கோலவில்லி ராமர், திருவெள்ளியங்குடி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் வழியில் சேங்கனூர் சந்திப்பில் இறங்கி அங்கிருந்து மண்பாதை வழியாக 1 கி.மீ தொலைவில் உள்ளது. தற்போது கும்பகோணத்திலிருந்து கோயிலுக்கு அருகில் பஸ்கள் செல்கின்றன.
மூலவர் : கோலவில்லி ராமர், ஸ்ரீராப்தி நாதன்
உற்சவர் : சிருங்கார சுந்தரர்
தாயார் : மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி)
தல விருட்சம் : செவ்வாழை
தீர்த்தம் : சுக்கிர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்
விமானம் : புஷ்கலாவர்த்தக விமானம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மூலவருக்கு இருபுறமும் மார்க்கண்டேயரும் ஸ்ரீதேவியும் அமர்ந்துள்ளனர். புஜங்கசயனம் கிழக்கே திருமுக மண்டலம் மிக அழகு வாய்ந்தவர். இந்த பெருமாளை தரிசித்தால் 108 திருப்பதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும். தனக்கு கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில், சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்து கொண்டிருக்கிறார். எனவே இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத்தலமாக போற்றப்படுகிறது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம்.
இத்தல பெருமாள் புஜங்க சயனத்தில்,கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சுக்கிரன், பிரம்மா, இந்திரன், பராசுரர், மயன் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர். இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார். ஒரு காலத்தில் மயன் மனம் வருந்திய நிலையில் இருந்தான். கலியுகத்தில் தனக்குக் காட்சி கொடுப்பதாக திருமால் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வர மயன் அவ்விதமே இத்தலத்தில் கடுந்தவமியற்ற இறைவன் அவனுக்குச் சங்கு சக்ரதாரியாக மாகவிஷ்ணு கோலத்தில் காட்சியளித்தார். ஆனால் தனக்கு இந்தவிதமான திருக்கோலக் காட்சி வேண்டாமென்றும் இராமாவதாரத் திருக்கோலத்தையே தான் தரிசிக்க விரும்புவதாய் மயன் கூற தம் கரத்திலிருந்து சங்கு சக்கரங்களைக் கருடனுக்குக் கொடுத்துவிட்டு வில் அம்புகளுடன் அலங்காரக் கோலத்துடன் கோலவில்லி ராமனாக காட்சி அளித்தார். இக்கோயிலில் உள்ள மூலவர் அழகு வாய்ந்தவராகவும் உள்ளார் இக்கோயில் மிகவும் சுத்தமாக உள்ள கோயில். பெரியவாச்சான் பிள்ளையினுடைய அவதாரஸ்தலமாகும்.
தல வரலாறு : மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது இறைவன் என்பதை அறியாத மன்னன் தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறான். ஆனால், உண்மைநிலை அறிந்த அசுரகுல குரு சுக்கிராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார். குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு தர்ப்பைப்புல்லால் துவாரம் வழியாக குத்த, ஒரு கண்ணை இழக்கிறார் சுக்கிரன். ஒளியிழந்த கண்ணுடன் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு கடைசியாக இத்தலத்துப் பெருமாளை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றார். இதனால் தான் இத்தலம் “வெள்ளியங்குடி” என அழைக்கப்படுகிறது. தேவ சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோயில்களை கட்டி முடித்தார். இதே போல் தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுரகுல சிற்பி மயன் வருத்தப்பட்டு பிரம்மனிடம் வேண்டினார்.
அதற்கு பிரம்மா,”இத்தலத்தில் கடும் தவம் செய்தால் பெருமாள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என கூறினார். மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுத்தார். ஆனால் மயன்,”தனக்கு இந்த தரிசனத்திற்கு பதில், இராமாவதார காட்சி வேண்டும்” என்றான். தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தைக் கருடாழ்வாரிம் கொடுத்து விட்டு கோலவில்லி இராமனாக வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார் பகவான். இப்படிப்பட்ட பெருமைக்குரிய தலத்தில் தவமிருக்க விரும்பி இங்கு வந்தார் சுக்கிராச்சாரியார்.
கண்ணில் குறைபாடு உள்ளவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள், புத்திர பாக்கியம் வேண்டுவோர் இங்கு வழிபட்டால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை. சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். இத்தலத்தின் அருகில் சேங்கானூர் என்ற ஊர் உள்ளது. இதுதான் வைணவ மேதை பெரியவாச்சான் பிள்ளையின் அவதார தலமாகும். காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் தங்கி கோயில் திருப்பணி செய்துள்ளார்.
காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம், ஆடுதுறை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை