சூலூர், வைத்தீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற ஊரில் உள்ளது.
இறைவன் : ஸ்ரீ வைத்தீஸ்வரர்
இறைவி : ஸ்ரீ தையல் நாயகி
தல சிறப்புகள் : இந்தத் கோவில் செவ்வாய்க்கு அதிபதி ஆன வைத்தீஸ்வரர் நாகை மாவட்டத்தில் உள்ள அந்தக் கோவிலுக்கு சமமாக கருதப்படுகிறது . ராகு கேது தோஷ நிவர்த்திக்கு மிகவும் உரிய பரிகார தலம். கோவில் குளம், நதிக்கரை ஓரத்தில் அமைந்திருந்தால் அதற்கு சக்தியும் ஆற்றலும் அந்த தலத்திற்கு அதிகம் என்பதாலும் இந்த தலத்திற்கு ஒரு பெரிய சிறப்பம்சமாக உள்ளது.
கோயில் அமைப்பு : ஸ்ரீ தையல் நாயகி உடனமர் ஸ்ரீ வைத்தீஸ்வரர் சுயம்பு திருமேனி கொண்டு அருள் பாலிக்கும் தீராத நோய் தீர்த்தருள வல்லவர் ஆவார். சூரலூர் அரிய பிராட்டி நல்லூர் என்று 9-ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட இன்றைய சூலூரின் கண் சோழ அரசன் கரிகாலன் காட்டினை திருத்தி,சமன் செய்து ஊராக்கும் போது சுயம்பு மூர்த்தியாக கண்டு "வைத்தியலிங்கமுடையார்" என்ற திருநாமம் சாற்றி, கற்றளி கோவிலாககட்டி கும்பாபிஷகமும் செய்வித்து பல்வேறு நிவேதனங்களை கோவிலுக்கு அளித்த்தாகவும், கொங்கு நாட்டில் அவன் கட்டிய 36 பெரிய சிவாலயங்களில் ஓன்று. இத் திருக்கோவிலில் சிவ பூசை முறையாக நடைபெற வரிக்கொடை அளித்த செய்தியினை இன்றைய செலக்கரச்சல் மாரியம்மன் கோவில் முன்புள்ள தனிக் கல்வெட்டு மூலமாக அறியலாம். எனவே, இத்திருக்கோவிலின் மூலவர் ஸ்ரீ வைத்தீஸ்வர பெருமான் மிகவும்,பழமை வாய்ந்த மூர்த்தியாவார். கற்றளிக் கோவிலாக இருந்தது.
இந்தக் கோவிலில் வினாயகப் பெருமான் வன்னி மர விநாயகர், அரசமரத்தடி விநாயகர், மகா கணபதி, என மூன்று இடங்களில் உட்பிரகாரத்தில் ராகு கேதுவுடன் சேர்ந்து அருள்பாலிப்பது மிகவும் சிறப்பான அம்சம் என்று கருதப்படுகிறது. பரிகார தெய்வங்களாக சனீஸ்வரர், சந்திரன், சந்தான பைரவர், சரஸ்வதி, துர்க்கை மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், சூரியன் ஆகியோர் உள்ளனர். இந்தத் திருக்கோவில் நொய்யல் ஆற்றில் தெற்காகவும் சூலூர் குளக்கரையின் இருபுறமும் தண்ணீரால் நிரம்பப் பெற்று அழகான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. கோவில் கிழக்கு பார்த்து இருந்தாலும் இங்கு வரும் பக்தர்களின் வசதி செய்வதற்காக கூடுதலாக தெற்குப் பக்கம் உள்ள நுழைவாயிலை அமைத்துள்ளனர். முக்கிய பிரதான சன்னதியில் வள்ளி தெய்வானை சமேத முருகன் மற்றும் வைத்தியநாதசுவாமி தையல் நாயகி ஆகியோர் அடுத்தடுத்து உள்ள சன்னதிகளில் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
தல வரலாறு : வைத்தியநாத சுவாமியின் பரம சிஷ்யனான கணபதி அம்மாள் என்பவர் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு கூறினார். ஒருநாள் அவருடைய கனவில் தோன்றிய சிவபெருமான், உங்கள் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இரண்டு கொம்புகள் கொம்புகளுடன் கூடிய தேங்காய் ஒன்று உள்ளது. அதை எடுத்து வந்து எனக்கு பூஜை செய்து கொண்டு வந்து கொடு, என்று கூறினார். அப்பொழுது அந்த அம்மாள் உடைய கனவு கலைந்தது. உடனே அவருடைய வேலையாட்களை கூப்பிட்டு தென்னை மரத்திலே, இது போன்ற ஒரு இரண்டு கொம்புகளுடன் கூடிய தேங்காய் இருக்கிறது, அதை தேடி எடுத்து வாருங்கள். அது ஒரு குறிப்பிட்ட மரத்தில் இருக்கும் என்பதும் கூறினார். உடனே அவர் கூறியபடி அங்கே சென்று பார்த்த பொழுது அந்த மரத்தில், அதேபோன்று தேங்காய் இருந்தது. பொதுவாக தென்னை மரத்தில் தேங்காய் முற்றிவிட்டால், கீழே விழுந்து விடும். ஆனால் இந்த காய் அப்படியே மரத்திலேயே இருந்தது. அதை பறித்து வந்து, வேலையாட்கள் இவரிடம் கொடுக்க அதைப் பார்த்து மகிழ்ந்து அப்படியே கொண்டுபோய் பூஜையில் வைத்து பூஜை செய்தார் இது ஒரு அற்புத நிகழ்ச்சியாக கூறப்படுகிறது.
திருமண தடை நிவர்த்திக்கு ஆணும் அல்லது பெண்ணும் தங்கள் கையாலேயே நல்லெண்ணெய் காப்பீட்டு நந்திகேஸ்வரருக்கு செய்கின்றனர். பின்னர் மாலை சாற்றி பூஜை செய்கின்றனர். அதன் பிறகு அந்த மாலையை அணிந்து கொண்டு வைத்தியநாதசுவாமி பூஜையில் கலந்து கொண்டால் திருமணத் தடை விலகி விரைவில் அவர்களுக்கு திருமணம் நடந்தேறும். அதனால் இங்குள்ள நந்திகேஸ்வரருக்கு கல்யாண குண நந்திகேஸ்வரர் என்று கூறுகின்றனர்.
சுமார் 1000 வருடங்களுக்கு முன்பாக இது கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது இங்கு நாணல் வகை செடியை சேர்ந்த ஒரு தாவரம் அதிக அளவில் இருந்தது. அதன் பெயர் சூழல் என்பது ஆகும் அதுவே இந்த இடத்தின் பெயராக சூழல் என்பது சூலூர் ஆக மாறிவிட்டது இந்தக் கோவிலில் அனேக தெய்வங்கள் இருந்தாலும் அவரவர்களுக்குரிய மாத வருட வைபவங்களை நடத்தினாலும் இந்த திருக்கோவிலில் மிக முக்கியமான பெரிய விழாவாக ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம் மற்றும் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் ஏகாதச ருத்ராபிஷேகம் என்பது சிறப்பான அம்சமாகும். தினமும் நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : இருகூர், போத்தனூர், கோயம்புத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை