபவமும் நடைபெறுகிறது. இந்த விழாவின் போது அவருக்கு மலையளவு சாதமும் மாவிளக்கும் படைக்கப்படுகிறது. இந்தப் படையலில் குழந்தைப்பேறு இல்லாத திருமணத்தடை உள்ள பெண்கள் சுவாமிக்கு படைத்த உணவை உண்கின்றனர்.
தினமும் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 3.00 மணி முதல் 8.00 மணி வரையும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : விழுப்புரம் , மேல் மருவத்தூர், திண்டிவனம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை