மயிலாப்பூர், ஆதிகேசவ பெருமாள்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை கபாலீஸ்வர் கோயிலின் அருகிலேயே உள்ளது. சென்னையில், மயிலாப்பூரில் அமைந்துள்ள ஆதிகேசவபெருமாள் பேயாழ்வார் கோவில் மிகவும் பழமை வாய்ந்த தொண்டை நாட்டுத் திருத்தலமாகும்.
சுவாமி : ஆதிகேசவ பெருமாள்
தாயார் : மயூரவல்லி
தல தீர்த்தம் : சந்திர புஷ்கரணி
தல விருட்சம் : அரசு
தலச் சிறப்புகள் : ஆழ்வார்களில் மூன்றாம் ஆனவர் பேயாழ்வார் அவதார திருத்தலம் இது. இக்கோயிலின் அருகில் உள்ள கைவிரணி கிணற்றில் இவர் அவதரித்தார். மணி பிராத்தனை இக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடாகும். சந்திரன் தனுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விடுபட இக்கோயிலில் உள்ள ‘சர்வ தீர்த்தத்தில்‘ நீராடி சாப விமோசனம் பெற்றான் ஆதலால் இவ் தீர்த்தத்துக்கு ‘சந்திர புஷ்கரணி ‘என்ற பெயரும் உண்டு. இப்போது ‘சித்திர குளம்’ என்று அழைக்கப்படுகிறது.ஆதி கேசவ பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் அவர் அருகில் ஸ்ரீதேவி , பூதேவி இல்லை. வீர ஆஞ்சேநேயர் சன்னதி மற்றும் பேயாழ்வார் சன்னதியும் உள்ளது .
தல வரலாறு : திரேதாயுகத்தில் இக்கோயிலில் உள்ள கைவிரணி குளத்தின் கரையில் ரிஷிகள் யாகம் நடத்தினர் அப்போது மது என்ற அரக்கன் அவர்களை யாகம் நடத்த முடியாமல் தடுத்தான், ஆதலால் ரிஷிகள் மகாவிஷ்ணுவிடம் அரக்கனிடம் இருந்து தங்களை காக்குமாறு வேண்டினர் விஷ்ணுவும் அவர்களுக்கு அருள்தந்து யாகத்தை தொடர்ந்து நடத்தும்படியும் தான் காப்பதாகவும் வாக்களித்தார். மகரிஷிகள் யாகத்தை தொடர்ந்தனர், அப்போது அரக்கன் அவ்விடத்தில் வந்து அவர்களுக்கு தொந்தரவு செய்ய ஆரம்பித்தான், அப்போது யாகத்திலிருந்து விஷ்ணு தோன்றி அவனை அழித்து அவர்களை காத்தான். பின்பு ரிஷிகளின் வேண்டுதலுக்கு இணங்கி இத்தலத்திலேயே அவர் ஆதிகேசவ பெருமாளாக அருளுகிறார் .
இறைவனை மணம் முடிக்க தாயார் புஷ்கரணியில் உள்ள தாமரை மலர் மேல் குழந்தையாக அவதரித்தாள். பிருகு மஹரிஷியின் மகளாக பிறந்ததால் ‘பார்கவி’ என்ற பெயர் இவருக்கு உண்டு . இவர் இக்கோயிலில் ஸ்வாமியின் வலது புறத்தில் தனி சன்னதியில் வீற்றியிருக்கிறார். இவருக்கு வெள்ளிக்கிழமை தோறும் காலை விசேஷ ஹோமம் மற்றும் மாலை 6 .30 மணி அளவில் ‘ஸ்ரீ சூக்த வேத மந்திரம் ‘ சொல்லி வில்வ இலையால் அர்ச்சனை செய்கிறார்கள் , அப்போது இரண்டு மணிகளை தாயாரின் கால்களில் வைத்து திருமண தடை ,கல்வி ,உடல் நலம் ஆகியவற்றிற்காக வேண்டி அவைகளை இக்கோயிலின் கதவில் கட்டிவிடுகிறார்கள்,அவைகள் எப்போதும் ஒலித்து பக்த்தர்களுக்காக தாயாரிடம் பிராத்தனை செய்வதாக ஐதீகம். அவர்கள் குறைகள் தீர்ந்தவுடன் மேலும் இரண்டு மணிகளை கட்டிவிடுகிறார்கள். இவ் பிராத்தனையில் கலந்துகொள்வது மிகவும் சிறப்பு ஆகும் .
கோவில் அமைப்பு : இந்த ஆலயம் ஏழு கலசங்களுடன் ஐந்துநிலை ராஜகோபுரமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆழ்வார்கள், தசாவதார காட்சி மற்றும் சில சிற்பங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டு இந்த கோவிலின் பழமையை பறைசாற்றுகின்றன. பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் சன்னிதிகள் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. ராமர் சன்னிதி தெற்குநோக்கியும், அனுமன் சன்னிதி மேற்குநோக்கியும் உள்ளது. பேயாழ்வார் மற்றும் மணவாள மாமுனிகள் சன்னிதிகள் தெற்குநோக்கி காணப்படுகின்றன. திருமழிசைபிரான் சன்னிதி, பேயாழ்வார் சன்னிதிக்கு நேர் எதிராக அமைந்துள்ளது. திருஆதிகேசவபெருமாள் நின்ற திருக்கோலத்தில் தனியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். முத்தங்கி சேவையில் பெருமாள் வீற்றிருப்பதைக் காண கண் கோடி வேண்டும்.
பேயாழ்வாருக்கு உபதேசம் செய்வதற்காக, தாயாரை மயூரபுரியில் அவதரிக்க பெருமாள் உத்தரவிட்டார். அதன்படி தாயார் ஆம்பல் மலரில் இருந்து ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் வெளிப்பட்டார். பின் பேயாழ்வாருக்கு இறை உபதேசம் அருளினார். இத்தல தாயார், இரு கைகளில் அபய முத்திரை, வரத முத்திரைகளை தாங்கியும், மேலும் இரு கைகளில் தாமரைப் பூவை கொண்டும், பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார்.
இந்த தாயாரை வணங்கினால் நிறைந்த செல்வம் தேடி வரும். பாவச் சுமை போகும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறியதும், தாயாருக்கு இரண்டு மணிகளை வாங்கி காணிக்கையாக சமர்ப்பிக்கின்றனர். தாயாரிடம் உபதேசம் பெற்ற பேயாழ்வார், தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். ராமபிரான் சீதை, லட்சுமணருடன் தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். ராவண வதம் முடிந்து சீதையை மீட்ட பின் ராமர் அயோத்தி புறப்பட்டார். அப்போது வழியில் இந்தத் தலத்தில் சில காலம் தங்கியதாக கூறப்படுகிறது. இந்த சன்னிதியில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரை விபீஷண ஆழ்வார் வணங்கிக் கொண்டு இருப்பதை காணலாம். இந்த ஆலயத்தில் அனைத்து ஆழ்வார்களின் உற்சவ சிலையும் இருப்பது தனித்துவமாக அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணிக்கு ஓர் நீரோடை ஓடிக் கொண்டிருந்தது. அந்த நீரோடைக்கு 'கைரவணி' என்ற பெயர் இருந்தது. அதில் அல்லி, தாமரைப் பூக்கள் நிறைந்திருந்தன. அந்த ஓடையில் இருந்த ஒரு அல்லிப்பூவில் இருந்து பேயாழ்வார் அவதரித்தார். அந்த நீரோடையின் ஒரு பாகமே, ஒரு கிணறாக அமைந்து மயிலாப்பூர் அருண்டேல் தெருவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த நீரோடையின் மறுபாகம் திருவல்லிக்கேணியில் ஒரு தடாகமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. திருமாலுடைய திவ்யகுணங்களிலே மூழ்கி, தன்னை மறந்து ஆழ்ந்து போகிறவர்களை 'ஆழ்வார்கள்' என்று அழைத்தனர்.
இப்படி அவதரித்த ஆழ்வார்களில், பொய்கையார், பூதத்தார் மற்றும் பேயாழ்வார் போன்றவர்களை 'முதலாழ்வார்கள்' எனப் பெயரிட்டு அழைத்துள்ளனர். பேயாழ்வார், மகாவிஷ்ணுவின் நந்தகம் என்னும் வாள் படையின் அம்சம் ஆவார். இவர் எப்போதும் மக்களில் இருந்து தனித்து, இறைவன் சிந்தனையில் மூழ்கி அழுதல், சிரித்தல், தொழுதல், ஆடுதல், பாடுதல் போன்ற செய்கைகளை செய்து கொண்டே இருந்ததால், இவரைக் கண்டவர்கள் பேயன் என்று அழைத்தனர். இதனால் அவர் பேயாழ்வார் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பேய் என்ற சொல்லுக்கு பெரியவர் என்னும் பொருள் உண்டு. எனவே அவருக்கு இந்தப் பெயர் வந்ததாகவும் காரணம் சொல்லப்படுகிறது. திருஆதிகேசவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், பங்குனி மாதம் 10 நாட்கள் நடைபெறுகிறது. பங்குனிமாத திருவோண நட்சத்திரத்தில் தீர்த்தவாரி நடைபெறும். தாயாருக்கு பிரதி வெள்ளிக்கிழமை வில்வ அர்ச்சனை, ஹோமம் நடைபெறுகிறது.
பங்குனி உத்திர உற்சவம், நவராத்திரி உற்சவம், தை மாத லட்சார்ச்சனை போன்றவை சிறந்த முறையில் செய்யப்படுகிறது. ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பேயாழ்வாருக்கு 10 நாட்கள் உற்சவ விழா நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் சுதர்சன ஹோமம் செய்யப்படுகிறது. ஆண்டாளுக்கு ஆடிப்பூரம், மார்கழி மாத உற்சவம், சொர்க்க வாசல் திறப்பு சிறப்பாக நடைபெறுகிறது. தை அமாவாசையொட்டி தெப்ப உற்சவம் ஐந்து நாட்கள் நடக்கிறது.
காலை 7.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை நடை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : எழும்பூர், மயிலாப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு