அருப்புக்கோட்டை, மீனாட்சி சொக்கநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில், மதுரையில் இருந்து 54 கி.மீ தொலைவிலும், சிவகாசியில் இருந்து 44 கி.மீ. தொலைவிலும், விருதுநகரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் உள்ள அருப்புக்கோட்டையில் அமைந்துள்ளது. இவ்வூர் திருச்சுழி சாலையில் சொக்கலிங்கபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் செங்காட்டிருக்கை இடத்துவளி என்றழைக்கப்பட்டது.
இறைவன் : சொக்கநாதர்
இறைவி : மீனாட்சி
தல விருட்சம்: வில்வமரம்
தல தீர்த்தம் : சூரிய புஷ்கரணி, வில்வ தீர்த்தம்
தலச் சிறப்புகள் : ஒவ்வோராண்டும் மார்ச் 20ஆம் நாள் முதல் 30ஆம் நாள் வரை சூரிய ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம். இங்குள்ள படித்துறை விநாயகர் ஜடாமுடியுடன் காணப்படுகிறார். கருவறையில் மூலவர் இலிங்கத் திருமேனி. மீனாட்சி அம்மன் தனிச் சன்னதியில் நின்ற நிலை கோலம்.
தல வரலாறு : 800 ஆண்டுகள் பழமையானது. பிற்காலப் பாண்டியரின் கலைப்பாணியை கொண்டு விளங்குகிறது. முதலாம் சடையவர்மன் குலசேகரன் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்ட இக்கோயில் அவனது இளவல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் முற்றுப்பெற்றது. இச்சிவன் கோயிலின் சுவரில் 12 கல்வெட்டுகளும், கோவிலின் எதிரில் வெட்டப்பட்டுள்ள ஊருணியில் ஒன்றும், அருகிலுள்ள வாழவந்தம்மன் கோயிலில் மூன்றும், திருச்சுழி சாலையில் இராமலிங்கர் நூற்பு ஆலை அருகில் ஒன்றுமாக மொத்தம் 17 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகளின் முதல் தொகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் மூலம் இவ்வூரின் பெயர் இடத்துவளி என்பதும் இது செங்காட்டிருக்கை என்னும் உட்பிரிவைக் கொண்ட வெண்புநாடு எனும் நாட்டுப் பிரிவுக்குள் அடங்கியிருந்தது என்பதும் பெறப்படுகிறது. கோயில் இறைவனின் பெயர் குறள்மணி ஈசுவரர் என்பதாகும். பிற்பாண்டிய மரபின் மன்னன் முதலாம் சடையவர்மன் குலசேகரனின் 18ஆம் ஆட்சியாண்டில் கி.பி. 1207ல் இக் கோயிலின் அர்த்தமண்டப நிலைக்கால் கைக்கோளன் குழைஞ்சான் சங்கன் என்பவனால் கொடையளிக்கப் பட்டுள்ளது. இவன் புரவுவரி மாராயன் என்னும் நிலவரி அதிகாரியாகச் செயல்பட்டவன். இவன் கோயில் திருமடை விளாகத்தில் வாழ்ந்தவன் என்பதால் இக்கோயில் குலசேகரன் காலத்திற்கும் முன்பாகவே தோற்றம் பெற்றுப் பின்னர் விரிவு படுத்தப்பட்டது எனக் கருதலாம். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கோயில் முழுமை பெற்ற போது தேவ கோட்டங்களில் துர்க்கையார், லிங்கபுராணதேவர், அருந்தவஞ்செய்த நாச்சியார் போன்ற திருமேனிகள் செய்து வைக்கப் பட்டுள்ளன. ரெட்டை அழகன் இடத்துவளிதட்டான் என்பவன் துர்கையாரை எழுந்தருளுவித் தான். தென்னிலங்கை வளஞ்சியர் என்னும் வணிகக்குழுவைச் சேர்ந்தவனும் இலுப்பையூர் என்னும் ஊரின் கிழவனுமான சேகல் சேவகத்தேவன் என்பவன் இலிங்கபுராண தேவரையும், அருந்தவஞ்செய்த நாச்சியாரையும் செய்தளித்தான். வீரபாண்டியன் பெருந்தெரு, விக்கிரமபாண்டியன் பெருந்தெரு, பழிவிலங்கிப் பெருந்தெரு, ஸ்ரீவல்லபப்பெருந் தெரு எனப் பல பெருந்தெருக்கள் இவ்வூரில் வணிக மையங்களாகச் செயல்பட்டுள்ளன. இங்குள்ள ஸ்ரீவல்லபப் பெருந்தெருவுக்கு தேசி ஆசிரியப்பட்டணம் என்ற பெயரும் வழங்கியுள்ளது. சிவன் கோயிலின் எதிரில் (தெற்கில்) அமைந்துள்ள ஊருணி கி.பி.1193ம் ஆண்டில் திருவாலவாயுடையான் சோழகங்கன் என்னும் அதிகாரியின் மகன் அழகன் அருளாளப் பெருமாளால் வெட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகளில் இலுப்பையூர், சிறுமணக்குளம், பெரியமணக்குளம், கும்பனூர் போன்ற அண்டை ஊர்களின் பெயர்கள் அறியப்படுகின்றன.
கோயிலின் அமைப்பு : கோயிலின் இராஜகோபுரம் கிழக்கு நோக்கிய நிலையில் 5 நிலைகள் கொண்டதாக 5 கலசங்களுடன் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே சென்றால் நந்தி மண்டபம், பலிபீடம், கருவறையை நோக்கிய நந்தி ஆகியன காணப்படுகின்றன. சதுர வடிவக் கருவறையின் மையப்பகுதியில் சதுர வடிவ ஆவுடையாருடன் இலிங்கத்திருமேனி உண்ணாழிகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள இக்கோயில் ஐந்து நிலை ஐந்து கலசங்களைக் கொண்ட கோபுரத்தைக் கொண்டுள்ளது. கருவறைக்கு வலதுபுறம் சோமாஸ்கந்தர் சன்னதியும், அடுத்து மீனாட்சி சன்னதியும் அமைந்துள்ளன. முன்மண்டபம் தூண்களுடன் அமைந்துள்ளது. மகா மண்டபம் இருவரிசைத் தூண்களுடன் காட்சியளிக்கிறது. கருவறை விமானத்தின் தாங்குதளப்பகுதியிலும், சுவர்ப்பகுதியிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயிலின் வலதுபுறத்தில் மிகப்பெரிய பரப்பில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. அதன் நடுவே நீராழி மண்டபம் காணப்படுகின்றது. மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, கற்பகவல்லி, லிங்கோத்பவர் உள்ளனர். இறைவியின் கோஷ்டத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய சக்திகள் உள்ளனர். திருச்சுற்றில் கன்னி மூல கணபதி, விநாயகர், முருகன், சிவகாமி, சப்த கன்னி, வடக்கு திசை நோக்கிய நிலையில் சண்டிகேசுவரர், சரசுவதி, வல்ல சித்தர், காசி விசுவநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிமணியர், மகாலட்சுமி, கால பைரவர், சந்திரன், நவக்கிரகம், நந்தி, ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர். தூண்களில் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள படித்துறை விநாயகர் ஜடாமுடியுடன் காணப்படுகிறார்.
ஆனி பூசம் கொடியேற்றம், ஆனி கேட்டை தேர், மூல நட்சத்திரத்தில் தீர்த்தவாரி என்ற வகையில் 12 நாள் திருவிழா, ஆனி பிரமோற்சவம், சிவராத்திரி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், கார்த்திகை தெப்பம், கார்த்திகை சோம வார சங்காபிஷேகம், திருவாதிரை உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : விருதுநகர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு