பரங்கிப்பேட்டை ,ஆதிமூலேசுவரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் பரங்கிப்பேட்டை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் வருணாசேத்ரம் என்றழைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வட கிழக்குப் பகுதியில் இக்கோயில் உள்ளது.
இறைவன் : ஆதிமூலேஸ்வரர்
இறைவி : அமிர்தவல்லி
தல மரம் : வில்வம், வன்னி
தல தீர்த்தம் : வருண தீர்த்தம்
தல சிறப்புகள் : திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல் சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலம். காஞ்சி மகாபெரியவரின் தந்தையார் சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஊர். அமிர்தவல்லி அம்மன் சிலைக்கு கீழ் ஸ்ரீசக்கரம் உள்ளதாம் . சித்திரை மாதம் சிவன், அம்பாள் இருவர் மீதும் சூரிய ஒளி படுமாம் . அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெறுமாம். இக்கோவிலில் ராமேஸ்வரம் ராமலிங்கசுவாமி, காசி விஸ்வநாதர், நீலகண்டர், நீலாயதாட்சி, சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பாதாளலிங்கம், கஜலட்சுமி, காலபைரவர், சூரியன் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். திருநள்ளாறில் கிழக்குப் பார்த்துகொண்டு நின்று சனீஸ்வரர் அருள்வது போல் இங்கும் இருக்கிறார்.
தல வரலாறு : சிவன் கோயில்களில் பைரவருக்கு அர்த்த பூசை செய்த பின்னர் நடையடைப்பர். இங்கு பைரவருக்கும், சித்திரகுப்தருக்கும் அவ்வாறாக பூசைகள் செய்த பின் நடை அடைக்கப்படுகிறது. அர்த்த சாமத்தில் சித்திரகுப்தர் சிவனுக்கு பூசை செய்வதாகக் கூறுவர். சித்தரகுப்தர் சிவனின் அருளைப் பெற்று அவருடைய கணக்கராகப் பணியாற்றி தலமாக இவ்விடம் கருதப்படுகிறது. காஷ்யப முனிவர் ஒரு முறை சிவனை எண்ணி யாகம் நடத்தினார். அந்த யாகத்தை நிறுத்த வருணன் மழையை ஏற்படுத்தினான். இதனால் முனிவர் வருணனை சபித்தார். வருணன் சக்தி இழந்தான். பின் அவன் சிவபெருமானை வணங்கி சாபம் தீர்ந்தான். வருணன் சிவபெருமானை தலத்திலேயே இருந்து அருளும்படி வேண்டினான். அப்படி இங்கே தங்கியுள்ள அந்த இறைவனுக்கு ஆதிமூலேஸ்வரர் என்று பெயர்.
சித்திர குப்தர் 12 வயதில் இறந்து விடுவார் என்று விதி இருந்தது. அவரது தந்தை வசுதத்தன் மிகவருந்தியபோது, சித்ரகுப்தன் இததலத்து சிவனை வழிபடுவோம் என்று தன் தந்தையிடம் சொன்னார். ஆதிமூலேஸ்வரரை வழிபட்டார்கள். மார்க்கண்டேயரை சிவபெருமானே வந்து காப்பாற்றினார். இத்தலத்தில் தன் துணைவியைப் பெருமைப்படுத்த அம்பாளை விட்டு எமனை தடுக்கச் சொல்கிறார். அம்பாள் எமனிடம், ”சித்திரகுப்தன் சிறந்த சிவபக்தன் அதனால் அவனை விட்டுவிடு ” என்கிறார். சிவபக்தர்களை அவ்வளவு சீக்கிரம் எமன் நெருங்கமாட்டார் என்பார்கள். மார்க்கண்டேயனை கொல்ல வந்த எமனை சிவன் இடது காலால் உதைத்தார் ,அந்த இடது பாகம் பார்வதி தேவியுடையது என்பார்கள். சேய்க்கு இரங்கும் குணம் தாய்க்குத்தான் உண்டு என்று மார்க்கண்டேயர் வரலாறும், சித்திர குப்தன் வரலாறும் சொல்கிறது. சிவனின் ஆணைப்படி சித்திரகுப்தனை எமன் கொல்லாமல் விட்டதுடன் தன் உதவியாளராகவும் ஏற்றுக் கொண்டார்.
வைகாசி விசாகம், கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், மாசி மகம், தை அமாவாசை, உள்ளிட்ட பல விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம் என்கிறார்கள். இங்கு ஆயுள் விருத்தியடையவும், மரண பயம் நீங்கவும் , நோய் தீரவும் மிருத்யுஞ்சய ஹோமம் செய்கிறார்கள், சஷ்டிஅப்தபூர்த்தி, சதாபிஷேகம், செய்து கொள்கிறார்கள். ஞானம், மோட்சம் தரும் கேது பகவானுக்கு அதி தேவதை சித்திரகுப்தர் ,அதனால் சித்திரகுப்தரை வணங்கினால் இவ்விரண்டும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். சிதராபெளர்ணமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆயுள்விருத்திக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்கிறார்கள். மாசி மகத்தன்று தீர்த்தவாரி. அருகில் இருக்கும் கடலுக்குச் சென்று வருணனுக்கு விமோசனம் கொடுக்கும் விழா நடக்கும்.
காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி
அருகிலுள்ள ரயில் நிலையம் : விருத்தாச்சலம், பண்ருட்டி, சிதம்பரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு