கோட்டைமேடு, சங்கமேஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோட்டைமேடு பகுதியில் ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ளது. உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் இருந்தும், ரயில் நிலையத்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
இறைவன் : சங்கமேஸ்வரர்
இறைவி : அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : மகிழ மரம்
தல தீர்த்தம் : தீர்த்தக் கிணறு
தல சிறப்புகள் : இங்கு அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் ஆறு முகங்களும் முன்னும் பின்னுமாக அனைத்து திசைகளையும் நோக்கிய வண்ணம் இருக்கும். ஆனால், ஒரே திசையை நோக்கிய ஆறுமுகங்களைக் கொண்ட முருகனாக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
கோவில் அமைப்பு : இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சுற்றுப்பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், நீலகண்டேஸ்வரர், சூரியன், காப்புவிநாயகர், தெட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். 63 நாயன்மார்களின் திருவுருவ சிலை இங்கு உள்ளது. சோமஸ்கந்தராக உள்ள முருகன் சூரபத்மனை வதம் செய்யும் கோலத்தில் காட்சிதருகிறார். வடக்குநோக்கிய மயில் வாகனத்துடன் சண்முக சுப்பிரமணியர் என்ற பெயருடன் உள்ளார். இவரது ஆறுமுகங்களும் நேரே நோக்கியநிலையில், 12 கைகளிலும் ஆயுதங்களைத் தாங்கியபடி காட்சி தருவது சிறப்பாக உள்ளது. கோயில் அமைப்புப்படி இவரே மூலவராக அருள்பாலிக்கும் தோற்றத்தில் உள்ளார். சுவாமிக்கு இடப்புறத்தில் அகிலாண்டேஸ்வரி சன்னதி உள்ளது. ஒரு தூணில் மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர் அருட்காட்சிதருகிறார்.
1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான சிவபெருமான் கோவில் ஆகும். இது நடைமுறையில் ’கோட்டை ஈஸ்வரன் கோயில்’ என வழங்கப்படுகிறது. இவ்வாலயம் சங்குபுஷ்பம் இருந்த காட்டை அழித்து கட்டப்பட்டதால் சங்கீஸ்வரன் என்றும் சோழன் பிரதிஷ்டை செய்ததால் சோழீஸ்வரமுடையார் என்றும் விஜயநகரப் பேரரசினர் வழிபட்டதால் சங்கமீஸ்வரன் என்றும் பெயர் வந்தது. விஜயநகர காலத்தில் பெருமளவில் விரிவாக்கப்பட்டது. சரித்திரப்படி முன்பு கருவறை விமானம் பொன் வேயப்பட்டும் தங்கக் கலசங்கள் கொண்டும் விளங்கியது. விஜயநகர மன்னர்கள் 300 சிவாச்சாரியார்களை அன்றாட வழிபாடுகளுக்காக நியமித்திருந்தனர். 1792 மூன்றாம் மைசூர் போருக்குப் பின்னர் கோவைப் பகுதியில் இருந்த கோட்டையும் சங்கமேஸ்வரர் கோயிலும் சிதைக்கப்பட்டன. நான்காம் மைசூர் போருக்குப் பின்னர் 1809 ஆம் ஆண்டு ஓரளவு சீரமைக்கப்பட்டது.
தல வரலாறு : சிவபக்தனான கரிகால் சோழ மன்னன் தனக்கு பின் நாட்டை ஆள புத்திரன் இன்றி தவித்தான். தனக்கு ஏற்பட்ட புத்திரபீடை நீங்க வேண்டி சிவனிடம் மனம் உருகி வழிபாடு செய்து முறையிட்டான். அவ்வாறு அவன் வழிபட்டு வர, ஓர்நாள் இரவில் தன் கனவில் சிவன் அற்புதங்கள் புரிந்த சில தலங்களில் ஆலயங்கள் எழுப்புவது போல கனவு கண்டான். இது குறித்தும், புத்திரபீடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் குறித்தும் அவன் தனது குருவிடமும், ஆன்றோர்களிடமும் ஆலோசனை கேட்டான். அவர்களது ஆலோசனையின் படி, அவர் அற்புதங்கள் புரிந்த இடங்களில் எல்லாம் கோயில்களை எழுப்பி வணங்கினான். அவன் கட்டிய 36 சிவத்தலங்களில் இத்தலம் 31வது தலமாக விளங்குகிறது.
சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்த அசுரன் ஒருவன், யாராலும் தனக்கு அழிவு நேராதபடி சாகா வரம் பெற்றான். தேவலோகத்தினை ஆள ஆசை கொண்டு ரிஷிகள், தேவர்களுக்கு துன்பம் தந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனது அட்டூழியத்தினால் மனம் வெதும்பிய தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் அவர்களிடம், சிவனை வேண்டுவதைத் தவிர அசுரனை அழிக்க வேறு வழியில்லை என்றார். அதன்படி, தேவர்களும், ரிஷிகளும் ஆதியில் சங்குபுஷ்பங்கள் நிறைந்த தோட்டமாக இருந்த இவ்விடத்திற்கு வந்து சிவனை பூஜித்து வணங்கி அசுரனை அழிக்கும் படி முறையிட்டனர். அதன்பின் அசுரனை சிவன் வதம் செய்தார்.
சித்திரையில் 13 நாள் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி, மகாசிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், கந்தசஷ்டி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஆருத்ரா தரிசனம், விஜய தசமி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக இங்கு பிரார்த்தித்தால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு. இத்தலத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரியை வணங்கிட திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், சகல நோய்களும் நீங்கும், குடும்பபிரச்சனைகள் தீரும், தொழில்விருத்தி அடையும், அகால மரண தோஷம் நீங்கும். சிவராத்திரி அன்று 108 முறை வலம் வருதல், கண் விழித்து விரதம் இருத்தல். சிவ நாமங்களை உச்சரித்தல், திருவைந்தெழுத்து ஓதியும் செய்தல். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். அடிபிரதச்சணம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர், காந்திபுரம், சிங்காநல்லூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை