குடமாடு கூத்தன், திருஅரிமேய விண்ணகரம்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருஅரிமேய விண்ணகரம் சீர்காழியிலிருந்து 8 கி.மீ தொலைவில் திருநாங்கூருக்குத் தென் பகுதியில் அமைந்திருக்கிறது. இக்கோயிலைக் குடமாடு கூத்தன் கோயில் என்றும் கூறுவர்.
மூலவர் : குடமாடு கூத்தன் (தைலக் காப்புத் திருமேனி)
உற்சவர் : சதுர்புஜ கோபாலர்
தாயார் : அமிர்தவல்லி
தல மரம் : பலாச மரம்
தீர்த்தம் :அமிர்த தீர்த்தம்
விமானம் : உச்சச்ருங்க விமானம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : குடமாடு கூத்தர் என்பது இப்பெருமானின் திருநாமம். குடங்கள் எடுத்து ஆடினானா அல்லது குடை கொண்டு ஆடினானா என்றொரு மயக்கு இந்தக் குடக்கூத்து என்றாகிறது. திருவில்லிபுத்தூர் ஆண்டாளோ குன்றம் குடையாய் எடுத்தாய்க் குணம் போற்றி என்று குன்றத்தைக் குடை பிடித்ததாகக் கூறுகிறார். இத்தலத்தில் குன்றைக் குடையாக எடுத்த கோவர்த்தன நாதனே இங்கு எழுந்தருளியிருக்கிறார். வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்
குன்றத்தை குடையாய்க் கொண்டு காப்பது அவன் வாத்ஸல்யம் பகைவனுக்கு அருளுடம் பண்பின்னாக இங்கு எழுந்தருளியுள்ளான். குடங்கள் எடுத்து ஆடுபவன் என்று குடையாகக் குன்றத்தை எடுத்து கோபலர்களையும் ஆவினங்களையும் காத்தருளின கோவர்த்தன நாதனே இங்கு எழுந்தருளியுள்ள 11 பெருமான்களுள் ஒருவராக இருப்பதால் அந்த கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த நிகழ்ச்சியே இங்கு மறைமுகமாக உணர்த்தப் பட்டுள்ளதாகக் கொள்ளலாம். திருநாங்கூர் கருடசேவையில் குடமாடு கூத்தனும் கலந்து கொள்வார்.தை மாதம் அமாவாசைக்கு மறுநாள் கருடசேவை மிக விசேஷம். இங்கு கீழவீதியில் மதங்கீசுவரர் கோயில் உள்ளது.
பிரகாரத்தில் ராமர், சீதை ஆகியவர்களுக்குத் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. எதிரிகளால் துன்பம் வராமல் இருக்கவும், கடன் துன்பங்களிலிருந்து விடுபடவும் பக்தர்கள் வேண்டுகின்றனர். பெருமாளுக்கு சுவாமிக்குத் தைலக்காப்பு செய்கின்றனர். பெருமாள் தரையில் வெண்ணெய்ப் பானையின்மீது ஒரு காலை வைத்துக்கொண்டு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். குடத்துடன் ஆடியபடியே வந்தவர் ஆகையால் குடமாடு கூத்தன் என்கின்றனர். கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கியவர் என்பதாலும் இவருக்குக் குடமாடு கூத்தன் என்று பெயராம். திருநாங்கூரில் உள்ள பதினோரு திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். தை மாதத்தில் கருட சேவை நிகழ்கிறது. அரி(பெருமாள்) மேவியிருக்கும் ஊர் ஆகையால் அரிமேய விண்ணகரம் என்ற பெயர் இத்தலத்துக்கு ஏற்பட்டது. இக்கோவிலில் கொடிமரம் கிடையாது. பெரிய பீடம்; ஏறிச் சென்றுதான் வணங்கும்படி இருக்கிறது. அதாவது பக்தி என்னும் படிகளை ஏறிச் சென்றால் பெருமாளின் அருளை அடையலாம் என்பதைக் குறிக்கும் பீடம் இது.
தல வரலாறு : உதங்கர் என்னும் முனிவர் சிறிய வயதில் வைதர் என்பவரிடம் வேதம் கற்றுக்கொண்டார். குருபத்தினி உதங்கரிடம் அந்நாட்டை ஆளும் மகாராஜாவின் மனைவி அணிந்திருக்கும் குண்டலம் வேண்டும் என்று குருதட்சணையாகக் கேட்டார். உதங்கர் அரண்மனைக்குச் சென்று இராணியிடம் கேட்க அவரும் அதைக் கொடுத்துவிட்டார். குருகுலம் திரும்பும் வழியில் பசித்தது. இடையன் ஒருவன் தலையில் பானையுடன் ஆடிப் பாடிக்கொண்டே வந்தான். உதங்கர் அவனிடம் தாகம் தீர்க்கப் பானையில் இருப்பதைக் கேட்டார். "பானையில் பசுவின் சாணமும் கோமியமும் இருக்கிறது. உங்கள் குருவும் இதைத்தான் உண்டார்" என்றான் அந்த இடையன். "ஆஹா! குரு உண்ட பொருள்!" என்று மகிழ்ந்து அதனை வாங்குவதற்காக தம் கமண்டலத்தை ஒரு மரத்தின் கீழே வைத்தார். பின் அப்பானையை வாங்கி அதனுள் இருப்பதைப் பருகினார். தக்ஷன் என்பவன் அந்த வழியாக வந்தவன், கமண்டலத்தை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் ஒளிந்துகொண்டான். கவலையுடன் உதங்கர், இடையனிடம் ஆலோசனை கேட்டார். அந்த வழியில் வந்த ஒரு குதிரைக்காரர் ஒருவரைக் கைகாட்டி அவரிடம் உதவிகேட்கச் சொன்னான். குதிரைக்காரரும் உதவுவதாகச் சொல்லி, உதங்கருடன் சென்றார். தக்ஷன் ஒளிந்துகொண்ட இடத்துக்குச் சென்ற குதிரையை அதன் வாயிலிருந்து நெருப்பைக் கக்கச் செய்தார். தக்ஷன் வெப்பம் தாங்காமல் வெளியே வந்தான்; கமண்டலத்தைத் திருப்பிக்கொடுத்தான். இடையனுக்கும், குதிரைக்காரனுக்கும் நன்றி சொல்லிவிட்டு குருகுலம் திரும்பினார். குரு வைதர் அவரிடம், "உதங்கா! உனது குருபக்தியை சோதனை செய்து பார்க்கவே பெருமாள் இடையனாக வந்தார். குதிரையாக வந்தவர் அக்னிதேவன். அக்குதிரையின் மேல் அமர்ந்திருந்தவர் தேவேந்திரன். குடத்தில் வைத்திருந்தது அமுதம்!" என்றார். தமக்காக இடையனாக வந்த பெருமாளின் உண்மை உருவைக் காணவிரும்பிய உதங்கர், மஹாவிஷ்ணுவைத் துதிக்க, பெருமாளும் வெண்ணெய்க் குடத்துடன் இத்தலத்தில் தரிசனம் தந்தார்.
சுவாமி கருவறையில் அமர்ந்த கோலத்தில் தரையில் வெண்ணெய் பானையை வைத்து அதன் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரை பானையுடன் தரிசனம் செய்தால் குடும்பம் வெண்ணெய் போல மகிழ்ச்சி பொங்கும்படியாக சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. குடத்துடன் ஆடிக்கொண்டு வந்தவர் என்பதால் இவரை “குடமாடு கூத்தன்’ என்கின்றனர். கோவர்த்தன மலையை குடையாக பிடித்துக் கொண்டு மக்களைக் காப்பாற்றிய கண்ணன் என்பதாலும் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக கருதலாம். உற்சவர் சதுர்புஜ கோபாலன் என்ற பெயரில் அருளுகிறார்.திருமங்கையாழ்வார் இவரை அசுரர்களை அழித்து அமுதம் எடுத்தது, மகாபலியை அடக்கியது, ராவணனை சம்ஹாரம் செய்தது என அவரது புகழ் பாடி பகைவர்களை அழித்து நல்வழி காட்டுபவர் என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார்.
காலை 7.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை