அம்மையநாதர் திருக்கோவில், சேரன் மஹாதேவி (சந்திரன்)
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி - செங்கோட்டை செல்லும் வழியில் நெல்லைக்கும், அம்பாசமுத்திரத்திற்கும் நடுவிலுள்ளது. சேரன்மகாதேவி ரயில்நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில், திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தாமிரபரணியாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. பாபநாசம் தரிசித்த பின்னர் , அம்பாசமுத்திரம் வந்து சேரன் மஹாதேவி 18 கி.மீ தூரத்தில் உள்ளது. பேருந்து நிலையம் அருகிலேயே திருக்கோவில் உள்ளது.
மூலவர் : ஸ்ரீஅம்மைநாதர், அம்மயநாத சுவாமி
அம்பாள் : ஸ்ரீஆவுடைநாயகி
நட்சத்திரம்: ரோகினி, ஹஸ்தம், திருவோணம்
தீர்த்தம் : தாமிரபரணி
தல விருட்சம் : ஆலமரம்
சிறப்புகள் : உரோமச முனிவர் தாமிரபரணி தென்கரையை அடைந்து அங்கு ஆலமரத்தடியில் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்த போது சிவபெருமான் முனிவருக்குக் காட்சி கொடுத்ததாக கூறப்படுகிறது. கோவில் மணிமண்டபத் தூணில் லிங்க பூஜை செய்யும் உரோமச முனிவர் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் இருவர் நெல் குத்தி அரிசி புடைக்கும் சிற்பம் காட்சி வடக்கு ஒரத்தூணில் உள்ளது.
இக்கோவிலை நந்தனார் தரிசித்ததற்கு அடையாளமாக இவரது சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும் சிவனையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.
தலப்பெருமை : சிவதரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர் அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார். அதில் இரண்டாவது மலர் இத்தலத்தில் கரை ஒதுங்கியது. இங்கு உரோமசர் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். பிற்காலத்தில் அந்த லிங்கம் ஒரு அரசமரத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர் நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே தங்கள் வேலையை துவங்குவர்.
இந்த லிங்கம் கோவிலில் இல்லாமல் மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே என்று ஆதங்கப்பட்டு சிவனுக்கு கோவில் கட்ட நினைத்தனர். ஆனால் அவர்களிடம் போதிய வருமானம் இல்லை. அவர்கள் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேர்க்க ஆரம்பித்தனர். அவர்களது பக்தியை கண்டு மகிழ்ந்த சிவன் ஒருசமயம் அடியார் வடிவில் அப்பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டி மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன் என்று எழுந்தார். சகோதரிகள் பதறிப்போய் அவசரத்தில் விளக்கை தேடினர். விளக்கு தென்படாததால் சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய்விட்டு விளக்கேற்றினர். மகிழ்ந்த சிவனடியார் சாப்பிட்டுவிட்டு சுயரூபத்தில் காட்சி தந்தார். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோவில் எழுப்பினர்.
நவக்கிரகங்களில் இரெண்டாவதான சந்திரனின் ஆட்சி பெற்றதலமாகும். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் இரெண்டு பெரிய வாயில்கள் உள்ளன. கோவிலின் வடபகுதியில் ஸ்வாமியும் , தென்பகுதியில் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். சுவாமி சுயம்பு லிங்கம்.
அதன்பின் ராஜராஜ சோழன் ,ராஜேந்திர சோழன் ஆகியோர் இக்கோவிலை விரிவுபடுத்திக்கட்டியதாகக் கல்வெட்டு சான்றுகள் உள்ளன. சேரமன்னர் ஒருவர் தனது மகள் மகாதேவி என்ற பெயரில் இவ்வூரை ஏற்படுத்தினான் என்பர். எனவே இவ்வூர் சேரன் மகாதேவி என்று அழைக்கப்படுகிறது. இச்சிவனை வைத்து வழிபட்ட உரோமச முனிவரின் திருவுருவம் ஒரு தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. யாசமா முனிவர் என்பவருக்கு முக்தி கொடுக்க இறைவன் பக்தவச்சலராக தோன்றிய இடம். இக்கோவில் அருகில் உள்ளது. அது பக்த்தவச்சலர் கோவில் என அழைக்கப்படுகிறது. மேலும் இக்கோவிலுக்கு அருகில் ருணவிமோச்ச பாறை என்ற தீர்த்தம் உள்ளது. இதில் 41 நாட்கள் தொடர்ந்து ஸ்நானம் செய்தால், தீராத ரணமும் தீரும் என்பர். இத்தலத்து இறைவனை வழிபட்டுவந்தால் , உடல் ஆரோக்கியமும் , அழகும் கிட்டும் என்பர். பயிர் விளைச்சல் அமோகமாகும் என்றும் கூறுவர். இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தால் , நவக்கிரக தளங்களில் திங்கள் தலமான திங்களூர் சிவபெருமானை வழிபட்ட பலன் உண்டு என்பர்.
அரிசி வியாபாரம் செழிக்க, இங்கு வந்து அரிசி தானம், அன்னதானம் செய்கின்றனர். திருமண தோஷம் உள்ளவர்கள், மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்து, அம்பாள் சன்னதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். இக்கோவிலில் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவாதிரைத் திருநாளும், சிவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.
அம்மைநாதர் திருவாயில், ஆவுடையம்மன் திருவாயில் என்று இரண்டு பெரிய வாயில்கள் உள்ளன. வடக்குப் பகுதி அம்மைநாதர் சந்நிதி. தெற்குப்பகுதி ஆவுடையம்மன் திருத்தளி. கோயில் நந்தி, கொடிமரங்கள் உள்ளன. தென்பகுதியில் நடராஜர், சிவகாமி, காரைக்கால் அம்மையார் உள்ளனர்.
கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் சேரன்மகாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகள். கல்வெட்டுகளில் கைலாயத்து ஆழ்வார் என்றும் கைலாயமுடையார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. யாச முனிவருக்கு அருள்பாலித்த யாச தீர்த்தம் இந்த கோயிலுக்கு அருகில் உள்ளது. கோயிலுக்கும் யாச தீர்த்தத்துக்கும் நடுவில் ஒரு பாறை உள்ளது. அதற்கு ரணவிமோசனப் பாறை என்று பெயர். இந்த தீர்த்தத்தில் நாற்பத்தோரு நாட்கள் தொடர்ந்து நீராடினால் எல்லாவித நோயும் தீரும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவாதிரைத் திருநாளும், சிவராத்திரி விழாவும் நடைபெறுகிறது.
அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை
அருகில் உள்ள ரயில் நிலையம் : சேரன்மகாதேவி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு