திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து மாப்படுகை சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன. மயிலாடுதுறை ரயில்நிலையத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது.
மூலவர் : பரிமள ரங்கநாதர், சுகந்தவன நாதன்
தாயார் : பரிமள ரங்கநாயகி, சந்திர சாப விமோசனவல்லி, புண்டரீக வல்லி
தீர்த்தம் : இந்து புஷ்கரிணி
விமானம் : வேதசக்ர விமானம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 11 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மூலவர் நான்கு புஜங்களுடன் ஆதிசேடன் மீது வீரசயனமாக கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். மரகதக் கல்லால் ஆனவர் என்பர். இந்த இந்தளூர்ப் பெருமாளின் முன்னை வண்ணம் பாலின் வண்ணம் என்றும் கிரேதாயுகத்தில் பகவான் பால் நிறத்தவனாய் இருந்திருக்கிறான் என்றும் பின்னை வண்ணம் எண்ணுங்கால் பொன்னின் வண்ணன் என்றும் திரேதாயுகத்தில் பகவான் பொன் நிறமாகப் பொலிந்து பின்னர் மணியின் வண்ணம் என்றும் சொல்கிறார். துவாபரயுகத்தில் நீலமேனியன் இப்படி மாறுப்பட்ட வண்ணம் காட்டி மயக்குகிறாயே என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
தல வரலாறு : அம்பரீஷன் என்ற மன்னன் தன்னுடைய 100வது ஏகாதசி விரதத்தை இத்தலத்தில் முடிக்க விரும்பினான். மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால் தேவர்கள் இவன் 100வது விரதத்தை முடித்தால் தேவலோக பதவி பெற்று விடுவான் என்று பயந்து துர்வாசரிடம் முறையிட அவரும் விரதத்தை தடுத்துவிடுவதாக கூறி இங்கு வருகிறார். ஆனால் மன்னன் ஏகாதசி விரதத்தை முடித்து விடுகிறான். ஏகாதசி விரதம் முடித்து விட்டாலும் துவாதசி நேரத்துக்குள் உணவருந்தினதால்தான் முழு பயன் கிடைக்கும். துவாதசி நேரம் துவங்கியதும் மன்னன் உணவருந்த தயார் ஆனான். அப்போது அங்கு வந்த துர்வாசரை அவரது உள்நோக்கம் அறியாமல் அவரையும் தன்னுடன் உணவருந்த அழைத்தான். அவரும் நதியில் நீராடி வந்து விடுகிறேன், பின்பு உணவருந்தலாம் என்று கூறி நீராட செல்கிறார். தாமதமாக சென்றால் மன்னன் விரதம் முடிக்க முடியாது என்று நினைத்து தாமதம் செய்கிறான். மன்னன் தான் மட்டும் விரதம் முடித்தால் சாபம் இடுவார் என்று கலங்கி வேதியர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் ஆலோசனை படி பெருமாளை வேண்டி உள்ளங்கையில் முழு அளவு தீர்த்தம் மூன்று முறை அருந்தி விரதத்தை முடித்தான்.. இதை உணர்ந்த துர்வாசர் கோபம் அடைந்து ஒரு பூதத்தை ஏவி மன்னனை கொல்ல ஆணையிட்டார். மன்னன் இறைவன் திருவடியில் சரணடைய பூதத்தை பெருமாள் விரட்டினார். மன்னிப்பு கேட்ட துர்வாசரை மன்னித்தார். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் அருள் புரிகிறார். ஏகாதசி விரதம் இருக்க சிறந்த தலம்.
கோவில் அமைப்பு : மயிலாடுதுறை நகரில் காவிரி நதியின் வட கரையில் ஒருபகுதியாக அமைந்துள்ளது திருவிழந்தூர். இதன் புராணப் பெயர் திருஇந்தளுர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் பாஞ்சராத்திர ஆகமத்தைச் சேர்ந்தது. இத்தலம் சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக் காடுகள் நிறைந்திருந்ததால் சுகந்த வனம் என்ற பெயரும் உண்டு. இந்து என்ற சொல் இந்திரனைக் குறிக்கும். தட்சனின் சாபத்தால் சந்திரனுக்கு கொடிய நோய் தோன்றவே அவன் இவ்வூரை அடைந்து இத்தலத்து எம்பெருமானின் அருளால் நோய் நீங்கப்பெற்றான். அதனால்தான் அதன் நினைவாக இந்த ஊருக்கு இந்துபுரி என்றும், தான் தவம் புரிந்த திருத்தலத்தை இந்துபுஷ்கரணி என்றும் வழங்குமாறு இறைவனிடம் வேண்டியுள்ளதால் இப்பெயர்கள் அமைந்துள்ளன.
பிரம்ம தேவனால் வெளியிடப்பட்ட வேதங்களை மதுகைடபர்கள் என்னும் அரக்கர்கள் அபகரித்துப் போக, பிரம்மா மிகவும் வருந்தி எம்பெருமானை வேண்டியுள்ளதால் பெருமாள் அந்த வேதங்களை அரக்கர்களிடமிருந்து மீட்டு வேதங்களுக்கு பரிமளத்தை கொடுத்தமையால் இறைவன் பரிமள ரெங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார். திருமங்கை மன்னன் தன் குழுவினருடன் பெருமாளை தரிசிக்க வந்தனர். அப்போது சன்னதி கதவுகள் திறக்கப்படவில்லை. பெருமாளும் அவருக்கு காட்சி அளிக்கவில்லை. ஆழ்வார் எவ்வளவு வேண்டியும் பெருமாள் முகம் கொடுக்கவில்லை. இதனால் ஆழ்வார் மிகவும் வருந்தி மிதமிஞ்சிய பக்தியினால் பாடியுள்ளார். இதன் பின் பெருமாள் காட்சி கொடுத்தார், திருமங்கையாழ்வார் அருளிச்செய்த 9-ம் திருமொழியின் திருவிந்தளுர் பாசுரங்கள் காணலாம்.
இறைவனது திருமேனி மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பச்சை மரகதத் திருமேனியாக காண்போர் கண்ணையும் கருத்தையும் கவருவதாக அமைந்துள்ளது. மூலஸ்தான பரிமள ரெங்கநாதரின் முகாரவிந்தத்தில் சூரியனாலும், பாதாரவிந்தத்தில் சந்திரனாலும், நாபிக்கமலத்தில் பிரம்மாவினாலும் பூஜிக்கப்படுகிறார்கள். தென்புறத்தில் காவிரி தாயாரும், வடபுறத்தில் கங்கை தாயாரும் ஆராதிக் கிறார்கள். இமயனும், அம்பரிஷனும் எம்பெருமான் திருவடிகளை அர்ச்சிக்கின்றனர். உத்சவப்பெருமாள் உபய நாச்சியாருடன் சீரிய சிம்மாசனத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. பரிமள ரங்கநாதரின் தெற்குபக்கத்தில் ஸ்ரீசக்கரத் தாழ்வாருக்கு தனிச்சன்னதி உள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தனியாக சன்னதி உள்ளது. மிகுந்த வரப்பிரசாதி சன்னதி வெளியில் கீழவீதியில் உள்ளது. கடல் கடந்து சீதாப் பிராட்டியாரைக்கண்டு ராமனது துயர் நீக்கிய மகாவீரனான இவர் தன்னை அண்டினோரின் துயர் தீர அருள்புரிகிறார். இவருக்கு திரு மஞ்சனம் இல்லாத நாளே இல்லை.
சந்திரன், பங்குனி மாதம் எம்பெருமானுக்கு பிரம்மோத்ஸவம் செய்வித்தப் படியால் இன்றும் பங்குனியில் பிரம்மோத்சவம் நடை பெறுகிறது. துலா (ஐப்பசி) மாதத்தில் காவிரியில் நீராடினால் கங்கையை விட அதிகப் புண்ணியம் வாய்ந்தது என வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே துலா பிரம்மோத்சவம் நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி உற்சவம், பகல்பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி உத்சவம் 20 நாட்கள் நடைபெறும். பகல்பத்து உற்சவம்-வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக 10 நாட்கள் நடை பெறும். இந்த நாட்களில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 2000 பாசுரங்கள் ஓதப்படும். 10-ம் நாள் பெருமாளுக்கு மோகினி அலங்காரம் ராப்பந்து உற்சவம் வைகுண்ட ஏகாதசியன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். பகல் பத்தில் பிரபந்தப் பாகரங்கள் இரண்டாயிரம் ஓதியது போக பாக்கியுள்ள 2000 பாசுரங்களும் 10 நாட்களில் ஓதப்படும். மார்கழி மாதம் 30 நாட்களிலும் விடியற்காலை தனுர் மாத பூஜை நடைபெறும். தை 1-ம் நாள் சங்கராந்தி உற்சவம், 2-ம் நாள் காலை தாயார் உற்சவம், மாலை குதிரை வாகனம் புறப்பாடு, பரிவேட்டை, 3-ம் நாள் மட்டையடி உத்சவம் தாயார் அத்யான உத்சவம். மாசிமக உற்சவம், பெருமாள் காவேரி பூம்பட்டினம் சென்று சமுத்திர தீர்த்தவாரி. பங்குனி பிரம்மோத்சவம் 10 நாட்கள். உத்திரத்திற்கு தீர்த்தவாரி, 4-ம் திருநாள் கருட சேவை, 7-ம் திருநாள் திருக்கல்யாணம், 9-ம் திருநாள் திருத்தேர். திருவிழா முடிந்ததும் 5-ம் நாள் ஊஞ்சல் உற்சவம். ஸ்ரீபெருமாள் நட்சத்திரம் உத்திரம். உத்திர தினத்தன்று புனுகு தைலம் (புனுகுசட்டம்). சந்தனாதி தைலம். ஜவ்வாது, மனோரஞ்சிதம், சண்பகப்பூ. சம்மங்கி, மல்லிகை, சந்தன முல்லை, ஜாதி சந்தன முல்லை, பவள மல்லி, துளசி இந்தப் பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து பக்தர்கள் பெருமாளின் அருள் பெறலாம்.
சந்திரனுக்கு மற்ற தலங்களில் பாவ விமோசனம் கிடைத்தாலும் திருப்தி அடையவில்லை. தன் மீது எந்த சாபமும் ஒட்டியிருக்கக் கூடாது. என்றெண்ணி தாயாரான புண்டரீக வல்லியிடம் தன் வேண்டுகோளைச் சொல்ல பெருமாளும் தாயாரும் சேர்ந்து சந்திரன் மனக்குறையை போக்கியதாகச் சொல்கிறார்கள். இதனால்தான் இங்குள்ள தாயாருக்கு சந்திரபாப விமோசனவல்லி என்ற பெயர் ஏற்பட்டது. பெண் வாரிசு பிறக்கவில்லையே என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து சாந்தி செய்தால் குறை விலகிவிடும். மற்ற தலத்திற்குச் சென்றும்பாபம் தீரவில்லை என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து தங்களது பாபம், தங்கள் குடும்பத்தின் பாவம், முன்னோர்கள் செய்த பாபம் அனைத்தையும் விலக்கிக் கொள்ள முடியும்.
இந்த ஊரில் கொண்டப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது, ஐப்பசி மாதம் கடைசி நாளில் மயிலாடுதுறையில் உள்ள சிவாவிஷ்ணு கோயில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். பல்லாயிரக் கணக்கான மக்கள் காவேரியில் நீராடுவர்.
காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : மயிலாடுதுறை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை