விளாங்குறிச்சி
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிவானந்தா மில் விளாங்குறிச்சி சாலையில் கோயில் உள்ளது. காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஞான மடாலயம் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
இறைவன் : ஆனந்த நடராஜர்
இறைவி : பார்வதி தேவி
தல விருட்சம் : அரச மரம்
தல சிறப்புகள் : 132 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்ட வேம்பு, அரசு விநாயகர், முருகன், 108 மூலிகைகளால் உருவான சிவலிங்கம், ராகு, கேது, கன்னிமார் சன்னிதிகள் இங்குள்ளன. இவர்களை வழிபட்டால் கிரகதோஷம் நீங்கும். புத்திரப்பேறு உண்டாகும்.
தல வரலாறு : கச்சி திருமலை சுவாமி என்ற துறவி தன் கலசத்தில் இருந்த சர்க்கரையை மக்களுக்கு பிரசாதமாக வழங்கி நோய், கவலை தீர்த்து வந்தார். ஒரு சமயம் கோவை அருகிலுள்ள விளாங்குறிச்சியைச் சேர்ந்த சிறுமி சின்னம்மையிடம், உரிய காலத்தில் உன் வயிற்றில் ஒரு ஞானி அவதரிப்பார், என ஆசியளித்தார். பிற்காலத்தில் சுப்பராயன் என்பவரை சின்னம்மை திருமணம் செய்தாள். 1827ல் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. வெங்கடரமணன் எனப் பெயரிட்டனர். சிவபக்தியில் ஈடுபட்ட அந்த சிறுவன், 13 வயதில், இப்பகுதிக்கு வந்த ஞானியிடம் மந்திர உபதேசம் கேட்டார். அதன்பின் தவ வலிமையால் சித்து கைவரப் பெற்றார். நாடி வருவோரின் துன்பம் போக்கி அருள்புரிந்தார். வள்ளலாரைத் தன் மானசீக குருவாக ஏற்ற வெங்கடரமணர், வடலூர் சத்திய சன்மார்க்க சங்கம் போல, விளாங்குறிச்சியில் ஞான சபை நிறுவினார். எண்கோண வடிவில் தாமரை மலர் போன்ற அற்புதத் திருக்கோயிலையும், அதன் முன் 24 தூண்களைக் கொண்ட சபாமண்டபமும் கட்டினார். 30 அடி உயரமும் 25 டன் எடையுமுள்ள, ஒரே கல்லால் செய்யப்பட்ட கொடிமரத்துடன் முன் மண்டபம் எழுப்பினார். 1901 ஆவணியில் முதல் கும்பாபிஷேகம் நடந்தது. மூலாதாரம் உள்ளிட்ட ஏழு நிலைகளுக்கும் ஏழு திரையிட்டு அருட்பெரும் ஜோதியை நிறுவினார். கனகசபையை நிறுவி, அதில் வலது காலை தூக்கி ஆடும் ஆனந்த நடராஜரையும், பார்வதிதேவியையும் பிரதிஷ்டை செய்தார்.
ஒரு சமயம் மழை இல்லாமல் இப்பகுதி வறண்டது. குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். ஊர் மக்கள் வெங்கடரமண சுவாமியிடம் முறையிட்டனர். சுவாமியும் இறைவனைப் பிரார்த்திக்க பெருமழை பொழிந்தது. மற்றொரு சமயம் அருகிலுள்ள ஊரில் சிறுவன் ஒருவன், வறுமையால் வள்ளலாரின் பாடல்களைப் பாடி பிச்சை எடுத்து வந்தான். அதைக் கண்டு அதிர்ந்த பக்தர்கள் சிலர், சிறுவனை சுவாமியிடம் அழைத்து வந்தனர். சுவாமி அவனுக்கு ஆசியளித்து, 'உன் குறை யாவும் பதினைந்து நாளில் தீரும்'' என விபூதி கொடுத்து அனுப்பினார். ஓரிரு நாள் கழிந்ததும் ஒரு நாள் காலையில் சிறுவன் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தான். அப்போது அந்த ஊரின் ஜமீன்தார் உடல்நலம் இல்லாத தன் மகளை அழைத்துச் செல்லக் கண்டான். சுவாமி வழங்கிய திருநீறை ஜமீன்தாரிடம் கொடுத்து பூசச் சொன்னான். சிறிது நேரத்தில் அப்பெண் உடலில் புத்துணர்வு பரவுவதை உணர்ந்தாள். தொடர்ந்து சுவாமியின் திருநீறு பூசிய அவள், பூரண குணம் பெற்றாள். ஜமீன்தார் நன்றியை தெரிவிக்கும் விதத்தில் சிறுவனைத் தன் மாளிகைக்கு அழைத்து பொன்னும், பொருளும் கொடுத்தார். அதன்பின் சிறுவன் மூலம் சுவாமி பற்றி அறிந்த ஜமீன்தார், மகளுடன் நடராஜர் கோயிலுக்கு வந்து ஆசி பெற்றார். இங்குள்ள ஞான சபையில் தினமும் கூட்டு வழிபாடாக வள்ளலாரின் திருவருட்பா பாடப்படுகிறது. 1911ல் 84ம் வயதில், வெங்கடரமண சுவாமி தான் அவதரித்த சித்திரை நட்சத்திரத்தன்று ஜீவசமாதி அடைந்தார்.
நடராஜர், பார்வதியை பவுர்ணமி அன்று வழிபட்டால் நீண்டநாள் நோய் விலகுவதோடு செல்வ வளமும் பெருகும். பவுர்ணமியன்று இரவு 7.00 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது. வடலூர் போலவே இங்கும் ஏழு திரைகள் விலக, பக்தர்கள் ஜோதியைத் தரிசிக்கின்றனர். மாசி மாத சித்திரை நட்சத்திரத்தில் குருபூஜை நடக்கும்.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை