ஒத்தக்கால்மண்டபம், புற்றிடங்கொண்டீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது. காந்திபுரத்தில் இருந்து ஒத்தக்கால்மண்டபம் செல்ல ஏராளமான டவுன் பஸ்கள் உண்டு.
இறைவன் : புற்றிடங்கொண்டீஸ்வரர்
இறைவி : பூங்கோதை நாயகி
தல சிறப்புகள் : பொதுவாக மற்ற திருத்தலங்களில் சாமிக்கு அர்ச்சனை செய்யும் போது சமஸ்கிருத மொழியில் மந்திரங்களை அர்ச்சர்கள் கூறுவார்கள். ஆனால் இந்த திருத்தலத்தில் தமிழ்முறைப்படி தான் பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழிலேயே தான் திருவாசகம், சிவபுராணம், தேவார பாடல்கள் பாடப்பட்டு புற்றிடங்கொண்டீசுவரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அர்ச்சனை செய்ய வரும் போது, தமிழிலேயே செய்யப்படுகிறது. மற்ற சன்னிதிகளிலும் தமிழ் முறைப்படி தான் பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு : சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த சோழர்களில் ஒருவன், இந்தப் பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான். திருவாரூரில் எழுந்தருளிய புற்றிடங்கொண்டீசுவரரின் திருநாமத்தையே இங்குள்ள இறைவனுக்கும் அவன் சூட்டி வழிபட்டதாக தெரிகிறது. அம்பிகையும் அன்றைய காலத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலவெள்ளத்தில் கோவில் சிதலமடைந்து விட்டது. அதை தொடர்ந்து இங்குள்ள சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து நிறைநிலை வழிபாட்டு மன்றம் ஒன்றை ஏற்படுத்தி கோவில் திருப்பணியில் ஈடுபட்டனர். ஐந்து மாடங்கள் கொண்ட கோபுரம், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரம், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைத்து 1995 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கோயில் அமைப்பு : கோவில் உள்ளே நுழைந்தவுடனேயே புற்றிடங்கொண்டிடீஸ்வரரை தரிசனம் செய்யலாம். ஆனாலும் நாம் அதற்கு முன்பாக உள்ள கொடி மரம், பலிபீடம் போன்றவற்றை தரிசிக்க வேண்டும். பின்னர் தெற்குப்புறமாக பிரகாரத்தை வலம் வர அங்கே கன்னி மூலையில் விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். வடமேற்கு மூலையில் 6 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்துடன் சுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார். சுப்பிரமணியருக்கு அருகிலேயே பைரவர் வீற்றிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு செய்த திருப்பணியின் காரணமாக, கருவறை சற்று உயரமாக அமைந்துள்ளது. லிங்கத் திருமேனியராக புற்றிடங்கொண்டீஸ்வரர் மீது ஆதிசேஷன், குடை போன்று எழுந்தருளியுள்ளார். மூலவருக்கு வலதுபுறம் 63 நாயன்மார்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். மூலவர் சன்னிதிக்கு தென்புறத்தில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் அண்ணாமலையாரும், வடக்கே பிரம்மாவும், துர்க்கை தேவியும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். மூலவரை வணங்கியவாறே தனிச் சன்னிதியில் எழுந்தருளியிருக்கிறார் சண்டிகேசுவரர்.
சுவாமிக்கு இடதுபுறம் அகிலத்தை ரட்சிக்கும் அன்னை பராசக்தி, ‘பூங்கோதை நாயகி’ என்ற திருநாமத்துடன் இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார். நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கிய வண்ணம் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். அவளது இரு திருக்கரங்களில் தாமரை ஏந்தியபடியும், மற்ற இரு கரங்களில் அபய ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறார். அம்மன் சன்னிதிக்கு தெற்கே இச்சா சக்தியும், மேற்கே கிரியா சக்தியும், வடக்கே ஞானசக்தியும் எழுந்தருளி உள்ளனர். நடராஜர் சிவகாமி அம்மாள் சன்னிதி, ஆடல்வல்லானாகிய நடராஜர், இங்கு ஆனந்த தாண்டேசுவரராக இருந்து அருள்பாலிக்கிறார்.
இந்தக் கோவிலில் சித்திரை மாதம் திருத்தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. சித்ரா பவுர்ணமி அன்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. தெப்பத் தேர்த் திருவிழாவும் நடக்கிறது. தெப்ப உற்சவம் நடைபெறுவதற்காக, கோவிலுக்கு எதிரே சாலையைக் கடந்து புதிதாக தெப்பக்குளம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, மார்கழி திருவாதிரை, ஆனி திருமஞ்சனம், கிருத்திகை, பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். திருத்தலத்தில் உள்ள யாகசாலை மண்டபத்தில், தினமும் மாலை 3.00 மணிக்கு, 2 கலசங்களில் சுவாமியையும், அம்மனையும் எழுந்தருள செய்து சிறப்பு வேள்வி பூஜை நடக்கிறது. அதைத் தொடர்ந்து அந்த கலசங்களில் உள்ள புனித நீரை கொண்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது.
பின்னர் உற்சவ மூர்த்திகள் இருவரும் கோவிலின் மகா மண்டபத்தில் தென்மேற்கு புறத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர். அதைத் தொடர்ந்து 1008 மலர்களை கொண்டு உற்சவ மூர்த்திக்கு தமிழ்மொழியில் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். மேலும் இந்த திருத்தலத்தில் 60 வயது, 70 வயது, 80 வயது பூர்த்தியானவர்களுக்கு சிறப்பு பூஜை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர், காந்திபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை