கல்பேஷ்வரர் கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில், சமோலி மாவட்டத்தில் சிவாலிக் மலையில் மத்தியமகேஷ்வர் கோயில் அருகே அமைந்த பண்டைய சிவன் கோயிலாகும். கார்க்வால் பகுதியில் உர்காம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. கல்பேஷ்வரர் கோயில் பஞ்ச கேதார தலங்களில் ஒன்றாகும்.
இந்தியாவின் கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்தியமகேஷ்வர் மற்றும் கல்பேஷ்வரர் ஆகிய ஐந்து இடங்கள் பஞ்ச கேதார தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தலங்களில் சிவபெருமானின் உடல் பாகங்கள், கேதார்நாத்தில் இறைவனின் உடல் பகுதி, துங்கநாத்தில் கைகள், ருத்ரநாத்தில் முகம், மத்தியமகேஷ்வரில் தொப்புள் மற்றும் கல்பேஷ்வரில் தலைமுடியும் தோன்றியதாக நம்பிக்கை உள்ளது.
ஐந்து கேதாரங்களும் இமயமலையின் பனி மூடிய சிகரங்களான நந்தா தேவி, சௌகம்பா, கேதர்நாத், நீலகண்ட் ஆகியவற்றில் அடிவாரத்தில் அமைந்துள்ளன. திருக்கேதாரம் மந்தாங்கினி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்ற கேதாரங்கள் அலக்நந்தா மற்றும் மந்தாங்கினி பள்ளத்தாக்கிதிற்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளன.
தல சிறப்புகள் : கல்பேஷ்வர் மந்திர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2134 அடி உயரத்தில், உர்கம் பள்ளத்தாக்கில் அமையப்பெற்றுள்ளது. பஞ்ச் கேதார் யாத்திரையின் போது ஐந்தாவதாக வருகின்ற இக்கோயில் வருடத்தின் எச்சமயத்திலும் சென்று வரக்கூடியது. இந்த சிறிய கற்கோயிலை ஒரு குகைப்பாதை வழியாக அடையலாம். பிரபல முனிவரான அர்கியா இக்கோயிலின் கல்பவிருக்ஷ மரத்தின் கீழமர்ந்து தியானித்ததாகவும், அவர் ஊர்வஷி என்றொரு தேவமங்கையை இங்கு உருவாக்கியதாகவும் நம்பப்படுகிறது. ஆதி குரு ஷங்கராச்சாரியாரின் சீடர்களான தென்னிந்தியாவின் நம்பூதிரி பிராமணர்கள், இக்கோயிலின் பூசாரிகளாக விளங்குகின்றனர். கங்கை மற்றும் பிறை சந்திரன் அலங்கரிக்கும் ஜடாமுடி வெளிப்பட்ட இடம்தான் கல்பேஷ்வர். எனவே ஜடேஸ்வரர் என்று வணங்கப்படுகின்றர். பனிக்காலத்திலும் இங்கு சிவபெருமானை தரிசனம் செய்யலாம்.
இந்த கேதார் தலத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இங்கு வருடம் முழுவதும் சென்று வரலாம். சிவனின் ஜடாமுடியாக பாவிக்கப்படுகிற கோயில் இது. பீமன் கட்டியது. இதனை 12 கி.மீ. மலை ஏறியும் வரலாம். இந்த இடத்திற்கும் பஞ்சபாண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு சமயத்தில் இந்த இடத்தில் பஞ்ச பாண்டவர்கள் சாப்பிட்டு விட்டு, பாத்திரங்களைக் கழுவிவைத்து திரௌபதி ஓய்வு எடுக்க முனைந்தபோது, துர்வாசர் தன் சீடர்களுடன் வந்து, தாம் நீராடச் செல்வதாகவும், வரும்போது தங்களுக்கு உணவு அளிக்குமாறும் கோரிக்கை விடுத்துவிட்டுச் சென்றார். அப்போதைய சூழ்நிலையில் சிறிதும் அன்னம் இல்லாததை அவரிடம் சொன்னால், அவர் கோபத்தில் சபித்து விடுவாரே என பயந்து, திரளெபதி, கிருஷ்ணனை வேண்டிக்கொண்டாள். அப்போது அங்கே வந்த கிருஷ்ணன், திரௌபதியிடம், கழுவிய பாத்திரங்களில் ஒன்றை எடுத்துவரச் சொன்னார். அதில் ஒரு பருக்கை ஒட்டியிருந்ததை எடுத்துத் தான் உண்டான். அதேசமயம் நீராடி முடித்து நதிக்கரையேறிய துர்வாசருக்கும் அவருடைய சீடர்களுக்கும் பசி நீங்கி, வயிறு நிறைந்துவிட்டது.
ஊர்கம் கிராமத்தில் பஞ்ச பத்ரிகளில் ஒன்றாக கருதப்படும் தியான பத்ரி அமைந்துள்ளது. இத்தலம் தவம் செய்ய மிகவும் உகந்த இடம் என்பதால் பல ரிஷி முனிகள் இவ்விடத்தில் தவம் செய்துள்ளனர். குறிப்பாக அர்க்ய முனிவர் இங்கு தவம் செய்து தேவ அப்சரஸ் ஊர்வசியை படைத்தார் என்று நம்பப்டுகின்றது. ஊர்வசியின் பெயரால் இந்த பள்ளத்தாக்கு ஊர்கம் பள்ளதாக்கு என்றழைக்கப்படுகின்றது. மேலும் அத்ரி மற்றும் அநுசுயாவின் புதல்வர் துர்வாச முனிவர் இத்தலத்தில் உள்ள கற்பக விருட்சத்தின் அடியில் அம்ர்ந்து தவம் செய்த்தார் என்பது ஐதீகம் . இங்குதான் அவர் பாண்டவர்களின் அன்னை குந்தி தேவிக்கு வரம் அளித்ததாகவும் ஐதீகம். இந்த கற்பக விருஷத்தினால் இத்தலம் கல்பநாத் என்றும் அழைக்கப்படுகின்றது. ருத்ரநாத்தைப் போல ஆதி சங்கரரின் சீடர்களான தஸ்நாமிகளும் கோசைன்களும் இத்தலத்தில் பூசை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். 2 கி.மீ மேலேறி சென்றால் விருத்த கேதார் ஆலயத்தில் விருத்த கேதாரீஸ்வரரை தரிசனம் செய்யலாம்.
ரிஷிகேஷ் பத்ரிநாத பாதையில் அமைந்துள்ள ஹெலாங் நகரிலிருந்து தற்போது ஊர்கம் வரை வண்டிகள் செல்கின்றன. ஊர்கம் கிராமத்திற்குச் சென்று, பின்னர் 10 கிலோ மீட்டர் மலைப் பாதையில் கால்நடையாக அல்லது குதிரையில் சென்று கல்பேஷ்வரர் கோயிலை அடைய வேண்டும்.
ஐந்து கேதாரங்களையும் ஒரே தடவையில் தரிசனம் செய்வது என்பது மிகவும் கடினம். சுமார் 170 கி.மீ நடைப்பயணம் அவசியம் மேலும் சுமார் 16 நாட்கள் கடினமாக நடைப்பயணம் செய்ய வேண்டி வரும். மேலும் தங்குமிடங்களும் உணவும் நாம் நினைப்பது போல் கிடைக்காது. இந்த யாத்திரைகளை கோடைக்காலமான மே-ஜூன் மாதங்கள் அல்லது பருவ மழை முடிந்த செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் மேற்கொள்ளலாம் ஆனால் அப்போது குளிருக்கு தகுந்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும். பஞ்ச கேதாரங்களையும் தரிசனம் செய்தபின் பத்ரிநாதரை சாட்சிக்காக தரிசனம் செய்யவேண்டும்.
அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ரிஷிகேஷ்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை