உலகளந்த பெருமாள், திருநீரகம்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய காஞ்சிபுரத்தில் இருக்கும் உலகளந்த பெருமாள் கோயில் பிரகாரத்திலேயே அமைந்து இருக்கிறது.
விமானம் : ஜகதீச்வர விமானம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் - 1பாசுரம்
திருத்தலச் சிறப்புகள் : நீரகமும் உலகளந்தான் (திருஊரகம்) சந்நிதிக்குள்ளாகவே இருக்கிறது. எம்பெருமான் நீர்மைத் தன்மையானவன். நீரிடையே மீனாக அவதாரம் எடுத்தவன், நீர்ப்பாயலை இருப்பிடமாகக் கொண்டவன். பிரளய காலத்தின் போது பூவுலகு நீரால் சூழ ஆலிலை மேல் மிதப்பவன், எனவே அவனை நீரகத்தான் என்றார் திருமங்கையாழ்வார்.
“நீரகத்தாய்” என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “திருநீரகம்” முன் காலத்தில் எங்கிருந்ததென இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார். பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர் மேல் அமர்ந்து அதையே இருப்பிடமாக கொண்டவன். பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, அதன் மீது ஆலிலை கண்ணனாக மிதப்பவன். எனவே பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால் இந்த தலம் எங்கிருந்தது என்று மட்டும் அவர் யாருக்கும் சொல்லவில்லை.
தல வரலாறு : “கார்வானத்துள்ளாய் கள்வா’ என இத்தலத்து பெருமாளின் பெயரையும் சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம். உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் இருக்கும் திருநீரகம், திருக்காரகம் ஆகிய இரண்டிற்கும் இல்லாத தனிச்சிறப்பு பெற்றது இத்தலம். “நீரகத்தாய்”, “காரகத்தாய்’ என திவ்ய தேசத்தை மட்டும் மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், இதை மங்களாசாசனம் செய்யும் போது மட்டும் பெருமாளின் பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்து விட்டார். திருங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்தக்கோயிலில் உள்ள திருநீரகம், திருக்காரகம் ஆகிய இந்த மூன்று தலங்களும் “திருஊரகத்துடன்’ வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் விஷ்ணு. அவன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வந்தார். மூன்றடி நிலம் யாசகம் கேட்டார். பலியும் சம்மதித்தான். அப்போது அவர் திரிவிக்ரம மூர்த்தியாக உயர்ந்து ஓரடியால் மண்ணையும், மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து விட்டு மூன்றாவது அடியை மகாபலியின் சிரசில் வைத்தார். அவன் பாதாள உலகைச் சென்றடைந்தான். தானம் வாங்க வந்த பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தைக் காண முடியாமல் போய் விட்டதே என வருந்தி, அங்கேயே தவத்தில் ஆழ்ந்தான். அவனுடைய தவத்திற்கு இணங்கி, சத்திய விரத க்ஷேத்திரம் என்னும் காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாளாக உயர்ந்து நின்று காட்சியளித்தார். அத்தலமே ஊரகம் என்னும் உலகளந்த பெருமாள் கோயில்.
மார்க்கண்டேயர் எம்பெருமானிடம் பிரளயகாலத்தில் மேற்கொள்ளும் அவதாரத்தை தனக்கு காட்டியருள வேண்டுமென தவமிருந்தார். அவருக்கு இத்தலத்தில் உலகம் அழியும் போது தான் எடுக்கவிருக்கும் ஆல இலை திருக்கோலத்தைக் காட்டி அருளினார். வேதங்களுக்கு தலைவனாக விளங்குகின்ற எம்பெருமானை மார்க்கண்டேயருக்கு ஆலிலை மேல் மிதக்கும் கோலத்தைக் காட்டிக் கொடுத்த நீரகத்தானை என் நெஞ்சகத்தினில் நிறுத்தி நிலைபெற்றேனே என்றும், வேதங்களுக்கு தலைவனாக திகழ்ந்து என் நெஞ்சகத்தே வாழும் நீரகத்தானே நீ எவ்வாறு மார்க்கண்டேயனுக்கு பிரளயகால ஆல இலை திருக்கோலத்தைக் கொடுக்கிறாயோ என்று பிள்ளைப் பெருமாளையங்கார் ஆச்சரியப்படுகிறார்.