கோவிந்தராஜப் பெருமாள், திருச்சித்திரகூடம் (சிதம்பரம்)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் திருச்சித்திரகூடம் என்னும் சிதம்பரம், ஒரு வைணவத் தலமும் சிவஸ்தலமும் ஆகும். சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
மூலவர் : கோவிந்தராஜப் பெருமாள்,
உத்ஸவர் : தேவாதிதேவன், பார்த்தசாரதி, சித்திரக்கூடத்துள்ளான் என்ற மற்றொரு உத்ஸவரும் உபயநாச்சிமாருடன் சேவை சாதிக்கிறார்.
தாயார் : புண்டரீகவல்லி
தீர்த்தம் : புண்டரீக தீர்த்தம்
விமானம் : சாத்விக விமானம்
மங்களாசாசானம் : குலசேகராழ்வார், 11 –பாசுரங்கள், திருமங்கையாழ்வார் - 32 பாசுரங்கள்
தலச் சிறப்புகள் : மூலவர் யோக சயனத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். கிருஷ்ணாரண்யம் என்று அழைக்கப்படும் அரண்யத்தின் மத்தியப் பகுதியில் அழகுற அமைந்துள்ள இத்திருத்தலத்தின் எல்லைகள் காவிரிக்கு வடக்காகவும், வெள்ளாற்றிற்க்கு தெற்காகவும், கீழ்கடலுக்கு மேற்காகவும், ஸ்ரீமுஷ்ணத்திற்குக் கிழக்காகவும் அமைந்துள்ளது.
சிவபெருமானும், தில்லை அம்மனும் ஆடிய நடனத்தைக் காண இங்கு வந்த மகாவிஷ்ணு இங்கேயே ஸேவை சாதித்ததாக ஐதீகம். நடராஜர் கோயிலுக்குள்ளே அமைந்திருந்தாலும் தனி இராஜகோபுரம், கொடிமரம் என எல்லாம் அமைந்துள்ளன. மூலவர் 'கோவிந்தராஜன்' என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிடந்த திருக்கோலம், யோக சயனத்தில், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் 'தேவாதிதேவன்' அமர்ந்த கோலத்தில் ஸேவை. பதஞ்சலி முனிவர், வியாக்ரபாத முனிவர், கண்வ மகரிஷி, தில்லை மூவாயிரவர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
கலிங்க நாட்டு மன்னன் சுவேரனுக்கு நெடுங்காலம் புத்திரபாக்கியமின்றியிருக்க, சுவேரனும் அவனது மனைவியும் கடுந்தவம் புரிந்தனர். ஆதன் பயனாக காவேரியே அவர்களுக்குக் குழந்தையாகப் பிறந்தாள். பிறகு அகத்தியனால் காவேரி நதியாக ஆன பின்பு காவேரியின் பெற்றோர்கள் அதில் நீராட வரும் போது, உன்னைப் போல் நாங்களும் சாகாவரம் பெற வேண்டுமென்று கேட்க, அதற்கு வரம் அளிக்கும் சக்தி பெருமாள் ஒருவனுக்குத்தான் உண்டெனவும், எனவே அருகாமையில் இருக்கும் தில்லைவனம் சென்று கோவிந்தா என்று கூறித் தவமிருக்குமாறு காவேரி கூறியனுப்பினாள். அவ்வண்ணமே தவமிருக்க எம்பெருமான் பிரத்தியட்சமாகி அவ்விருவருக்கும் மோட்சமளித்தார். ஆதலால் இப்பெருமாள் ‘கோவிந்தராஜன்’ ஆனார். ஒரு சமயம் பரமசிவனும் பார்வதியும் மனக்களிப்புடன் ஒருவரை ஒருவர் விஞ்சி நடனம் ஆட, முடிவில் சிவபெருமான் வலதுகாலைத் தூக்கி, இடது காலினால் தரையில் ஊன்றி ஆடினார். இறுதியில் நடராசனே வென்றார். ஆதனால் பார்வதிதேவி காளியாக தில்லைவனத்தைச் சுற்றி தாண்டவ மாடி அவ்வனத்திற்கு தென்பால் காவல் தெய்வமாக நின்றார். அதன்பிறகே சிவனும் திருமாலும் சேர்ந்தே இக்கோயிலில் அருள்பாளிக்கிறார்கள்.
இந்த கோயில் நடராஜர் கோயிலுக்குள் அமைந்திருந்தாலும், தனிக்கோயிலுக்குண்டான கர்ப்பக்கிரகம், ராஜகோபுரம், கொடிமரம், மடைப்பள்ளி என்று எல்லாம் அமைந்துள்ளன. பல ஊர்களின் பஸ் வசதிகள் உண்டு. மேலும், தங்கும் வசதிகளும், உணவு விடுதிகளும் அதிகமாக காணப்படும் ஒரு பெரிய நகரமாகும். மேல வீதியில் கோதண்டராமர் சந்நிதியும், ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் சந்நிதியும், ஸ்ரீமந்நாதமுனிகளின் அவதாரஸ்தலமாகிய காட்டுமன்னார் கோயில்களும் உள்ளன.
அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு