ஜெகநாதன், திருநந்திபுர விண்ணகரம்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்குத் தென்மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம் வழியாக நாதன் கோயிலுக்கு மினி பஸ் செல்கிறது.
மூலவர் : ஜகந்நாதன் நாதநாதன், விண்ணகரப் பெருமான், யோக ஸ்ரீனிவாசன்
தாயார் : செண்பகவல்லி
தீர்த்தம் : நந்தி தீர்த்த புஷ்கரிணி
விமானம் : மந்தார விமானம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
தலச் சிறப்புகள்: நாதன் கோயில் என்ற திருநந்திபுரவிண்ணகரம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பழங்காலத்தில் இவ்விடம் செண்பகாரண்யம் என அழைக்கப்பட்டது. மன்னார்குடி தொடங்கி இந்த நாதன் கோயில் முடிய உள்ள பகுதிக்கே செண்பகாரண்யம் என்று பெயர். காளமேகப் புலவர் பிறந்த ஊர். இத்திருக்கோயில் தக்ஷிண ஜகந்நாதம் என்று அழைக்கப்படுகின்றது. மூலவர் வீற்றிருந்த கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். உற்சவரின் பெயரில் இவ்வுர் நாதன் கோயில் என வழங்கப்படுகின்றது.
இத்தலம் நந்திவர்மன் ஏற்படுத்திய ஊர் என்றும் அவன் கட்டிய கோயில் என்றும் இதனைக் கூறுவர். நந்தி பணி செய்த நகர் என்றார் திருமங்கையாழ்வார். இதே காரணத்துக்காக புஷ்கரிணிக்கும் நந்தி புஷ்கரிணி என்றே பெயர். சந்நிதியின் இடது பக்கச் சுவற்றில் அதிகார நந்தி இருக்கிறார். நந்தி இவ்விடத்தில் தவம் செய்து சாபவிமோசனம் பெற்ற ஸ்தலமாதலால் நந்திபுரம் என்றும் பகவானுக்கு நந்திநாதன் என்றும் பெயர் உண்டாயிற்று. பாவ விமோச்சனத்துக்கு தை அம்மாவாசையன்று இங்கே ஸ்நானம் செய்யலாம்.
பாற்கடலில் எம்பெருமாளின் பாதார விந்தங்களை பற்றிக் கொண்டிருந்த பிராட்டிக்கு எம்பெருமானின் திருமார்பிலேயே எப்போதும் நித்திய வாசம் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கொண்டும் செண்பகாரணயத்தில் தவம் செய்யலானாள். தேவியின் பிரிவால் வாடிய எம்பெருமான் பிராட்டிக்குக் காட்சி கொடுத்துத் திருமார்பில் திருமகளை ஏற்றுக்கொண்டார். பெருமாள் கிழக்கு நோக்கித் தவஞ்செய்தவளை எதிர்கொண்டு ஏற்றுக்கொண்டதால் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். ஆதலால் இப்பெருமாளுக்கு யோகஸ்ரீனிவாசன் எனப் பெயராயிற்று சிபி மன்னர் புறாவிற்காக தன்னையே அளித்த திருத்தலம். நாதன் கோயிலில் அவர் உருவம் வலது பக்க சுவரில் உள்ளது.
தலவரலாறு : சிவபெருமானின் வாகனமாகவும், கயிலாய மலையில் வாயிற்போக்கனாகவும், பூதகணங்களின் தலைவராகவும் உள்ளவர் நந்தி தேவர். சிவ பக்தியில் சிறந்தவர் இவர். இவருடைய அனுமதி பெற்றுவிட்டுத் தான் சிவாலயங்களில் நாம் தரிசனம் செய்ய முடியும். கயிலை மலைக்குள் அனுமதி இல்லாமல் இராவணன் நுழைய முற்பட்டபோது அவனுக்கும், நந்தி தேவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது குரங்கு ஒன்றால் உன் நாடு இலங்கை அழிந்து போகும் என்று சாபமிட்டார். சிவனை அவமதிக்கும் வகையில் தாட்சாயணியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். அந்த யாக சாலையில் பூத கணங்களுடன் புகுந்து அதகளம் செய்தார். தட்சனின் தலை அறுபட்டு விழவும், யாகத்துக்கு துணை போன தேவர்கள் சூரபதுமனால் வதைபடவும் சாபம் கொடுத்தவர் நந்தி தேவர் தான்.
இத்தகைய நந்தி தேவர் திருவைகுண்டம் வந்த பொழுது, அங்கு காவலாக இருந்த துவாரபாலகர்களின் அனுமதி பெறாமல் உள்ளே நுழைய முயன்றார். அவர்கள் தடுத்தபோது அதை பொருட்படுத்தாமல் உள்ளே சென்றார். இதனால் கோபமடைந்த துவாரபாலகர்கள், நந்தி தேவரின் உடல் முழுதும் வெப்பம் ஏறி சூட்டினால் துன்பமுறுவாய் என்று சாபமிட்டனர். அவர் துடித்துப் போனார். பலரிடமும் உபாயம் கேட்டார். எரிச்சல் தீரவில்லை. இறுதியில் சிவனிடம் இதைச் சொல்லி தீர்வு கேட்டார். அதற்கு இறைவன், 'சகல விதமான பாவங்களையும் போக்கும் செண்பகாரண்யம் எனும் தலம் கும்பகோணத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. அங்கு போய் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து விமோசனம் பெற்றுக்கொள்' என்றார். அதன்படி நந்தி தேவர் இங்கு வந்து தவம் செய்து, சாப நிவர்த்தி பெற்றார். அத்துடன், தான் இங்கு வந்து தவம் செய்து பேறு பெற்றமையால், தன் பெயராலேயே இத்தலம் விளங்க வேண்டும் என்று அருள் பெற்றார்.அதன் பிறகு நந்திபுரம் என்றும், நந்திபுர விண்ணகரம் என்றும் பெயர் பெற்றது.
திருமாலின் திருமார்பில் திருமகள் உறையும் பாக்கியம் பெற்றதும் இங்குதான். திருப்பாற்கடலில் பரந்தாமனின் பாதங்களையே பற்றி எந்நேரமும் அவரது திருவடியிலேயே இருந்த அன்னை, ஒளி வீசும் அவர் மார்பைப் பார்த்து ஒரு முறை பிரமித்தார். தான் எந்நேரமும் அங்கேயே வாசம் செய்யவேண்டும் என்று விரும்பினார். அதற்காக, செண்பகாரண்யம் எனப்படும் இந்த தலம் வந்து திருமாலை வேண்டி கடும் தவம் செய்தார். பாற்கடலில் திருமகளைப் பிரிந்து தனித்திருந்த திருமாலும் ஓர் ஐப்பசி மாத சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் அலைமகளுக்குக் காட்சி அளித்தார். அன்னை மனம் மகிழ்ந்தாள். 'உன் விருப்பப்படி நீ எம் மார்பில் இனி உறையும்' என்று ஆசிர்வதித்தார். கிழக்கு நோக்கி திருமகளை எதிர்கொண்டு ஏற்றமையால் இங்கு பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
திருமாலைப் பிரிந்து தவம் இருந்து மீண்டும் தரிசனம் பெற்று இணைந்தமையால் திருமணப் பிரார்த்தனைக்கு இது உகந்த தலமாகும். தாயாருக்கு ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் வைத்து பிரார்த்தித்து வர நினைத்த காரியம் கைகூடும். சிபிச் சக்கரவர்த்திக்குப் பெருமாள் காட்சி தந்து அருளிய தலமாகும். தன்னிடம் வந்து அடைக்கலமான புறாவின் எடைக்குச் சமமாக, தானே தராசின் மறு தட்டில் அமர்ந்து தன்னை காணிக்கை ஆக்கிய சிபிச் சக்கரவர்த்தியைக் காண பெருமாள் அவருக்கு காட்சி அளித்தார். இதற்காக கிழக்கு நோக்கி இருந்த பெருமாள் மேற்கு நோக்கி திரும்பினார்.
விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் என்னும் நாயக்க மன்னர் தன் அன்னைக்குத் தோன்றிய காரணம் காண இயலா (குணமநோய்) நோயை நீக்க வேண்டி இப்பெருமானிடம் இரைந்து நிற்க, அவ்விதமே நோய் நீங்கியதால் இக்கோவிலுக்கு பல அரிய திருப்பணிகள் செய்தார். ஒரு ராஜா அணிய வேண்டிய சகல ஆபரண அணிகலன்களுடன் நாயக்க மன்னர் தமது இரண்டு மனைவியருடனும், தாயுடனும் இங்கு நின்றுள்ள சிற்பங்கள் கோலம் மிகவும் அழகானதாகும்.
குழந்தைப் பேறுக்காக ஐப்பசி சுகலபசத்தில் தாயாருக்குத் திருமஞ்சனைச் செய்கிறார்கள். காலை 8.30 மணி முதல் 11.30 வரையும் மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரையும் சேவிக்க முடியும். ஏனெனில் அர்ச்சகர் மேலும் பல கோயில்களுக்குச் சென்றுவிடுவதனால் மாலை விளக்கேற்றும் நேரத்தில் செல்வது நல்லது.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை