தேவாதிராஜன், திருவழுந்தூர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் குடந்தையிலிருந்து மாயவரம் செல்லும் பேருந்தில் சென்று இத்தலத்தை அடையலாம். மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் இரண்டாவது இரயில் நிலையத்தில் உள்ள இத்தலம் தற்போது தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.
மூலவர். : தேவாதிராஜன்
தாயார் : செங்கமலவல்லி
தீர்த்தம் : தர்சன புஷ்கரிணி, காவேரி
தல விருட்சம் : பலாமரம்
விமானம் : கருட விமானம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார் - 45 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : இவ்வூரை 'பஞ்ச கிருஷ்ண தீர்த்தம்' என்று அழைப்பார்கள். கோசகன் என்று இப்பெருமாளைக் குறிக்கின்றனர். கோசகன் என்பதின் தமிழாக்கமே ஆமருவியப்பன் என்பதாகும். இப்பெயரும் மூலவருக்குண்டு சாளக்கிராமத்தால் ஆன திருமேனி. 13 அடி உயரத்தில் நின்ற திருக்கோலம். கம்பராமாயணத்தை இயற்றிய கம்பர் பிறந்தது இவ்வூரே. மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். மூலவருக்கு இடதுபுறம் கருடாழ்வாரும் வலதுபுறம் சேவிக்கும் காட்சியையும் இங்குக் காணலாம். கோபுரத்தின் உட்புறம் கம்பனும் அவர் மனைவியும் சிலை வடிவில் நிற்கின்றனர் எதிரில் தெளிந்த நீருடன் பெரிய புஷ்கரிணி இருந்தது ஆனால் தற்போது இல்லை. கோயிலுக்கு தென்மேற்கே கம்பன் மேடு என்ற இடத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. மணவாள மாமுனிகள் மங்களாசாஸனம் செய்த பெருமாள் இவர்.
இந்த கோவிலில் கருட விமானம் உள்ளது மற்றொரு சிறப்பாகும். 107 திவ்ய தேசங்களிலும் சுவாமியின் எதிரே உள்ள கருடாழ்வார், இந்த தலத்தில் மட்டும் சுவாமிக்கு விமானம் கொடுத்து சுவாமிக்கு பக்கத்திலேயே அருள்பாலிக்கிறார். மேலும் சுவாமிக்கு வலது புறத்தில் பிரகலாதன் இத்தலத்தில் மட்டுமே உள்ளார். பிரகலாதன் நரசிம்ம அவதாரத்தைக் கண்டு பயந்து பெருமானின் சொந்த சொரூபத்தைக் காட்ட வேண்டுமென்று வேண்டிய போது சினம் தணிந்து சிங்கபெருமாள் காட்சி தந்தும் பிரகலாதனின் அச்சம் குறையாதிருக்க இத்தலத்தில் அமர்ந்துள்ள ஆமருவியப்பனாகவும் காட்சி தந்தார். தேவேந்திரன் ஒரு சமயம் கருடனை அழைத்து ஒரு வைர முடியினையும் ஒரு விமானத்தையும் தந்து அவைகள் எந்தப் பெருமாளுக்கு உகந்தவையோ அவரிடம் சேர்ப்பிக்குமாறு வேண்ட திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு வைரமுடியினையும் இந்த தேவாதிராஜனுக்கு விமானத்தையும் அளித்தார். அதனால் இப்பெருமாள் கருடனைத் தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டார்.
தலவரலாறு : இத்தலத்தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். அந்த தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களை காப்பாற்ற அந்த தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார். இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது. பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுத்திய அரசனுக்கு கோஹத்தி தோஷம் உண்டாகவே, மன்னன் சுவாமிக்கு ஆயிரம் குடங்கள் வெண்ணை சமர்ப்பித்து முறையிட்டு, பிரார்த்தனை செய்து, கோஹத்தி சாபம் நீங்கப்பெற்றான்.
மன்னன் கோஹத்தி சாபம் நீங்கப்பெற்ற நிகழ்வை ஒட்டி, இப்போதும் வருடத்தில் 2 நாட்கள் தை அமாவாசை தினத்திலும், புரட்டாசி கடைசி சனிக்கிழமையும் மூலவர் பெருமாளுக்கு ஆயிரம் குடம் வெண்ணை உற்சவம் நடைபெறுகிறது. மேலும் இந்த கோவிலில் பெருமாளுக்கு வைகாசி மாதத்தில் தேர் திருவிழா, பிரம்மோற்சவம், கார்த்திகை உற்சவம், பகல்பத்து, ராப்பத்து உற்சவம், தெப் போற்சவம், தாயாருக்கு தனியாக பிரம்மோற்சவம், பவித்ரோத்சவம் ஆகிய உற்சவங்கள் சிறப்பாக நடை பெறுகின்றன.
அகத்திய முனிவருக்கு சைவ கோவிலில் தான் சிலைகள் இருக்கும். ஆனால் இக்கோவிலில் அகத்தியருக்கு சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் எதிரே தனிக்கோவிலில் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இங்கு யோக நரசிம்மர், வாசுவேதர், விஷ்வக்சேனர், தேசிகர், ராமபிரான், ஆஞ்சநேயர், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.இங்குத் தருமதேவதை, உபரிசரவசு, கருடன், காவிரி, அகத்தியர் ஆகியோர் பெருமாளை வழிபட்டுப் பேறு பெற்றவர்கள். இங்குப் பெருமாள் ருக்குமணி, சத்திய பாமாவுடனும் பசுங்கன்றுடனும் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீ கிருஷ்ணனாகத் காட்சி தருகிறார். கண்ணபிரானால் மேய்க்கப்பட்டிருந்த பசுக்களை ஒருசமயம் நான்முகன் கவர்ந்து சென்றான். அதை அறிந்த கண்ணபிரான் மாயையால் வேறு பசுக்களைப் படைத்தார். பிரமன் தன் தவற்றை உணர்ந்து வேண்டப் பெருமாள் ஆமருவியப்பன் என்னும் திருப்பெயரோடு இத்தலத்தில் எழுந்தருளினார்.
ஒருதடவை இப்பகுதி அரசன் 999 குடத்தில் வெண்ணை வைத்து ஒரு குடத்தை காலியாக வைத்து கிருஷ்ணரை ஏமாற்றினான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்த கிருஷ்ணர், ஒரு குடத்தில் வெண்ணையும் 999 குடங்கள் காலியாகவும் செய்து, அந்த அரசனின் ஆணவத்தை அடக்கினார். இத்தகையை சிறப்புடைய இந்த தலத்தில் விதிப்படி பூஜைகள் செய்தால் எல்லா கஷ்டங்களும் தூள்-தூளாகிவிடும். மேல் அதிகாரிகள் அராஜகத்துடன் நடந்து கொண்டால், இத்தலத்து தேவாதி ராஜபெருமாளை வணங்கினால் பலன் உண்டாகும்.
இக்கோவிலில் திருமண வரம் வேண்டுவோர், புத்திர பாக்கியம் வேண்டுவோர் வெண்ணெய் மற்றும் எண்ணை தந்து வழிபட, தோஷங்கள் நீங்கப்பெற்று, வேண்டிய வரம் பெறுவர். இத்தலத்தில் வேண்டு வோர்க்கு ராஜபதவி கிடைப்பதுடன், ராஜபதவியை பெற ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அத்தடைகளும் நீங்கும்.
காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : குத்தாலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை