பூராண்டாம்பாளையம் , பரமசிவன்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூராண்டாம்பாளையம என்னும் ஊரில் அமைந்துள்ளது.
மூலவர் : ஐந்து வேல்கள்
இறைவன் : பரமசிவன்
தல விருட்சம் : வில்ல மரம், வன்னி மரம்
தல தீர்த்தம் : வெள்ளியங்கிரி தீர்த்தம்
தல சிறப்புகள் : சிவனின் ஐந்து முகங்களாக ஐந்து வேல்கள் மூலவராக அமைந்த திருக்கோயில். வேல்களை நிறுவிய சித்தர் முத்துக்குமாரசாமியின் அதிஸ்டானம் அமைந்த திருக்கோயில். ராகு கேது பரிகாரத் தலமாகவும் , விஷகடி மற்றும் பல்வேறு விதமான நோய்கள் நீங்கவும், தொழில் வளம் பெறவும் அருளும் தலம்.
தல வரலாறு : சிவ வழிபாட்டில் அரூபவழிபாடு, உருவ வழிபாடு, அருஉருவவழிபாடு என மூவகை இருந்தாலும், சிவன்கோயில் என்றாலே நம் மனக்கண் முன் தோன்றுவது சிவலிங்கமேயாகும். ஆனால், சித்தர் ஒருவரால் பஞ்சாக்கரத்தின் சூட்சும ரூபமாக ஐந்து வேல்கள் நடப்பட்டு, அவற்றை ஒற்றைத் திருநாமமாக பரமசிவன் என்னும் திருப்பெயரினைச் சூட்டி வழிபடப்பட்ட எம்பெருமானை, இன்றும் சிவரூபமாகவே பக்தர்கள் போற்றி வணங்கிடும் தலம் ஒன்று கொங்கு நாட்டில் இருக்கிறது.
கோயில் அமைப்பு : சுமார் 400 வருடங்கள் பழமையான இத்திருக்கோவில் மிகவும் அருமையான மனதுக்கு இதமான சூழலில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய கோயில். அலங்கார மண்டபத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் பெரிய குதிரை சுதை வடிவில் இருக்கிறது. அருகே பெரிய சூலாயுதம் ஒன்று நடப்பட்டுள்ளது. அதனையடுத்து அழகிய மண்டபத்துடன் தீபஸ்தம்பம் உள்ளது. மகாமண்டபத்தினுள் பலிபீடத்தை அடுத்து நந்திகேஸ்வரர் காட்சி தருகிறார். அர்த்த மண்டபத்தைக் கடந்தால் கருவறையை நோக்கி பஞ்ச வேல்களின் உருவில் பரமசிவன் அருள்பாலிக்கிறார். இவரிடம் வேண்டினால் நோய் தீரும். குடும்பத்தில் உள்ள பஞ்சம் விலகும் என்பது நம்பிக்கை. கோயிலின் உள்சுற்றில் சித்தர் முத்துக்குமாரசாமி தவநிலையில் இருப்பது போன்றும், பசு ஒன்று புற்றுக்குள் பால் சுரப்பது போன்றும் சுதைச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட யானை, குதிரை சுதை வடிவங்கள் இக்கோயிலின் பழைமையைப் பறைசாற்றுகின்றன. மகாகணபதி, சுப்பிரமணியரும் இங்கே குடிகொண்டுள்ளனர். மகாமண்டபத்தின் வடக்கே தனிச் சன்னிதியில் தெற்கு பார்த்தவாறு சிவகாமியம்மை உடனமர் ஆனந்த நடராஜர் தரிசனம் தருகிறார்.
உடல் தடிப்பு, விஷக்கடி, காணாக்கடி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கோயிலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கிறார்கள். இக்கோயிலில் வழங்கப்படும் திருநீறு மிகவும் விசேஷம். பல்வேறு வேண்டுதல்காரர்கள் பொங்கல் வைத்தும், வெள்ளாடை அணிந்து இங்குள்ள தீர்த்தக் கிணறில் நீராடி சமாதியைச் சுற்றி அடிப்பிரதட்சணம் செய்தும் வழிபடுகிறார்கள். திருவண்ணாமலையில் உள்ள நாடி ஜோதிட ஓலைச்சுவடி ஒன்றில் இத்தலம் வந்து பரமசிவனையும், சித்தரையும் வழிபட்டால் சகல காரியமும் சித்தியாகும் என்ற குறிப்புகள் காணப்படுவதாகச் சொல்கிறார்கள்.
இத்தலத்தில் திங்கள் வெள்ளிக்கிழமைகளிலும், பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் கிருத்திகை போன்ற முக்கிய விரத தினங்களும் வெகுசிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றன. பெரு விழாக்களாக கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இதில் வருடாந்திர வழிபாடாக தெலுங்கு வருடப் பிறப்பு அன்று வெள்ளியங்கிரியிலிருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது.
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை